இமய மலைக்கு 30வது முறை டிரெக்கிங் சென்று தன் 100வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் தாத்தா!
தற்போதைய ஆன்லைன் சூழல் நம்மை சோம்பலாக்கி வைத்துள்ளது, அதுவும் ஸ்மார்ட்போனால் வீட்டை விட்டு வெளியேறுவதே அதிசயமாக உள்ளது. ஒரு மாடி என்றால் கூட லிஃப்ட்டை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்தச் சூழலில் 99 வயது தாத்தா தனது 100வது பிறந்தநாளை இமய மலைக்கு டிரெக்கிங் சென்று கொண்டாட உள்ளார்.
கேரளா திருஷூரைச் சேர்ந்தவர் சித்திரன் நம்பூத்ரிபத், இவர் கடந்த 30 வருடங்களாக 29 முறை இமய மலையில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு போய் வந்துள்ளார். கடந்த டிசம்பர் 2018ல் பத்ரிநாத் கேதர்நாத் ஆலையத்திற்கு இறுதியாக சென்று வந்துள்ளார். இப்பொழுது வரும் அக்டோபர் மாதம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இவர் தனது 30வது டிரெக்கிங் பயணத்தை துவங்கவுள்ளார்.
இது குறித்து நியூஸ் மினிட்டிற்கு அவர் அளித்த பேட்டியில்,
“இந்தாண்டு எனக்கு மிகவும் முக்கியமான ஆண்டு, 30வது இமய மலைப் பயணம் அதுவும் எனது 100வது பிறந்தநாளுக்கு. அதுவரை உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.
கேரள கல்வித் துறையில் மேலாளராக பணிப்புரிந்த சித்திரன், தனது பக்கத்து வீட்டுகாரரால் தான் டிரெக்கிங் மீதும் ஹிமாலயா மீதும் ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கிறார். தனது பக்கத்து வீட்டுகாரர் ட்ரெகிங்க் போன கதையை சொல்ல சித்திரனுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அவரை முன்னோடியாகக் கொண்டு கடந்த 1952இல் தனது முதல் இமய மலைப் பயணத்தை மேற்கொள்ள முயற்சி செய்துள்ளார், ஆனால் அது வெற்றிப்பெறவில்லை.
தனது முதல் பயணத்தைப் பற்றி தி ஹிந்து வில் பகிர்ந்த போது,
“அப்பொழுது நான் பணியில் இருந்த காலம், என்னுடைய நண்பனுடன் இணைந்து சென்ற முதல் பயணத்தின் போது ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டதால் ருத்ரபிரயாக்கை தாண்டி எங்களால் செல்ல முடியவில்லை. முதல் பயணமே தோல்வியில் முடிந்தது,” என்றார்.
முதல் பயணம் வெற்றிபெறவில்லை என்றாலும் சோர்வு அடையாமல் ஹிமாலய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற பிடிப்பில் கடந்த 1956ல் மீண்டும் முயற்சி செய்துள்ளார் இவர். அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட தடங்கல் பற்றி பேசிய அவர்,
“அப்பொழுது இமயமலை பயணம் என்பது இப்பொழுது போல் சுலபமானது அல்ல; சாலைகளும் பயணம் செய்யும் வசதிகளும் சரியாக இருக்காது. பத்ரிநாத்தை அடைய ருத்ரபிரயாக்கை தாண்டி 90கிமி காட்டினுள் நடக்க வேண்டும்,” என்கிறார்.
ட்ரெக்கிங் மட்டுமின்றி தொழில் ரீதியாக கல்வித் துறையிலும் தனது பெரும் பங்கை அளித்துள்ளார் இவர். 1940ல் கேரளாவின் மூக்குதலா கிராமத்தில் முதல் மேல் நிலை பள்ளியை அமைத்து தந்துள்ளார். அப்பள்ளியை அரசிடம் ஒப்படைக்கும் முன்னர் வரை ஆசிரியர் ஆகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
“என்னால் முடிந்த வரை வெற்றிகரமாக அப்பள்ளியை முன்னேற்றினேன். அதை மீறி நான் செய்ய எதுவுமில்லை அதனால் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன்,” என தெரிவித்தார்.
இந்த வயதிலும் டிரெக்கிங் செல்லும் மன தைரியமும் உடல் நலமும் இருக்கக் காரணம் முழு சைவ உணவு, யோகா மற்றும் நடப்பது மட்டுமே என தெரிவிக்கிறார்.
மேலும் ஆரோக்கியத்திற்கு, “வாழ்வாதாரம், உணவு மற்றும் பேச்சில் அளவோடு இருப்பது அவசியம்” என முடிக்கிறார்.
கட்டுரை: Think Change India