ட்ரோன்கள் மூலம் மருந்து பொருட்கள் டெலிவரி: விரைவில் சென்னையில் தொடக்கம்!
விமான போக்குவரத்து அனுமதி கிடைத்தவுடன் சேவை தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்களும் இந்த தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள வீடுகளுக்கு இலவசமாக ட்ரான் மூலம் மருந்து கொண்டு செல்லும் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமான கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனம் இந்த சேவையை வழங்க இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரான் தயாரிப்பு குழு,
"கொரோனா விழிப்புணர்வு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தங்கள் நிறுவன ட்ரோன்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது ட்ரோன்கள் 3 விதமான செயல்பாடுகளைக் கொண்டது,” என்றார்.
”முதல்வகை ட்ரோன்கள் ஒலிபெருக்கிகள் பொருத்தத்தப்பட்டு காவல்துறையுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. மற்றொரு வகை ட்ரோன்களில் இஸ்ரோ மையத்துடன் இணைந்து கொரோனா சிகிச்சை மையங்களுக்குத் தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகிறோம். தங்கள் நிறுவனத்தில் 300 ட்ரோன்களும், அதை இயக்குவதற்கு 500 பணியாளர்களும் உள்ளனர்,” என்றார்.
”எங்கள் நிறுவன ட்ரோன்கள் வானில் 1000மீட்டர் வரை உயரப்பறக்கும். மேலும், 3 அல்லது 5 கிமீ எல்லைக்குள் நின்று இதனை இயக்க முடியும். தற்போது மருந்து விநியோகப் பணியில் தமிழக அரசு மூலம் ஈடுபட்டு வருகிறோம். இனி, சிவில் விமானப் போக்குவரத்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்த 2 நாட்களில் மக்களுக்கான நேரடி இலவச மருந்து பொருள் சேவை தொடங்கப்படும்," என்று அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஷியாம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், தமிழக அரசுடன் இணைந்து கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த சேவை மற்ற நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தநிலையில் தான் மருந்து பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.