உட்பிரிவு நோயாளிகள் பராமரிப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் சென்னை ஹெலிக்சன் நிறுவனம்!
கடந்த 28 வருடங்களாக டிஜிட்டல் ரேடியோகிராஃபி சாதனத்தை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகிறார் நிறுவனர் விஜய் சங்கர்!
உள்பிரிவு நோயாளிகளின் பராமரிப்பில் மிகச்சிறந்த மருத்துவமனைகளில்கூட சில வரையறைகள் இருக்கத்தான் செய்கிறது. சென்னையைச் சேர்ந்த பொறியாளரான வருண் மேத்தா டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். உள்பிரிவு நோயாளியாக சிகிச்சைபெற்று வந்த இவருக்கு அவ்வப்போது டெம்பரேச்சர் சோதனை செய்ய வேண்டியிருந்தது. அவரது கேஸ் ஹிஸ்டரியை பதிவு செய்வதற்காக அவரது மணிக்கட்டில் பார்கோட் பொருத்தப்பட்டிருந்தது. எனினும் ஒரு நர்ஸ் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவரது டெம்பரேச்சரை பதிவு செய்து வந்தார். இதைப் பொறுத்துதான் அவருக்குத் தேவையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட சூழலுக்கு டெம்பரேச்சரை இவ்வாறு அடுத்தடுத்து பட்டியலிட்டு பதிவு செய்யும் முறை சிறந்ததாக இல்லை. ஒரு நாள் இரவு வருணின் டெம்பரேச்சர் 100-லிருந்து 103-ஆக உயர்ந்ததால் அவர் மயங்கிவிட்டார். நோயாளியுடன் உதவிக்கு இருந்த உறவினர் ஒருவர் இதை கவனித்தார். இல்லையெனில் வழக்கமான சோதனை நேரமான இரண்டு மணி நேரம் கடந்த பிறகே நர்ஸ் மற்றும் மருத்துவருக்கு வருணின் நிலை தெரிய வந்திருக்கும்.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காக உருவான IoT ஸ்டார்ட்அ-ப் தான் சென்னையைச் சேர்ந்த ’ஹெலிக்சன்’ (Helyxon). இதிலுள்ள பேண்ட் நோயாளியை தொடர்ந்து கண்காணித்து தளத்திலுள்ள நோயாளிகளின் டேஷ்போர்டை நர்ஸ் மற்றும் மருத்துவருக்குக் காட்டும். தேவையேற்படும்போது மருத்துவ ஊழியர்கள் அந்த நோயாளியைப் பராமரிக்க இது உதவுகிறது.
விஜய் ஷங்கர் ராஜா 47 வயதானவர். ஹெல்த்கேர் பிரிவில் 28 வருட அனுபவம் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்டதுதான் ’ஹெலிக்சன்’. ஹெல்த்கேர் பிரிவில் சிகிச்சை விகிதத்தைப் பெறவோ அல்லது சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கையை அறியவோ தொழில்நுட்பத்தை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்று மில்லியன் கணக்கிலான யோசனைகள் இவரிடம் நிரம்பி வழிகிறது. ஹெல்த்கேர் பிரிவை ஆட்டோமேட் செய்வது பில்லியன் டாலர் வாய்ப்புள்ள சந்தை என்று திடமாக நம்புகிறார் விஜய். மருத்துவமனைகளில் நோயாளியின் பராமரிப்பு முறை கண்காணிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வளிக்க செயல்பட்டு வருகிறது ஹெலிக்சன்.
ஆரம்ப நாட்கள்
ஹெலிக்சன் 2014-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதற்கு முன்பே 22 ஆண்டுகளாக விஜய் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்தார். 1995-ல் Avvanttec Medical Systems எனும் நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு மருத்துவ உபகரணங்களுக்கு சர்வீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த Toshbro Medicals நிறுவனத்தில் சர்வீஸ் மேனேஜராக பணியாற்றினார். 2001-ல் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதிலும் டிஜிட்டல் ரேடியோக்ராபி சர்வீஸ் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்த Cura Healthcare எனும் நிறுவனத்தைத் துவங்கினார். எக்ஸ்ரே, எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேனர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் துவங்கியது இந்நிறுவனம். சர்வீஸ் பணியின் வாயிலாக ஈட்டிய வருவாயிலிருந்து இந்நிறுவனம் சொந்தமான டிஜிட்டல் ரேடியோக்ராபி ப்ராடக்டை உருவாக்கியது. 2012-ல் 45 கோடி வருவாயை ஈட்டியது Cura.
”ப்ராடக்டை ப்ராண்டிங் செய்து இந்தியாவின் பல மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்தேன்.” என்றார் விஜய்.
15 மில்லியன் டாலர் முதலீடு செய்த பீபல் கேப்பிடல் (Peepul Capital) நிறுவனத்திற்கு 2014-ம் ஆண்டு Cura விற்பனை செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு விஜய் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி அடுத்தகட்ட திட்டத்தை ஆராயத் துவங்கினார். விஜய் கூறுகையில்,
“மருத்துவம் என்பது நம்பிக்கை நிறைந்ததாகவும், மலிவான விலையிலும் எளிதாக சென்றடையும் விதத்திலும் இருக்கவேண்டும். ஆனால் மருத்துவத் துறையில் இவை பின்தங்கியே உள்ளது. தங்களால் இவற்றை அளிக்கமுடியும் என்று மருத்துவர்கள் நம்பவேண்டும். ஆனால் அவ்வாறு நம்புவதில்லை. இதை மருத்துவர்கள் நன்கறிவர்.”
மேலும் இந்த நாட்டிலுள்ள மருத்துவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பணம் ஈட்டுகின்றனர். நோயாளிகளின் வாழ்க்கை சுழற்சியை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த முன்வந்தால் இன்று சம்பாதிக்கும் அளவு நிச்சயமாக பன்மடங்காக அதிகரிக்கும் என்கிறார் விஜய்.
2014 முதல் 2016 வரை நோயாளிகளின் டெம்பரேச்சரை கண்காணிக்கக்கூடிய ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கும் பணியில் விஜய் மற்றும் 10 பொறியாளர்கள் அடங்கிய அவரது குழு ஈடுபட்டது. 5 கிராம் எடை கொண்ட இந்த கைக்கடிகாரம் 1.5 இன்ச் விட்டம் கொண்டது. இது மருத்துவமனையின் சிஸ்டம் மற்றும் தனிப்பட்ட சிஸ்டம் அல்லது சாதனங்களுடன் Wi-Fi அல்லது ப்ளூடூத் மூலமாக இணைக்கப்பட்டு நோயாளியின் விவரங்கள் சென்ட்ரல் டேஷ்போர்டிற்கு மாற்றப்படும். இதுவரை இந்நிறுவனம் 1,500 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் கண்காணிப்பதற்கான தேவையை இந்த வாட்ச் அகற்றிவிடுகிறது. இருப்பினும் ஹெல்த்கேரில் IoT என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் மிகப்பெரிய மருத்துவமனைகள் தங்களது மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். காகிதங்களில் பதிவுசெய்து வைக்கும் முறையே அவசியமானது என்றும் சட்டப்பூர்வமானது என்றும் கருதப்படுகிறது.
”புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது முக்கிய அம்சமாகும். இந்த தளத்தைப் பயன்படுத்தும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை டிஜிட்டல்மயமாவதை உணர்த்துகிறது.” என்கிறார் Axilor Ventures நிறுவனத்தின் சிஇஓ வி கணபதி.
சந்தை
ஸ்பெக்ட்ரல், ஃபோரஸ், கார்டியாக் டிசைன் லேப்ஸ் போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்தத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹெல்த்கேர் துறையில் IoT 163 பில்லியன் டாலர் வாய்ப்புள்ள சந்தை என்றும் இதில் 90 சதவீதம் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் தெற்கு ஆசியா போன்ற நாடுகளைச் சார்ந்தது என்றும் Market and Markets தெரிவிக்கிறது.
இந்தியாவில் மருத்துவமனைகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே தொழில்நுட்பத்திற்கு செலவிடுகின்றனர். எனவே இந்தப் பகுதியின் ஸ்டார்ட் அப்கள் விலையை அதிகம் குறைக்கவும் சோதனை முயற்சிகளிலும் ஈடுபடவும் வலியுறுத்தும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போராட வேண்டியிருக்கும். இந்தியாவில் ஹெல்த்கேர் பிரிவில் ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தை அதிகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தத் துறையில் செயல்பட சரியான தயாரிப்புகளும் தேவையான மக்கள் தொடர்பும் அவரிடம் இருப்பதாக நம்புகிறார் விஜய். இதுவரை 3.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீட்டாளர்கள் வாயிலாக நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அவரது வாட்ச்; தெர்மாமீட்டருக்கு மாற்றாக அமையவேண்டும் என்று விரும்புகிறார் விஜய்.
வருங்காலத்தில் தகவல்களை ஒன்றிணைப்பதற்கான தேவை உள்ளது. ஹெலிக்சன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே ஒரு நோயாளி தனக்கு தெர்மாமீட்டருக்கு பதிலாக வாட்ச் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டால் அதுதான் நிறுவனத்தின் சாதனையாக பார்க்கப்படும்.
ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா