2023ல் 300 காப்புரிமைகளைப் பெற்று ஐஐடி மெட்ராஸ் சாதனை!
ஐஐடி மெட்ராஸ், 2023ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு காப்புரிமைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு 156 காப்புரிமை பெற்ற நிலையில், 2023ம் ஆண்டில் 300 காப்புரிமை பெற்றுள்ளது.
ஐஐடி மெட்ராஸ், 2023ம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு காப்புரிமைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு 156 காப்புரிமை பெற்ற நிலையில், 2023ம் ஆண்டில் 300 காப்புரிமை பெற்றுள்ளது.
மேலும், சர்வதேச அளவிலான காப்புரிமை எண்ணிக்கையும் 58ல் இருந்து 105 ஆக அதிகரித்துள்ளது என ஐஐடி மெட்ராஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏற்கனவே 221 காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் 163 இந்திய காப்புரிமைக்கானவை மற்றும் 63 சர்வதேச காப்புரிமைக்கானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ், 1975ம் ஆண்டு முதல் காப்புரிமை பெற்று வருகிறது. 2016ம் ஆண்டில் 1000க்கும் அதிகமான காப்புரிமை விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு 2000 காப்புரிமை விண்ணப்பம் மற்றும் 2023ம் ஆண்டு 2500 காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டன.
“நம்முடைய 100வது சுதந்திர தின விழாவை நோக்கி முன்னேறி வரும் நிலையில், பாரதம் வல்லரசாக விளங்க நம்முடைய புதுமையாக்க எண்ணங்களை பாதுகாப்பது முக்கியம். இந்த நோக்கில் அதிக காப்புரிமைகளை பெற்றுள்ளதற்காக ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்களை மற்றும் ஐ.சி.எஸ்.ஆர் அமைப்பை பாராட்டுகிறேன்,” என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.
கம்பியில்லா வலைப்பின்னல், ரோபோவியல், அடிடிவ் உற்பத்தி நுட்பம், இஞ்சின் மேம்பாடுகள், சென்சார் பயன்பாடு, தூய்மை நுட்பம், ஏரோஸ்பேஸ், பாலிமர் உள்ளிட்ட பிரிவுகளில் ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் காப்புரிமை பெற்று வருகின்றனர்.
ஐஐடி மெட்ராசில் உள்ள ஐ.சி.எஸ்.ஆர் ஆலோசனை அமைப்பு, அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த மையம் பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்படுவதோடு, சட்டப்பிரிவையும் கொண்டுள்ளது.
“ஆன்லைன் சார்ந்த ஏஐ தேடல் சேவை மூலம் காப்புரிமை தொடர்பான தற்போதைய தகவல்களை எளிதாக தேட மையம் வழி செய்கிறது. இதன் மூலம் ஆய்வாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை சுயமாக சோதித்து பார்த்து கொள்ள முடிவதோடு, கோரிக்கை அளிப்பதையும் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது,” என ஐஐடி மெட்ராஸ் (IC&SR) டீன் மனு சந்தானம் கூறுகிறார்.
இந்த கல்வி நிறுவனத்தின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான, வேதியல் பேராசிரியர் டி.பிரதீப் இதுவரை 150 இந்திய மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து 100க்கும் மேற்பட்ட காப்புரிமை பெற்றுள்ளார். இவர் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.
“20 ஆண்டுகளுக்கு முன் முதல் காப்புரிமை விண்ணப்பம் அளித்த போது, எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இப்போது தெளிவான மற்றும் வர்த்தகமயமாக்கல் கொண்ட முறை உருவாகியுள்ளது. இந்த முறையில் மூன்று நாட்களில் கூட, கோரிக்கை சமர்பித்து, வர்த்தகமயமாக்கல் பங்குதாரர்களை அணுகியுள்ளேன்,” என்று பேராசிரியர் பிரதீப் கூறுகிறார்.
“நாங்கள் கோரும் ஒவ்வொரு காப்புரிமையும் சட்ட ஆவணம் மட்டும் அல்ல, செயல்படும் தீர்வுகளை உருவாக்கும் எங்கள் ஈடுபாட்டிற்கான சான்று. காப்புரிமைகளுக்கான விழைவு, தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு பலன் அளிக்கும் நோக்கத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது,“ என்று இயற்பியல் பேராசிரியர் எம்.எஸ்.ராம்சந்திர ராவ் கூறுகிறார்.
காப்புரிமை செயல்பாட்டை மேம்படுத்த, எளிதான ஐபி நிர்வாக சாதனம், கட்டண சலுகை, விரைவான செயல்பாடு, விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. காப்புரிமை செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.
Edited by Induja Raghunathan