தங்கள் குழந்தைக்கு ‘கொரோனா’, ‘லாக்டவுன்’ என பெயரிட்ட விநோத பெற்றோர்கள்!
உலகமே கண்டு பயப்படும் 2 பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைத்துள்ளனர் இரு பெற்றோர். யார் இவர்கள்?
கொரோனா, லாக்டவுன் இரண்டும் இனி எப்போதுமே உலகில் திரும்ப நிகழக்கூடாது என்று பலரும் பிரார்த்திக்க இந்த இரண்டையும் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும் விநோத ஆசையை சிலர் முயற்சித்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் குகுந்து கிராமத்தில் கடந்த திங்கட்கிழமையன்று பிறந்த ஆண்குழந்தைக்கு அதன் பெற்றோர் ‘லாக்டவுன்’ என பெயரிட்டுள்ளனர்.
ஏன் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தார்கள் என்று குழந்தையின் தந்தை பவன் கூறுகையில்,
“என் குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்திருக்கிறான். கொரோனா என்ற கொள்ளை தொற்றுநோய் மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான சமயத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால் எங்களின் குழந்தைக்கு 'லாக்டவுன்' பெயர் வைக்க முடிவு செய்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.
தனது மகனின் பெயர் தன்னலம் இன்றி தேசிய நலனோடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் குழந்தையை யாரும் பார்க்க வரவேண்டாம் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளோம். மேலும் குழந்தைக்கான சடங்குகள் அனைத்தையும் ஊரடங்கு நீக்கம் செய்யப்பட்ட பிறகு செய்து கொள்ளலாம் என்று அனைத்தையும் ஒத்திவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதே போன்று கடந்த வாரம் கோரக்பூரில் ‘Janata Curfew’ கடைபிடிக்கப்பட்ட தினத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தையின் உறவினர் நிதிஷ் திரிபாதி கொரோனா என்ற பெயரை குழந்தைக்குத் தேர்வு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கொரோனா கொடிய வைரஸாக இருந்தாலும் உலகை ஒற்றுமைபடுத்தி இருக்கிறது என்பது அவரின் கூற்று.
குழந்தையின் தாய் ராகினி திரிபாதியிடம் அனுமதி பெற்று இந்தப் பெயரை சூட்டியதாக கூறும் திரிபாதி,
“இந்த வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. உலகில் பலரை கொன்று குவித்துள்ளது. அதே சமயத்தில் நம்மில் பலருக்கு நல்ல பழக்கங்களையும் கற்றுத் தந்துள்ளது, நம்மில் பலரை ஒன்றிணைத்துள்ளது. தீமையை எதிர்த்து போராடுவதற்கு மக்களுக்கான ஒற்றுமைக்கான அடையாளமாக இருக்க இந்த குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் வைத்தேன்.” என்றார்.
கொரோனா என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தை டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ளது. குழந்தைகளின் பெயர் காலம்காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்று தேடித்தேடி நியூமராலஜி, அஸ்ட்ராலஜி பார்த்து பெயர் வைக்கும் பெற்றோர் மத்தியில் ‘கொரோனா’, ‘லாக்டவுன்’ என்று பெயரிட்டிருக்கின்றனர் இந்தப் பெற்றோர்.
உங்க மைண்ட் வாய்ஸ் தான் எங்களுக்கும், உண்மையிலேயே இதற்கான அர்த்தம் புரிந்து தான் தெரிஞ்சு தான் இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்தார்களா?
கட்டுரையாளர் : கஜலெட்சுமி