சென்னை செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் Tango Eye-ல் முதலீடு செய்துள்ளது Lenskart
சென்னையை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வீடியோ ஆய்வு ஸ்டார்ட் அப் நிறுவனம் புதிய நிதி மூலம், மேலும் ஆயிரம் விற்பனை நிலையங்களுக்கு தனது சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
கண்காணிப்பு காமிரா தகவல்களை செயல்படுத்தக்கூடிய தகவல்களாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ ஆய்வு சேவையை வழங்கும் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனம் டாங்கோ ஐ (Tango Eye) டில்லியைச் சேர்ந்த மூக்குக் கண்ணாடி நிறுவனமான ‘Lenskart' இடமிருந்து விதை நிதி பெற்றுள்ளது.
சிலிக்கான வேலியின் RiSo capital மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர், Innov8 (Oyo வால் கையகப்படுத்தப்பட்டது) இணை நிறுவனர் கெளரவ் குலாட்டி ஆகியோரும் இந்த நிதி சுற்றில் பங்கேற்றனர்.
தற்போது Tango Eye சேவை 1,000 விற்பனை நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. புதிய நிதி மூலம், 10,000 மையங்களில் விரிவாக்கம் மற்றும் புதிய அம்சங்கள் அறிமுகம் சாத்தியமாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ரிடைல் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு தாக்கம் மிகுந்த மென்பொருள் தீர்வுகளை வழங்கும் சிறந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமாக விளங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்,” என்கிறார் டாங்கோ ஐ நிறுவனர், சி.இ.ஓ சுரேந்தர் கவுண்டர்.
இந்த முதலீடு மூலம் லென்ஸ்கார்ட் நிறுவனம், தனது வாடிக்கையாளர் அனுபவம், விற்பனை நிலைய பாதுகாப்பு, பொருட்கள் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று டாங்கோ ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்திக்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதில் லென்ஸ்கார்ட் எப்போதும் முன்னணியில் இருக்கிறது.செயற்கை நுண்ணறிவு சார்ந்த கம்ப்யூட்டர் விஷன் நுட்பம், எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்மார்ட் மெர்ச்சன்டைசிங், பாதுகாப்பு, தர நிர்ணயம் என பல விதங்களில் இது பயன்படும். இந்நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் விஷன் நுட்பத்தை கொண்டு வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த உள்ளோம்,” என்று லென்ஸ்கார்ட் சி.இ.ஓ பியூஷ் பன்சல் கூறியுள்ளார்.
2018ல் நிறுவப்பட்ட, டாங்கோ ஐ, செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் விஷன் சார்ந்த மென்பொருள் தீர்வுகளை வழங்கி வருகிறது. கண்காணிப்பு காமிராக்கள் மூலம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற தீர்வுகளை அளிக்கிறது.
நிறுவனம் தனது சேவை மூலம், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு, வருகை பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவற்றில் உதவுகிறது.