ஆட்டிசம் ஒரு தடையல்ல என நிரூபித்துள்ள மாடல்!
பிரனவ் பக்ஷி இளம் வயதிலேயே ஆட்டிசத்தை தனது சூப்பர்பவராக மாற்றிக்கொண்டு மாடலிங்கில் கவனம் செலுத்துகிறார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு 160 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இது ஒரு நரம்பியல் குறைபாடு. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பொதுவெளியில் பேசுவதில் சிரமத்தை சந்திப்பார்கள். எளிதில் யாருடனும் பழகமாட்டார்கள் அல்லது மற்றவர்களுடன் அதிக வெளிப்படையாக பழகுவார்கள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் குறிப்பிட்ட பகுதிகளில் சில பிரச்சனைகள் இருக்கலாம். குறிப்பிட்ட விஷயங்களில் அதிக ஈடுபாடும் இருக்கலாம். அவ்வாறு தனது திறனை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு உந்துதலளிக்கிறார் டெல்லியைச் சேர்ந்த பிரனவ் பக்ஷி.
19 வயதான இவர் இந்தியாவில் ஆட்டிசம் பாதிப்புடன்கூடிய முதல் மாடலாக உருவாகி சமீபத்தில் தலைப்புச்செய்திகளில் இடம்பெற்றுள்ளார். இவர் சில பிரபல ஃபேஷன் லேபிள்களுக்காக ரேம்ப் வாக் செய்துள்ளார்.
இவரது மாடலிங் திறன் குறித்து இவரது அம்மா அனுபமா பக்ஷி Efforts for Good உடன் உரையாடும்போது,
“பிரனவ் அதிக சிரத்தையின்றி ரேம்ப் வாக் செய்வதையும் ஃபோட்டோஷூட்களுக்கு நிற்கும் விதத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எந்தவித முன் அனுபவமும் இன்றி உடலில் உள்ள குறைபாடுகளை எதிர்த்துப் போராடி இவ்வாறு செயல்படுகிறார். அவரை நினைத்து மிகவும் பெருமைகொள்கிறேன். என்றென்றும் சிறந்த சூப்பர்மாடலாக இருக்கவேண்டும் என்பதே பிரனவின் விருப்பம்,” என்றார்.
பிரனவ் தனது இன்ஸ்டாகிராமில், “ஆட்டிசம் என்னுடைய சூப்பர்பவர்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரனவிற்கு 40 சதவீத குறைபாடு உள்ளது. இவருக்கு பிறர் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் எகோலாலியா எனப்படும் பிரச்சனையும் பதட்டமும் இருக்கும். ஆனால் அவரது இலக்கை அடைய இவை எதுவும் தடையாக இருக்கவில்லை என ’நியூஸ் 18’ தெரிவிக்கிறது.
சமீபத்தில் பெங்களூருவின் யூபி சிட்டி மாலில் அவரது முதல் ரேம்ப் வாக் வீடியோவை பிரனவ் பதிவிட்டிருந்தார். அதில்,
”வீடியோவின் தரம் சிறப்பாக இல்லையெனில் மன்னிக்கவும். இது பெங்களூருவில் 2016-ம் ஆண்டு 'Walk with A Difference'-கான எனது முதல் ரேம்ப் வாக். மிஸ்டர் சார்மிங் என்கிற பட்டம் எனக்குக் கிடைத்தது. ரேம்ப் வாக்கில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அந்த சமயத்தில் Silento-வின் ’வாட்ச் மீ’ எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது. அந்த பாடலுக்கு நான் முதல் சுற்றில் நடனம் ஆடினேன். என்னுடைய சகோதரி எனக்கு சில நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்தார். யூபி சிட்டி மாலுக்குச் செல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார்.
ஆனால் பிரனவிற்கு எப்போதும் அனைத்தும் எளிதாக நடந்துவிடவில்லை. அவர் பிறக்கும்போது ஆரோக்கியமாகவே பிறந்தார். பிறந்து இரண்டாண்டுகள் வரை ஆட்டிசம் பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை. திடீரென்று நிலை மோசமாகி அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அனுபமா கூறுகையில்,
”அந்த சமயத்தில் அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்றே பிரார்த்திப்பேன். அவரும் அனைத்தையும் எதிர்கொண்டு இன்று இந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளார். மாடலிங் மட்டுமல்லாது அவருக்கு நடனத்தில் ஈடுபாடு அதிகம். அபாரமான இசை ஞானம் உள்ளது. ஃபோட்டோகிராஃபி சார்ந்த திறனும் இருப்பதால் துல்லியமாக படம்பிடிக்கிறார். நடு இரவில் தனது விருப்பப்படி நடனம் ஆடுவதைப் பார்க்கலாம். இதுதான் அவர் ரேம்ப்பில் நடக்கும்போது தாளத்திற்கு ஏற்ப நடக்க உதவியுள்ளது என நினைக்கிறேன்,” என Efforts for Good-க்கு தெரிவித்தார்.
பிரனவிற்கு தெரபி நடந்தபோதுதான் அவர் தனக்குள் மாடலிங் திறன் இருப்பதைக் கண்டறிந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு படைப்பாற்றல் சிகிச்சைக்காக பிரனவ் ஒரு தியேட்டர் வொர்க்ஷாப் சென்றதாக அனுபமா நினைவுகூர்ந்தார்.
”அதை ஏற்பாடு செய்தவர்கள் ரேம்ப் வாக் குறித்த தகவல்களை அவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு அதில் ஆர்வம் அதிகமானது,” என்றார்.
அதன்பிறகு அனுபமா பிரனவிற்காக நூற்றுக்கணக்கான மாடலிங் ஏஜென்சிக்களுக்கு இமெயில் அனுப்பியிருந்தார். துரதிர்ஷ்ட்டவசமாக பலர் பதிலளிக்கவில்லை.
பிரனவின் மாடல் ஏஜென்சி நிறுவனர் மற்றும் சூப்பர் மாடலான நிஞ்சா சிங் பிரனவின் மன உறுதி குறித்து பகிர்ந்துகொள்ளும்போது,
”பிரனவ் சுவாரஸ்யமான நபர் என்பதை அவரை சந்தித்தபோது தெரிந்துகொண்டேன். மாடலிங் அவருக்கு புதிது என்றபோதும் அவர் அது தொடர்பாக சிறப்பாகவே அறிந்திருந்தார். மாடலிங் மீது அவருக்கு அதீத ஆர்வம் உள்ளது. ஃபேஷன் என்பது ஆடை அல்லது ஸ்டைல் சார்ந்ததல்ல. அது ஒரு கலை. இதில் சிறந்த கலைஞராக விளங்கத் தேவையான அனைத்து திறனும் பிரனவிடம் உள்ளது,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA