திரையில் காமெடி நடிகர்; நிஜத்தில் மக்களின் ஹீரோ - உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி!
குட்டி நாடாக இருந்தாலும் ரஷ்யாவை துணிவுடன் எதிர்க்கும் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி யார் என தேட ஆரம்பித்தனர். அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் 21 ஆம் நூற்றாண்டிற்கான சாத்தியமற்ற ஹீரோவாக மாறி இருக்கிறார் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி.
யார் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி என்பது அறிந்து கொள்ளலாம்...
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 5வது நாளாக நீடித்து வருகிறது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட வேண்டுமென ரஷ்யாவை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய படையெடுப்பிற்கு பயந்து உக்ரைன் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கீவ் நகரில் உள்ள அதிபர் குடியிருப்பு வளாகப் பகுதியில் தானே எடுத்த செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நான் இங்குதான் இருக்கிறேன். நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாப்போம்," எனத் தெரிவித்திருந்தார்.
இதுவரை உக்ரைன் போரைப் பற்றி சிந்தித்து வந்த உலக மக்களின் கவனம் குட்டி நாடாக இருந்தாலும் ரஷ்யாவை துணிவுடன் எதிர்க்கும் இந்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி யார் என தேட ஆரம்பித்தனர். அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
காமெடி நடிகர் டூ அதிபர்:
- உக்ரைன் சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தபோது க்ரிவி ரிஹில் நகரில், ரஷ்ய மொழி பேசும் யூத பெற்றோருக்கு ஜனவரி 25, 1978 அன்று ஜெலன்ஸ்கி பிறந்தார். க்ரிவி ரிஹில் முதன்மையாக ரஷ்ய மொழி பேசும் தொழில்துறை நகரமாகும்.
- ஜெலன்ஸ்கி, கீவ் தேசிய பொருளாதார பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கான பட்டம் பெற்றவர். மாணவனாக இருந்த காலத்திலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் பல நாடகங்களில் நடித்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக வலம் வந்தார்.
- 2003 ஆம் ஆண்டு ‘க்வார்டல் 95’ என்ற குழுவை உருவாக்கினார். அதன் மூலம் நாடு முழுவதும் பயணித்து உக்ரைனை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பது குறித்து பேசினார். ஆனால், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சினிமாவிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார். லவ் இன் தி பிக் சிட்டி (2009) மற்றும் ஜெவ்ஸ்கி வெர்சஸ் நெப்போலியன் (2012) போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
- ‘சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள்’ (Servant of the People) 2015ம் ஆண்டு முதல் 3 சீசன்களாக ஒளிபரப்பான டி.வி. நிகழ்ச்சியில் ஜெலென்ஸ்கி நடித்தார். எதிர்பாராதவிதமாக ஒரு வரலாற்று ஆசிரியர் அதிபர் ஆனால் என்ன ஆகும் என்பதே கதைக்களம். இந்தத் தொடர் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஜெலன்ஸ்கிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
- அரசியல் குறித்து ஜெலன்ஸ்கி நடித்த ‘சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள்’ நாடகத்தால் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஒருபுறம் ரசிகர்களிடையே ஆதரவும், மறுபுறம் அரசியல்வாதிகளிடம் இருந்து மிரட்டலும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், அதை கண்டு அவர் பயப்படவில்லை. அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் நையாண்டிகள் மூலமாகவே பதிலடி கொடுத்தார்.
- ஒருகட்டத்திற்கு மேல் தீவிர அரசியலில் குதிக்க முடிவெடுத்த விளாடிமீர் ஜெலன்ஸ்கி ‘சர்வண்ட் ஆப் தி பீப்பிள்' என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். ‘ரஷ்யாவுக்கு நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை’. எங்கள் நாட்டிற்கு நல்லது செய்ய நினைத்தால் ஆதரவு; அடிமைப்படுத்த நினைத்தால் எதிர்ப்பு என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தில் இறங்கினார்.
- அரசியல் முன் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கி கடந்த 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, 73 சதவீத வாக்குகளுடன் உக்ரைன் அதிபரானார். 2014 முதல் ஆட்சியில் நீடித்து வந்த ரஷ்ய ஆதரவு போரோஷென்கோவௌ தோற்றகடித்தது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
- வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த 91 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் அதிபர்கள், அதிபர்கள், பிரபலங்களின் ஆவணங்கள் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியானது. சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரும் இடம் பெற்றது.
- பள்ளித்தோழியும், கட்டிடக் கலை நிபுணருமான ஒலேனாவை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். உக்ரைனில் தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகள் தன்னுடன் இருப்பதாகவும், வெளிநாட்டிற்கு தப்பியோடவில்லை என்றும் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்கு விளாடிமீர் ஜெலன்ஸ்கி ஆற்றும் உரைகள் உற்சாகமும், வீரமும் தந்து போர்க்களத்தில் ஆயுதங்களுடன் சண்டையிட உத்வேகம் அளித்து வருகின்றன.
ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனான இருந்து அதிபரான நபர், போர்க்காலத்தில் தனது நாட்டை வழிநடத்துவதை கண்டு உலக நாடுகளே ஆச்சர்யமடைந்துள்ளன.