‘அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சேவையாற்றுவேன்’ - தமிழக ஆளுநர் ஆனார் ஆர்.என்.ரவி!
பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி பேச்சு!
தமிழகத்தின் 26வது ஆளுநராக பதவியேற்றுள்ளார் ஆர்.என்.ரவி. அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் உடன் இருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் என 500 பேர் வரை கலந்துகொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், கிண்டி ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து எளிமையாக பதவியேற்பு விழா நடந்தது. பதவியேற்று முடித்த பின் முக்கிய அரசு பிரதிநிதிகள் அறிமுகம் நடந்து வருகிறது. இதேபோல் தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, முதல்முறையாக தமிழக மீடியாக்களிடம் பேசிய ஆளுநர் ரவி,
"உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்; என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு தமிழகத்தில் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் பதவிக்கான விதிகளுக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு சேவையாற்றுவேன்," என்றார்.
யார் இந்த ஆர்.என்.ரவி?
பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாகக் கொண்டவர் ஆர்.என். ரவி. இவரின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி என்பதாகும். இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. பீகாரை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். கேரளாவிலும் மற்ற பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்.என். ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் திறம்பட பணி செய்தவர்.
மத்திய உளவுப் பிரிவான ஐபி-யில் பணியாற்றியிருக்கும் ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு கொண்டுள்ளார். 2012ல் தனது காவல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரவி பிரதமர் அலுவலகத்தில் இணை உளவு குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியை மேற்கொண்டுவந்தார்.
இதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் அதற்கடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் ரவி.
நாகாலாந்தில் 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த நிலையில் தான் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஆர்.என். ரவி. அவரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.