வாக்கெடுப்பு முடிவால் பங்குகளை விற்ற எலான் மஸ்க்: ரூ.3.70 லட்சம் கோடி வரை இழப்பு!
2 நாட்களில் 50 பில்லியன் டாலர் இழந்த மஸ்க்!
அமெரிக்க ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில தினங்கள் முன் புதிய வரி திட்டம் ஒன்றை முன்மொழிந்தனர். அதன்படி, “பணக்காரர்கள் பங்குகளை விற்கும் போது தான் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, விற்கப்படும் முன்னதாகவே வரி விதிக்க வேண்டும்," என்பதே அந்த வரி திட்டத்தின் முக்கிய அம்சம்.
இந்தத் திட்டத்தின் அறிவிப்பை அடுத்து உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சனிக்கிழமை,
“வரி ஏய்ப்புக்கான ஒரு வழிமுறையாக அறியப்படாத ஆதாயங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளன, எனவே எனது டெஸ்லா பங்குகளில் 10 சதவீதத்தை விற்க நான் முன்மொழிகிறேன். என்னிடம் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவீதத்தை விற்றுவிடலாமா?'' என்பதை கேள்வியாக தன்னை பின்தொடரும் 62.5 மில்லியன் ட்விட்டர் பாலோயர்களிடம் எழுப்பியிருந்தார்.
டெஸ்லாவில் மஸ்க்கின் பங்குகள் சுமார் 170.5 மில்லியன் வரை உள்ளது. இதில் 10 சதவீதம் என்பது 21 பில்லியன் டாலர் வரை மதிப்புக்கொண்டது. இதை விற்க தான் வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பலரும், ‘பங்குகளை விற்பதே சரி' என்று வாக்களித்தனர்.
இந்த முடிவை ஏற்றுக்கொண்டு இப்போது சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் மஸ்க். இதன் மதிப்பு 10% பங்குகள் ஆகும். இந்த விற்பனையால் அவரின் சொத்து மதிப்பில் சரிவு ஏற்படும்.
இதனிடையே, மஸ்க்கின் அறக்கட்டளை டெஸ்லாவில் கிட்டத்தட்ட 3.6 மில்லியன் பங்குகளை விற்றது, அதன் மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர்கள். அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்த தகவலின்படி, கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பங்குகளைப் பெறுவதற்கான விருப்பங்களை தெரிவித்த பிறகு அவர் மேலும் 934,000 பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு விற்கவுள்ளார். இதனிடையே,
டெஸ்லா நிறுவனத்தில் உள்ள தனது பங்கில் 10 சதவீதத்தை விற்கலாமா என ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியதை தொடர்ந்து மஸ்க், 2 நாட்களில் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.70 லட்சம் கோடி) இழப்பை சந்தித்துள்ளார்.