மோடி ட்விட்டரின் ஒருநாள் அட்மினாகிய தமிழகப் பெண் சினேகா மோகன்தாஸ் யார்?
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்ற தமிழச்சி சினேகா, அப்படி என்ன சாதனை செய்துள்ளார்?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி பெண்களைக் கொண்டாடும் வகையில் உலகெங்கும் ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. மகள், தாய், தங்கை, மனைவி, தோழி, மேலதிகாரி... என தத்தமது வாழ்வில் பல்வேறு வடிவங்களில் உடன் பயணித்து பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் பெண்களை ஆணுலகம் வாழ்த்துகளால் அலங்கரித்துக் கொண்டாடி கொண்டிருக்க, நாட்டின் பிரதமர் வித்தியாசமான முறையில் பெண்களை கவுரவித்துள்ளார்.
மகளிர் தினத்தன்று ஒரு நாள் மட்டும் பிரதமரின் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் என சகல சமூக வலைதள கணக்குகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை 7 பெண்களிடம் வழங்கி இருந்தார். அதில், பிரதமரின் சமூக வலைதளத்தில் முதலாவதாய் லாகின் செய்து பதிவு செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ்.
கடந்த செவ்வாய்கிழமை,
‘இந்த மகளிர்தினத்தன்று உத்வேகம் அளிக்கும் வாழ்க்கையையும், பணியையும் மேற்கொண்டு வரும் பெண்களிடம் எனது அனைத்து சமூகவலைதள கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறேன். அவர்களின் வாழ்க்கைக் கதை லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? அப்படியெனில், #SheInspiresUs என்ற ஹேஷ்டெக்கை பயன்படுத்தி அவர்களது கதைகளைப் பகிரவும்,” என்று அறிவிப்பு ட்வீட்டை பதிவிட்டிருந்தார், பிரதமர்.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்ந்துகொண்டு தனது சமூக ஊடகக் கணக்குகள் மூலம் உங்களுடன் உரையாடுவார்கள் என்றதுடன் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நேற்று காலை விடைப்பெற்றார் பிரதமர் மோடி.
7 சாதனைப் பெண்களும் அவர்களது கதையை பகிர்ந்து ட்விட்டராட்டிகளுடன் உரையாடினர். அதில் முதலாவதாய் தன்னைப் பற்றிய கதையை பதிவிட்டார் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபுட் பேங்க் இந்தியா (உணவு வங்கி) என்ற அறக்கட்டளையின் நிறுவனர் சினேகா மோகன்தாஸ்.
‘பட்டினியில்லா தேசத்தை உருவாக்குவோம்’ என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ‘ஃபுட் பேங்க் இந்தியா’, ஏழை மக்களுக்குச் சூடான சத்தான உணவை நித்தம் வழங்கும் அரும்செயல் புரிந்து வருகிறது.
‘ஹலோ நான் சினேகா மோகன்தாஸ், இல்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்ட எனது தாயால் ஈர்க்கப்பட்டவள். இதன் காரணமாக ஃபுட்பேங்க் இந்தியா என்ற முயற்சியை தொடங்கினேன்,’ எனும் கேப்ஷனுடன், அவரது பயணத்தை விளக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில்,
“வணக்கம், நான் சினேகா மோகன்தாஸ், 'ஃபுட் பேங்க் இந்தியா' அமைப்பின் நிறுவனர். 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முன்பு நான் ஃபுட் பேங்க் இந்தியாவை தொடங்கினேன். ‘பட்டினியில்லா நாடு, பசிக்கு எதிராகப் போராடு’ என்பதே அதன் நோக்கம். எனது தாத்தாவின் பிறந்தநாள் மற்றும் சில சிறப்பான தினங்களில் குழந்தைநலக் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு எனது அம்மா உணவு வழங்குவார். அங்கிருந்து தான் இவையனைத்தும் துவங்கியது. உலகமே உற்று நோக்கும் ஃபேஸ்புக்கில் ‘ஃபுட் பேங்க் இந்தியா’ எனும் பெயரில் பக்கத்தை தொடங்கினேன்.
வருங்கால தலைமுறையை ஃபேஸ்புக் மூலம் இணைத்து அவர்களை தளத்தில் இறங்கவைக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். நிறைய பேருக்கு உத்வேகம் அளித்ததுடன், அவர்களது மாநிலங்களிலும் எளியோருக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களுக்கு உதவி செய்ய விரும்புவர்களிடமிருந்து பணமாகப் பெறாமல் பொருள்களாகப் பெற்று நாங்களே சமைத்து அனைவருக்கும் வழங்கி வருகிறோம்.
சமைப்பது தொடங்கி, பாத்திரம் துலக்குவது, சமைத்த உணவுகளை பசியில் காத்து கொண்டிருப்பவர்களுக்கு விநியோகிப்பது வரை எல்லா வேலையும் தன்னார்வலர்களே செய்கின்றனர். உதவும் மனப்பான்மை கொண்ட அவர்களுக்கே அனைத்து கிரேட்டிட்களும். ‘வெற்றியை ஒருபோதும் பிடித்து வைத்து கொள்ளாதீர்; வெற்றியை பகிர்ந்து கொள்ளுங்கள்’ இது தான் என் வெற்றியின் மந்திரம்,” என்று பேசி முடித்துள்ளார்.
தொடர்ந்து ட்விட்டராட்டிகளுடன் உரையாடிய அவர்,
“பசியை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப நான் பிரதமரின் ட்விட்டரரை பயன்படுத்திக் கொண்டேன். நீங்களும் எனக்கு உதவுவீர்களா? அது ரொம்ப சிம்பிள். ஏழைகளுக்கு உணவளிக்கவும், உணவு வீணாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று மற்றொரு ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு ட்விட்டராட்டி, ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்ட் கேட்க அதற்கு, ‘புதிய இந்தியா. லாகின் செய்ய முயற்சியுங்கள்’ என்று பதிலளித்துள்ளார்.