விண்வெளியில் இருந்து லைவ் வீடியோ: நானோ சாட்டிலைட் தயாரித்துள்ள ‘கிரஹா ஸ்பேஸ்’
Grahaa Space ஸ்டார்ட் அப் புவியின் தாழ் சுற்று வட்டப்பாதையில் நானோ சாட்டிலைட்டுகளை இஸ்ரோ உதவியுடன் செலுத்த உள்ளது.
கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space) ஸ்டார்ட் அப் புவியைக் கண்காணிக்கும் நானோ சாட்டிலைட்டுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நானோ சாட்டிலைட்டுகள் புவியின் தாழ் சுற்று வட்டப்பாதையில் ஏவப்பட உள்ளது.
குறிப்பிட்ட நிறுவனத்தின் தேவைக்கேற்ப அதிக துல்லியத்தன்மையுடன்கூடிய வீடியோக்களை நிகழ்நேர அடிப்படையில் ஸ்ட்ரீம் செய்யும் நோக்கத்துடன் இந்த நானோ சாட்டிலைட் உருவாக்கப்படுகிறது. இந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஊடாடும் வலைதளம் மூலம் நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெறும்.
இதன் மூலம் கிடைக்கப்படும் தரவுகள் விவசாய மேலாண்மை, பேரிடர் மற்றும் அவசரகால நடவடிக்கைகள், ராணுவ உளவுத்துறை பணிகள், புலனாய்வு பத்திரிக்கைகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் இ-கவர்னென்ஸ், குறிப்பிட்ட பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும்.
“நிறுவனங்களின் தேவைக்கேற்ப புவியின் தாழ் சுற்று வட்டப்பாதையில் இருந்து மிகத் துல்லியமாக வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெகு சில ஸ்டார்ட் அப்களில் 'கிரஹா ஸ்பேஸ்' நிறுவனமும் ஒன்று. இந்தத் திட்டத்தை மேற்கொள்வது கடினம்தான் என்றாலும் இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் முக்கிய தீர்மானங்களுக்கு பேருதவியாக இருக்கும்,” என்றார் கிரஹா ஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ ரமேஷ் குமார்.
தற்சார்பு இந்தியா திட்டம் குறித்து மேற்கோள் காட்டி கூறும்போது,
“இந்திய அரசாங்கமும் இஸ்ரோ நிறுவனமும் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் புதுமையான முயற்சிகளில் ஈடுபட விரும்பும் ஸ்டார்ட் அப்'களுக்கு ஆதரவளிக்கின்றன. எங்கள் திட்டத்தை 2021 ஆண்டு இறுதிக்குள் இஸ்ரோ உதவியுடன் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
“இந்தியக் குடிமகனாகவும் இஸ்ரோ முன்னாள் திட்ட துணை இயக்குநராகவும் சக விஞ்ஞானிகளுடன் பணியாற்றவும் இந்திய விண்வெளி திட்டங்களில் பங்களிக்கவும் வாய்ப்பு கிடைத்தற்கு பெருமிதம் கொள்கிறேன்.
விண்வெளிப் பயணங்களில் உலகளவில் முன்னணி வகிக்கும் நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இஸ்ரோ பெரும் பங்களித்துள்ளது. விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது, என்றார் இணை நிறுவனர் மற்றும் திட்ட இயக்குநர் டாக்டர் லோகநாதன். இவர் இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப் பொறுப்பில் செயல்பட்டவர்.
தகவல் மற்றும் பட உதவி: ஏஎன்ஐ