ஃபேஸ்புக் இந்திய குழு, இனி ஜக்கர்பர்க் குழுவிடம் நேரடி ரிப்போர்ட் அளிக்கும்!
ஃபேஸ்புக் இந்தியா, ஆசிய பசுபிக் பிராந்தியம் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இனி ஃபேஸ்புக் தலைமை செயலகத்திற்கு நேரடியாக தகவல் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளது.
ஃபேஸ்புக், தனது மிகப்பெரிய சந்தையான இந்தியா மீதான கவனத்தை தீவிரமாக்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே உள்ள சந்தையில் முதல் முறையாக அமைப்புரீதியான மாற்றத்தை செய்துள்ளது. இதன் படி, ஆறு உறுப்பினர் குழு கொண்ட தனிப்பகுதியாக இந்தியாவை அமைத்துள்ளது. இக்குழு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மென்லோ பார்க்கில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்திற்கு நேரடியாக தகவல் அளிக்கும். மிண்ட் நாளிதழ் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன், இந்தியா; ஃபேஸ்புக்கின் ஆசிய பசுபிக் பிராந்தியம் கீழ் செயல்பட்டு, சிங்கப்பூர் தலைமையகத்திற்கு தகவல் அளித்து வந்தது. வெளிநாட்டு இணைய நிறுவனங்கள் உள்நாட்டில் அதிக இருப்பு கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான இந்தியாவின் தீவிரமான கட்டுப்பாட்டு செயல்முறையின் விளைவாக தற்போதைய நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஃபேஸ்புக் 294 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க சந்தையைவிட இது 90 சதவீதம் அதிகம்.
இந்தியா அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், ஃபேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தேர்தல் நேரத்தில்,செய்தி மற்றும் தகவல் பகிர்வு மேடையாக ஃபேஸ்புக் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் ஏற்கனவே, பொய்ச்செய்திகளை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவுக்கான ஆறு நபர் இயக்குனர் குழுவில், புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியா துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன், இயக்குனர் மற்றும் குளோபல் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் இயக்குனர் சந்தீப் பூஷன், பாலிசி டைரக்டர் அங்கி தாஸ், வியூகம் மற்றும் செயல்பாடுகள் இயக்குனர் பிரஷாந்த அலுரு, பார்ட்னர்ஷிப் இயக்குனர் மனீஷ் சோப்ரா மற்றும், தகவல் தொடர்பு இயக்குனர் அம்ரித் அஹுஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கின் மையக் குழுவில் அங்கம் வகிக்கும் டேவிட் பிஷரிடம் இந்த குழு நேரடியாக தகவல் அளிக்கும்.
“இந்தியாவில் புதிய நிறுவன அமைப்பின் கீழ், புதிய குழுவை அமைப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த புதிய செயல்பாட்டு மாதிரி, இந்தியாவில் உள்ள மக்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க, பல்வேறு தரப்பினருடன் ஆழமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொள்ள, ஏற்கனவே உள்ள நுகர்வோர் பொருட்கள் மீது கவனம் செலுத்துவது மற்றும் நாட்டில் தொழில்முனைவு மற்றும் சிறு வணிகத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு உதவும் என ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கலை தவிர்ப்பதில் ஃபேஸ்புக் தீவிரமாக உள்ளது என்பது, கடந்த ஆண்டு தனது உலக வர்த்தக விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுக்கு அரசியல் பிரமுகர் ஒருவரை நியமித்தத்து மூலம் நிருபனமானது.
“வர்த்தக விவகாரங்களின் பெரும்பகுதி அரசு அதிகாரிகளுடன் செயல்படுவது மற்றும் லாபியிங் செய்வதை உள்ளடக்கியது. எனவே தான் இந்த பணிகளில் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விரும்பப் படுகின்றனர். அவர்கள் அனுபவம், முக்கிய மனிதர்களை அறிந்திருப்பது ஆகிய அம்சங்களை கொண்டுள்ளனர்,” என்று யுவர்ஸ்டோரியிடம் பேசிய மக்கள் தொடர்பு துறை வல்லுனர் ஒருவர் கூறியிருந்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில் : சைபர்சிம்மன்