பஸ், கார், ஆட்டோவில் பொருத்தக் கூடிய தானியங்கி சானிடைசர் டிஸ்பென்சர் அறிமுகம்!
தொடர்பற்ற தானியங்கி சானிடைசர் டிஸ்பென்சரை தனியாருடன் உருவாக்கியது ஐஐடி மெட்ராஸ்!
ஐஐடி மெட்ராஸ், துறைசார்ந்த நிறுவனத்துடன் இணைந்து தொடர்பற்ற தானியங்கி சானிடைசர் டிஸ்பென்சர் (Contactless Automatic Sanitiser Dispenser) உருவாக்கியுள்ளது. கார், வேன், பேருந்து, ஆட்டோ ரிக்ஷா போன்ற வாகனங்களில் இதைப் பொருத்திக் கொள்ளலாம்.
இந்த வடிவமைப்பு ஏசி மற்றும் டிசி மின்சார பயன்பாட்டிதற்கு உகந்தது. திரவம் மற்றும் ஜெல் வடிவில் இருக்கும் சானிடைசர்களை நிரப்பி பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் இந்த டிஸ்பென்சரை உருவாக்குவதற்காக, இதன் மூலப்பொருட்கள் சிறப்பு கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் என்ஜினியரிங் டிசைன் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் கவிதா அருணாச்சலம் தலைமையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவர் சென்னையைச் சேர்ந்த Shima Engineering நிறுவனத்தின் ஜி.ஆனந்த்ராஜ், டி.ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து இத்திட்டம் தொடர்பாக பணியாற்றியுள்ளார்.
இக்குழுவினர் இந்த சாதனத்தை வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் உருவாக்கியுள்ளனர். வணிக ரீதியாக செயல்படுவது தொடர்பாக ஏற்கெனவே பலர் ஆர்வம் காட்டியுள்ளனர். தயாரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் செயல்முறையில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் ஆரம்பப்புள்ளி குறித்து ஐஐடி மெட்ராஸ் என்ஜினியரிங் டிசைன் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் கவிதா அருணச்சலம் கூறும்போது,
“2020-ம் ஆண்டு மார்ச் மாத மத்தியில் ஷிமா என்ஜினியரிங் நிறுவனம் தொடர்பற்ற சானிடைசர் டிஸ்பென்சர் உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு தொடர்பற்ற தனிநபர் சுகாதாரப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதை முன்னரே கணித்திருந்தேன். வெவ்வேறு பயனர்களுக்கு ஏற்றவாறு முன்வடிவத்தை உருவாக்க நான் வழிகாட்டினேன்,” என்று குறிப்பிட்டார்.
டாக்டர் கவிதா அருணாச்சலம் மேலும் கூறும்போது,
“எங்கள் திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் கோவிட்-19 திட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் சேஷாத்ரி சேகர் ஒப்புதல் அளித்தார். ஐஐடி மெட்ராஸ் சென்ட்ரல் வொர்க்ஷாப் இந்த முயற்சிக்கு ஆதரவளித்தது. நாங்கள் சில டிஸ்பென்சர்களை உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் உணவுக் கூடம் மற்றும் மருத்துவமனையிலும் ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் உள்ளிட்ட வளாகத்தின் மற்ற பகுதிகளிலும் நிறுவினோம்,” என்றார்.
இந்த சாதனம் 3 வினாடிகளில் 3 மி.லிட்டர் அளவிற்கு சானிடைசரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்த உகந்தது.
இந்த சாதனத்தின் முன்வடிவம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐஐடி வளாகத்திற்குள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகளைக் கண்காணித்துப் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் டிசைன் உருவாக்கப்பட்டது.
தனிநபர் சுகாதாரம் தொடர்புடைய பொருட்கள் மட்டுமல்லாது வகுப்பறைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டிடங்கள் போன்ற இடங்களில் கிருமி நீக்கம் செய்ய உதவும் பொருட்களையும் உருவாக்க ஐஐடி மெட்ராஸில் இன்குபேஷன் ஆதரவு பெறுவதற்கான செயல்முறையில் ஷிமா என்ஜினியரிங் ஈடுபட்டுள்ளது.