பெங்களுரு கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரிய கூகுள் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 100 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தால் 1,20,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற ஊழியர்கள் அனைவரும் இன்று வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்களது பெங்களூரு அலுவலகத்தில் ஒரு ஊழியருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எங்களது பெங்களூரு அலுவலகங்களில் ஒன்றில் இருந்தபோது அந்த ஊழியருக்கு நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் இருந்தது. அப்போதிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்,” என்று கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அந்த குறிப்பிட்ட ஊழியருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தங்களது உடல்நிலையை கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்,” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் விலங்குகளை பாதிக்காது என்றும் அவற்றின் மூலம் பரவாது என்றும் விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
“பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை பகிர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. விலங்குகள் அருகே செல்லவேண்டாம் என்கிற தகவல்களை பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது. மக்களை தவறாக வழிநடத்துவதாகும்,” என்றார்.
மேலும், “விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்குவதில்லை. விலங்குகள் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவுவதுமில்லை. மின்னணுவியல் துறை அமைச்சகம், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே அமைச்சகம் ஆகியவை விலங்குகள் அருகே செல்லவேண்டாம் என்பது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கவேண்டும். இந்தியாவில் வேறு மாதிரியான சிக்கல்கள் எழ இவை வழிவகுக்கும்,” என்றும் தெரிவித்தார்.
தகவல்: ஏஎன்ஐ