‘புர்கா அணியாமல் குட்டை ஷார்ட்ஸ் போடுவதா’ - சமூகத் தடைகளை தகர்த்த குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன்!
பெண்கள் பலவீனமானவர்கள், உடலில் காயம் ஏற்படும், யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்பன போன்ற எதிர்மறை கருத்துகள் குத்துசண்டையில் பெண்களின் பங்களிப்பைக் குறைத்து வந்த நிலையில் இவற்றை எதிர்த்துப் போராடி தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன்.
குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு அப்போது 13 வயதிருக்கும். Urban Games நடைபெற்றுக்கொண்டிருந்த விளையாட்டு அரங்கத்தில் நிகாத்தும் அவரது அப்பாவும் நடந்து கொண்டிருந்தனர்.
அங்கு குத்துச்சண்டை நடந்து கொண்டிருந்தது. நிகாத் தனது அப்பாவிடம், “இந்த விளையாட்டை ஏன் ஆண்கள் மட்டும் விளையாடுகிறார்கள். ஒரு பெண்கூட இல்லையே?” எனக் கேட்டுள்ளார்.
“குத்துச்சண்டையில் பெண்கள் பங்கேற்காமல் இல்லை. ஆனால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். பொதுவாக பெண்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். குத்துச்சண்டையில் பங்கேற்றால் உடலில் காயம் படும் என்பதால் பலர் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவதில்லை,” என பதிலளித்திருக்கிறார்.

“பெண்கள் பலவீனமானவர்கள் என்பதே பொதுச்சமூகத்தின் கண்ணோட்டமாக இருந்தது. குத்துச்சண்டையில் ஈடுபட்டால் அவர்களுக்கு திருமணம் நடக்காது என்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது. இதுபோன்ற காரணங்களைக் கேட்டதுமே நான் குத்துச்சண்டையில் பங்கேற்பது என முடிவு செய்துவிட்டேன்,” என்று நிகாத் நினைவுகூர்ந்தார்.
நிகாத் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தடகள பயிற்சியில் இருந்தார். பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்.
நிகாத்தின் அப்பாவிற்கும் விளையாட்டில் அதீத ஈடுபாடு உண்டு. நிகாத்திற்கு பயிற்சியளிக்க நகரில் யாரும் இல்லை என்பது தெரிந்ததும் சவுதி அரேபியாவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். நிகாத்திற்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். எப்படியாவது தன் மகளின் கனவை நிறைவேற்றவேண்டும் என்பது மட்டுமே இவரது இலக்காக இருந்தது.
தடகளம் - குத்துச்சண்டை
Urban Games விளையாட்டு அரங்கை ஒருமுறை பார்வையிட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடலும் நிகாத்தின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிட்டது.
கனவு கண்டது உண்மையென்றாலும் குத்துச்சண்டையில் மிகக்கடினமான சவால்களைக் கடந்தே கால் பதித்துள்ளார் நிகாத்.
“என்னுடைய மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியில் பங்கேற்ற ஒரே பெண் நான் மட்டுமே. ஆண்களுடன் பயிற்சி எடுத்துக்கொண்டபோது பலர் என்னைக் கடுமையாக தாக்கியுள்ளனர்,” என்கிறார் நிகாத்.
நிகாத் குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக்கொண்டதும் சுற்றியிருந்த அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பின.
“என் உறவினர்கள் கேள்வி கேட்டார்கள். அப்பாவின் நண்பர்களும் கேட்டார்கள். பெண் குழந்தையை எதற்காக குத்துச்சண்டை பயிற்சியில் சேர்க்கவேண்டும்? உடம்பெல்லாம் காயம் ஏற்படுமே? எதற்காக இந்த முடிவு? எப்படி அனுமதியளித்தீர்கள்? விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் வேலை கிடைக்கும்தானே? உங்கள் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள யார் முன்வருவார்கள்? இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன,” என்று பகிர்ந்துகொண்டார்.
அத்துடன் முடிந்துவிடவில்லை. மத ரீதியான எதிர்ப்புகளும் எழுந்தன.
“புர்கா அணியவேண்டிய முஸ்லீம் பெண்கள் எப்படி குட்டையான ஷார்ட்ஸ் அணியமுடியும் என்கிற கேள்வி வேறு. ஆனால், என் அப்பா எந்த ஒரு கேள்வியையும் காது கொடுத்து கேட்கவில்லை. முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனக்கும் அதையே அறிவுறுத்தினார். குத்துச்சண்டையில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும் என்றார். ’நீ பதக்கங்களை வெல்லும்போது, உன்னைப் பார்த்து இப்படிக் கேள்வி கேட்ட அனைவரும் உன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வருவார்கள், பார்,” என்று கூறி மனதில் நம்பிக்கையை விதைத்ததாக நிகாத் பகிர்ந்துகொண்டார்.
விளையாட்டுப் பிரிவில் நிகாத் கால் பதித்து ஓராண்டு கடந்திருக்கும். 2011-ம் ஆண்டு தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில் தங்கம் வென்றார். துருக்கியில் நடைபெற்ற AIBA பெண்களுக்கான ஜூனியர் போட்டி மற்றும் இளம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். துருக்கி குத்துச்சண்டை வீராங்கனை உல்கு தெமிரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இவைதவிர சமீபத்தில் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை 2019 போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 73வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற Busenaz Cakiroglu வீராங்கனையை மிகச்சிறப்பாக எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை டெட்யானா காப்பை எதிர்த்துப் போட்டியிட்டு தங்கம் வென்றார்.

“இந்திய தேசியக் கொடி வானில் பறக்க, தேசிய கீதம் முழுங்க, மேடையில் ஏறுவது பெருமிதம் நிறைந்த தருணமாக இருக்கும்,” என்கிறார்.
மேரி கோம் – மிகப்பெரிய ஊக்கம்
ஒலிப்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ள பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் நிகாத் ஒப்பிடப்படுவதுண்டு.
“மேரி கோம் 48-டிவிஷன் பிரிவில் போட்டியிடுகிறார். நான் ஃப்ளைவெயிட் பிரிவில் போட்டியிடுகிறேன். ஒலிப்பிக் விளையாட்டின் விதிப்படி அவர் ஃப்ளைவெயிட் பிரிவில் போட்டியிடவேண்டும். அவரை சந்தக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சோதனை விளையாட்டில் நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். அவர் மிகப்பெரிய உந்துதலாக இருப்பவர். என்னுடைய தவறுகளில் இருந்து நான் கற்றுக்கொண்டு முன்னேறியிருக்கிறேன். அடுத்து 2024 பாரீஸ் போட்டிகளை எதிர்நோக்கியிருக்கிறேன்,” என்கிறார்.
2017-ம் ஆண்டு நிகாத்திற்கு தோள்பட்டை மூட்டு இடப்பெயர்வு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவரது பயிற்சி ஓராண்டு வரை தடைபட்டது.
“அத்தனை பெரிய பிரச்சனை வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பயிற்சி தடைபட்டது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் மன வலிமையுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். மோசமான சூழல்களிலும் நேர்மறையான அம்சங்களை கவனிக்க என் உளவியல் ஆலோசகர் ஊக்குவித்தார். மேடையில் நின்றுகொண்டு ஒலிம்பிக் பதக்கம் பெறுவதைக் கற்பனை செய்து பார்க்கச் சொன்னார். நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே ஆவோம் என்பதுதான் உண்மை. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார்.
ஊரடங்கு சமயத்தில் தொழில்முறை பயிற்சி கிடைக்காமல் போனது. எனவே நிகாத் Welspun Super Sport Women Program (WSSW) நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பயிற்சி பெற இந்நிறுவனம் உதவியுள்ளது. கடினமான சூழலில் WSSW அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறார் நிகாத்.
மே மாதம் நடக்கவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காகவும் 2024-ம் ஆண்டு பாரீஸில் நடக்கவிருக்கும் போட்டிகளுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்வதில் நிகாத் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

