சமூக நலனுக்காக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஃபேஸ்புக்கின் முக்கிய அறிவிப்புகள்...
செயற்கை நுண்ணறிவை சமூக நலனுக்காக பயன்படுத்துவது தொடர்பாக ஃபேஸ்புக் பெங்களூருவில் நடத்திய மாநாட்டில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சமூக நலனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான இந்தியாவுக்கான புதுமை திட்டம், 100 மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட அறிவிப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் முதலாவது, இந்தியாவுக்கான ஏ.ஐ. மாநாட்டில் இந்த அறிவிப்புகளை ஃபேஸ்புக் வெளியிட்டது.
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை சமூக நலனுக்காக பயன்படுத்துவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு வல்லுனர்கள், ஸ்டார்ட் அப்கள், என்.ஜி.ஓக்கள் மற்றும் டெவலப்பர்கள் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பங்களை சமூக மற்றும் அனைவரையும் உள்ளக்கிய வளர்சிக்கு பயன்படுத்தவதை இந்த மாநாடு நோக்கமாக கொண்டிருந்தது.
ஃபேஸ்புக் இந்தியா துணை தலைவர், நிர்வாக இயக்குனர் அஜீத் மோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
”ஃபேஸ்புக்கில் நாங்கள் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு உலகிற்கான சேவைகளை உருவாக்கி வருகிறோம். இரத்த தானம் செய்ய விருப்பம் கொண்டவர்களுடன், இரத்த வங்கிகள், மருத்துவமனைகளை இணைக்கும் வசதி துவங்கி 2018 கேரள வெள்ளத்தின் போது கைகொடுத்த பேரிடர் வரைபடம் வரை, எங்கள் அனுபவம் மற்றும் ஆற்றல் கொண்டு இந்தியாவிற்கு உதவுவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உதவுவது தங்கள் நோக்கம் என்று கூறியவர், இந்தியாவில் ஆழ் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய எப்படி உதவ முடியும் என புரிந்து கொள்வதற்கான முயற்சி இந்த மாநாடு என்று கூறினார்.
சமூக நலனுக்காக ஏ.ஐ நுட்பத்திற்கு உதாரணமாக அமையும், ஃபேஸ்புக்கின் இரத்தத் தான வசதி இரத்த வங்கி, மருத்துவமனைகளை இரத்தத் தானம் செய்ய விருப்பம் கொண்டவர்களுடன் இணைக்கிறது. இதுவரை உலக அளவில் 35 மில்லியன் பேர் இதில் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தின் தாக்கத்தை அறிவதற்காக ஃபேஸ்புக், இந்தியா மற்றும் பிரேசிலில் இரத்த வங்கிகளுடன் இணைந்து கருத்து கணிப்பும் நடத்தியுள்ளது. இதில் ஐந்தில் ஒருவர், ஃபேஸ்புக் தங்களை இரத்தத் தானம் செய்ய ஊக்குவித்ததாக தெரிவித்தனர்.
நெருக்கடி காலங்களில் செயற்கை நுண்ணறிவு எப்படி உதவும் என்பது பற்றியும் விவரிக்கப்பட்டது. 2018 கேரள வெள்ளத்தின் போது, சீட்ஸ் இந்தியா அமைப்புடன் இணைந்து பேரிடர் வரைபடம் உருவாக்கப்பட்டது தொடர்பாகவும் விவரிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில் இருந்து பெறப்பட்ட அடையாளம் நீக்கப்பட்ட தகவல்கள் இந்த வரைபடத்திற்காக மக்கள் நடமாட்டம் மற்றும் பாதுகாப்பான பகுதிகளை அறிய பயன்படுத்தப்பட்டது.
“ஸ்டார்ட் அப்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் உள்ளூரில் செயற்கை நுண்ணறிவு சூழலை வளர்ப்பதிலும் ஃபேஸ்புக் ஆர்வம் கொண்டுள்ளது. இந்த எண்ணமே, இந்தியா புதுமை திட்டம், மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப், பெண்களுக்கான ஹேக்கத்தான்,” ஆகிய திட்டங்கள் என்று அஜீத் மோகன் கூறினார்.
மாநாட்டின் போது இந்தியாவுக்காக ஃபேஸ்புக் அறிவித்த முக்கிய திட்டங்கள் வருமாறு:
- இந்தியா இன்னவேஷன் ஆக்சலேட்டர்: இந்தத் திட்டம் கீழ், ஃபேஸ்புக், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சமூக தாக்கம் மிகுந்த துறைகளில் உள்ள இடைவெளியை போக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த விரும்பும் ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கும்.
- 100 மாணவர்கள், டெவலப்பர்களுக்கு ஸ்காலர்ஷிப்: சமூக நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முற்படும் 100 மாணவர்கள், டெவலப்பர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் ஆழ் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களை அணுகலாம்.
- வுமன் இன் ஏ.ஐ ஹேக்கத்தான்: பெண் டெவலப்பர்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஹேக்கத்தான் நடத்தப்படும். வெற்றி பெறுபவர்கள் ஐஐடி சென்னை பேராசிரியர்களிடம் செயற்கை நுண்ணறிவும், இயந்திர கற்றல் பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
- ஏ.ஐ. டிரைனிங்: அண்மையில் அறிவிக்கப்பட்ட ஃபேஸ்புக் ஹப்ஸ் திட்டம் கீழ், இந்தியாவின் 20 நகரங்களில் ஏ.ஐ பயிற்சி அளிக்கப்படும். ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இவை நடத்தப்படும்.
இந்தியாவின் குறிப்பிட்ட தேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் பயணத்தில் இந்த மாநாடு முதல் படி என்று, ஃபேஸ்புக் பிராடக்ட் இயக்குனர் ராகவன் ஸ்ரீனிவாசன் கூறினார். ஃபேஸ்புக்கின் செயற்கை நுண்ணறிவு வியூகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, உள்ளூர் சிந்தனையாளர்கள், டெவலப்பர்களின் கருத்துகளையும் இந்த மாநாடு மூலம் அறிந்து கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
மருத்துவம், கல்வி, விவசாயம், பேரிடர் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் காண செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.