ஒற்றை வாக்காளருக்காக மலைப்பகுதியில் வாக்குச்சாவடி அமைத்து 100% வாக்குப்பதிவு எட்டிய தேர்தல் குழு!
சோகேலா தாயெங் மாலோகம் கிராமத்தின் ஒரே ஒரு வாக்காளராக இருந்தபோதும் வாக்குச்சாவடி காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் அன்ஜா மாவட்டத்தின் மலைப்பகுதியான மாலோகம் கிராமத்தில் மீண்டும் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான 39 வயதான சோகேலா தாயெங் மட்டுமே மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்களிக்கும் ஒரே வாக்காளர்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாலோகம் கிராமத்தில் ஒரு குடும்பமும் ஐந்து குடியிருப்புவாசிகளும் இருப்பதாக பதிவாகியிருந்தாலும் தற்சமயம் தாயெங் மட்டுமே பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார்.
ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் சோகேகா தனது வாக்கினை பதிவு செய்வதை உறுதிசெய்ய மாநிலத்தின் மின் துறை இளநிலை பொறியாளர் கம்மர் பாம் தலைமையிலான ஆறு உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல்குழு வாக்குச் சாவடி ஒன்றை அமைத்தது.
தி டெலிகிராஃப் உடனான உரையாடலில் துணை முதன்மை தேர்தல் ஆணையர் லைகென் கோயு கூறுகையில்,
”தேர்தல் அன்று சோகேலா தனது வாக்கினை பதிவு செய்ய எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடியில் அதிகாரிகள் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டது,” என்றார்.
இந்தியா முழுவதும் வாக்குச்சாவடிகள் அமைக்க அரசாங்க ஊழியர்களை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. ஆனால் மாலோகம் கிராமத்தில் மலை ஏறக்கூடிய நபர்களை குழுவில் இணைத்துக்கொள்ள கம்மருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒரு ஊழியர் மற்றும் ஒரு காவலர் உதவியுடன் கம்மரின் குழுவினர் சோகேலாவின் கிராமத்தில் வாக்குச்சாவடியை அமைத்தனர். இந்தப் பணிக்காக இக்குழுவினர் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மாவட்ட தலைமையகமான ஹவாய் பகுதியில் இருந்து இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு இரண்டு மின் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு வந்தனர்.
மற்ற தேர்தல் கட்சிகளுடன் டிட்டிங் வரை இக்குழுவினர் பேருந்தில் பயணம் செய்தனர். தொடர்ந்து பயணம் செய்ய கரடுமுரடான பிரதேசத்தில் சுமார் ஆறு கிலோமீட்டர் வரை மலையேறவேண்டியிருப்பதால் இறங்கிக்கொண்டனர்.மலைப்பிரதேசம் குறித்தி கம்மர் கூறும்போது,
மலைப் பகுதி மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக குடும்பங்கள் வீடுகளைக் கட்டி ஒன்றாக வாழத் தேவையான இடம் இல்லை. இரண்டு வீடுகள் கொண்ட பகுதிகூட கிராமமாக கருதப்படுகிறது. ஒருவருக்கு ஐந்து முதல் பத்து வீடுகள் இருப்பதும் சகஜமாக கருதப்படுகிறது.
அவர் ஸ்க்ரால் உடன் பேசுகையில்,
”சில சமயம் இருக்கும் சிறியளவிலான இடத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள ஏழு எட்டு குடும்பங்கள் ஒரு பெரிய அமைப்பை உருவாக்கிப் பகிர்ந்துகொண்டனர்," என்றார்.
வாக்குச்சாவடியை அமைப்பதற்கு முன்பு இக்குழுவினர் முதலில் சோகேலாவை சந்தித்து தேர்தல் அட்டவணை குறித்து தெரிவிக்கவேண்டியிருந்தது. இதற்காக குழுவைச் சேர்ந்த ஒருவரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் கம்மர். ஆனால் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த முறை 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது சோகேலாவின் கணவர் உட்பட இரண்டு வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு சோகேலாவின் கணவர் வேறொரு பகுதிக்கு தனது வாக்கை மாற்றிக்கொண்டார். லைகன் ’ஸ்க்ரால்’ உடன் உரையாடுகையில்,
”சாலைக்கு அருகில் இருக்கும் பகுதிக்கு அந்தப் பெண் மாற்றலாகியுள்ளதாக சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது,” என்றார்.
இந்தத் தகவலைக் கொண்டு அவரைக் கண்டுபிடிக்க தனது பகுதியின் நிர்வாக நடுவரை அனுப்பினார். ஆனால் சோகேலா அந்த சமயத்தில் வீட்டில் இல்லை. விதிகளின்படி காலை ஏழு மணிக்கு சோகேலாவின் பகுதியில் இக்குழுவினர் வாக்குச்சாவடியை அமைத்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சுமார் 9.30 மணிக்கு சோகேலா வாக்குச்சாவடியை வந்தடைந்தார். அவரது வாக்குப் பதிவுடன் இந்த கிராமம் மீண்டும் நூறு சதவீதம் வாக்குப்பதிவை எட்டியுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA