ஓட்டு போட மக்களை அழைக்க விதவித விழிப்புணர்வு பிரச்சாரம்!
தேர்தல் விழிப்புணர்வு: பெட்ரோல் விலையில் தள்ளுபடி, ரோபோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம், விதை பென்சில்களில் விழிப்புணர்வு வாசகம், என ஒவ்வொருவரும் அவரவர்களின் விதத்தில் தேர்தலில் 100% வாக்குபதிவு செய்ய வாக்காளர்களை அழைக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் துவங்கி 7 கட்டமாக இந்தியா முழுவதும் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து போட்டியிடும் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை இரண்டு நாள் முன்பே நிறுத்தியது. ஆனால் சக குடிமகன்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் மக்களை ஓட்டு போட வரவழைக்க பல யுத்திகளைக் கையாளுகின்றனர். வாக்காளார்களை ஓட்டு போட வைக்க வர்த்தகர்கள் செய்துவரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை இங்கு பார்ப்போம்:
ஒட்டு போட்டால் உணவகங்களில் தள்ளுபடி..
தமிழ்நாடு: ஒட்டு போடாமல் இருக்க சாக்கு போக்கு சொல்லாமல் இருக்க, அனைவரையும் வாக்களிக்க அழைப்பதற்கு தமிழ்நாடு உணவக சங்கம் 10% தள்ளுபடி அளித்துள்ளது.
உணவகத்தில் தள்ளுபடி வேண்டுமா? ஏப்ரல் 18 அன்று உங்கள் வாக்குகளை அளித்த பின்பு மாலை 6 மணிக்கு மேல் தமிழ்நாடு உணவக சங்கத்தின் கீழ் உள்ள உணவகங்களுக்கு சென்று உங்கள் மை வைத்த விரலை காண்பித்தால் பில்லில் இருந்து 10% தள்ளுபடி அளிக்கப்படும். இதில் ஹாட் சிப்ஸ், சரவணபவன் போன்ற உணவகங்களும் அடங்கும்.
கர்நாடகா: இதே போன்று வாக்களிப்பதை ஊக்குவிக்க பெங்களூரில் உள்ள பெரும் உணவகங்களும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. பெங்களூர் ஷெரட்டன் கிராண்ட்,
தேர்தல் நாள் அன்று ஒருவர் சாப்பிட்டால் மற்றொருவருக்கு இலவசம் என சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்று இன்னும் சில உணவகங்களும் அறிக்கைவிட்டுள்ளன.
ஒட்டு போட்டால் பெட்ரோலிலும் தள்ளுபடி..
பெட்ரோல் விற்கும் விலைக்கு தள்ளுபடி என்றால் அது மகழ்ச்சி தானே; தள்ளுபடியை பெற நாம் செய்ய வேண்டியது ஓட்டு போடுவது மட்டும் தான்.
அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் வாக்களிப்பதை வலியுறுத்த லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடியை அளித்துள்ளது. மை வைத்த உங்கள் விரலை காண்பித்து இந்தத் தள்ளுபடியை நீங்கள் பெறலாம். இந்தியா முழுவதுமுள்ள 58,000 பங்குகளில் இந்த தள்ளுபடி உள்ளது.
வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உரக்கச் சொல்லும் ஸ்டார்ட்-அப்.
ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஃபார்ம்சில் விதைக்கக்கூடிய விதை பென்சில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் பென்சிலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சில சொற்றொடர்களை இணைத்த்துள்ளது.
“நம் நாடு நமது கையில் (வாக்கில்)” , “100% வாக்கு – நமது கடமை, நமது உரிமை,” போன்ற வாசகங்களை பென்சிலில் அச்சிட்டு விழிப்புணர்வு செய்கிறது.
சென்னை, டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் விழிப்புணர்வு பிரச்சாரம்..
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பிரபலங்கள் வாக்களிக்க வலியுறுத்தும் வீடியோக்களை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடும் பகிர்ந்துள்ளது. விஜய் சேதுபதி, தினேஷ் கார்த்திக், SPB, விவேக் போன்ற பிரபலங்கள் பேசும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.
மேலும் இன்னும் பல போஸ்டர்களையும், வாக்காளர் உதவி எண் 1950 ஆகியவற்றையும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விளம்பரப்படுத்தி உள்ளனர். இதே போல் டெல்லி மெட்ரோ மற்றும் பேருந்துகளும் இந்த விளம்பரங்களை சுமந்து செல்கின்றது.
அதே போல் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ரோபோ மூலம் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் இந்த ரோபா மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இதன் மூலம் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம், சாக்குகள் சொல்லாமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு வாக்களிப்போம்.