'The Family Man' சீசன் 2 தொடரால் மீம்களின் 'செல்லம் சார்’ ஆன உதய் மகேஷ்!
`தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 தொடரில் `செல்லம் சார்’ கதாப்பாத்திரம் சமூக வலைதளங்களில் இன்று ட்ரெண்டிங்கில் உள்ளது.
பொதுவாகவே திரைப்படங்கள், திரைத்தொடர்கள் போன்றவற்றில் முக்கியக் கதாப்பாத்திரங்களே பாராட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்படும். இவர்களை மையப்படுத்தியே கதை நகர்வது இதற்குக் காரணம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில கதாப்பாத்திரங்கள் திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும்கூட ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களின் செல்லமாக மாறியிருப்பவர் யார் தெரியுமா?
அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள 'தி ஃபேமிலி மேன்’ இரண்டாம் சீசனில் வரும் 'செல்லம் சார்’ என்கிற கதாப்பாத்திரம்தான் இந்த சீசன் ட்ரெண்டிங்.
யார் இந்த ‘செல்லம் சார்’?
’தி ஃபேமிலி மேன்-2’ தொடரில் ‘செல்லம் சார்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் உதய் மகேஷ். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் ஓய்வு பெற்ற அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரி. ஸ்ரீகாந்த் திவாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் மனோஜ் பாஜ்பாய். ஸ்ரீகாந்த் திவாரியின் விசாரணைக்குத் தேவைப்படும் முக்கியத் தவகல்களைக் கொடுத்து அடுத்தடுத்தகட்ட நகர்வுகளுக்கு உதவுகிறார் இந்த செல்லம் சார்.
உதயபானு மகேஷ்வரன் பின்னணி
எதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் கவரும் உதய் மகேஷ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்.
இவரது முழுப்பெயர் உதயபானு மகேஷ்வரன். 1970ம் ஆண்டு பிறந்தார். இவரது சொந்த ஊர் சென்னை. கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநரும் ஆவார். ‘நாளை’, ’சக்கரவியூகம்’ ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘144’, ’மாயா’, ’இது நம்ம ஆளு’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அஜீத்துடன் ’நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் வெளியான ‘ஆபீஸ்’ தொடரில் விஸ்வநாதன் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதுதவிர அக்னி பறவை, பகல் நிலவு, மௌன ராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
சமீபத்திய இணைய தொடர் ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 இவரது ரசிகர் வட்டத்தை விரிவடையச் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் ‘செல்லம் சார்’ பற்றி ஏராளமான மீம்ஸ் ட்ரென்டிங்கில் வலம் வருகின்றன. ஃபேமிலிமேன் சீரிஸ்-ன் ஹீரோவான ஸ்ரீகாந்த திவாரியே இந்த செல்லம் சார் தரும் டிப்ஸ் வைத்துதான் அடுத்த நகர்வை செய்வதால், இவரின் கேரக்டர் அதிமுக்கியமாகப் பார்க்கப்பட்டது.
ஆங்காங்கே ஸ்டைலாக வந்து மறைவாக நின்று பேசிவிட்டு போகும் செல்லம் சார் கேரக்டரை வித்தியாசமாகவும், அதே சமயம், க்ளைமாக்ஸ் வரை முக்கியமாகவும் அமைந்ததால், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.
செல்லம் சாருக்கு எல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இவர் ஒரு கூகுள் என்கிற அளவில் மீம்ஸ் போடப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதி எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது செல்லம் சாருக்கு மட்டும் தான் தெரியும் என்கிறது ஒரு மீம்ஸ்.
டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் என்ன ட்வீட் செய்வது? என்கிற கேள்வியை செல்லம் சாரிடம் கேட்பது போல் ஒரு மீம்ஸ்.
இணையம் இல்லாமல் கூகுள் வேலை செய்யாது என்பதை அறிந்து கடவுள் செல்லம் சாரை உருவாக்கியிருக்கிறார் என்கிறது ஒரு மீம்.
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை செல்லம் சாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு பதிவர் ட்வீட் செய்தார்.
கோவிஷீல்ட், கோவாக்சின் எந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று ஸ்ரீகாந்த் திவாரி செல்லம் சாரிடம் ஆலோசனை கேட்பதுபோல் ஒரு மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் செல்லம் சாரின் ரீச் எப்படி என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
”தி ஃபேமிலி மேன் சீசன் 1 பார்க்கும்போது நான் இரண்டாவது சீசனில் நடிப்பேன் என்று தெரியாது. செல்லம் கேரக்டர் இந்த அளவிற்கு ட்ரென்ட் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லா மீம்ஸையும் நான் ரசித்தேன். இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி,” என்று பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் உதய் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.