பட்டனை தட்டினால் எழுந்து நிக்கலாம் - ‘எலக்ட்ரிக் ஸ்டாண்டிங் சக்கர நாற்காலி’ உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்!
இதுவரை உட்கார்ந்து மட்டுமே பயணிக்கக்கூடிய வீல் சேர்களுக்கு மாற்றாக ஒரு பட்டனைத் தட்டினாலே எழுந்து நிற்க உதவக்கூடிய வகையிலான வீல் சேரை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்துள்ளது.
இதுவரை உட்கார்ந்து மட்டுமே பயணிக்கக்கூடிய வீல் சேர்களுக்கு மாற்றாக ஒரு பட்டனைத் தட்டினாலே எழுந்து நிற்க உதவக்கூடிய வகையிலான வீல் சேரை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ், இந்திய தொழில்நுட்பக் கழகம், சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களின் நலனுக்காக இந்தியாவின் மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய சக்கர நாற்காலியான 'நியோஸ்டாண்ட்' (NeoStand) எனப்படும் எலெக்ட்ரிக் ஸ்டாண்டிங் வீல் சேரை தயாரித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், உயரதிகாரிகள், இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் மற்றும் இந்த மறுவாழ்வு சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
’நியோஸ்டாண்ட்’ என்பது மோட்டார் உதவியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவக்கூடிய சக்கர நாற்காலியாகும். வீல் சேரின் கீழ்புறம் உள்ள பட்டனைத் தொட்டால் பயனர்கள் உட்கார்ந்திருப்பதில் நிலையில் இருந்து எளிதாக நிற்கும் நிலைக்கு மாறலாம்.
கையால் இயக்கக்கூடிய ‘அரைஸ்’ (Arise) என்ற இந்தியாவின் முதலாவது சக்கர நாற்காலி, ‘நியோபோல்ட்’ எனப்படும் இந்தியாவின் முதலாவது மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி போன்ற திட்டங்களுக்குத் தலைமை வகித்த ஐஐடி மெட்ராஸ் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் (TTK Center for Rehabilitation Research and Device Development - R2D2) தலைவரான பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஐஐடி மெட்ராஸ்-ன் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான நியோமோஷன் மூலம் இந்த சாதனம் வணிகரீதியாக சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில்,
"இவை ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களால் வழிநடத்தப்படும் மிக முக்கியமான ஆராய்ச்சிப் பணிகள், அவை பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்றார்.
நியோஸ்டாண்ட் பயன்கள்:
பயனர்களை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நியோஸ்டாண்ட் சக்கர நாற்காலிக்கான புரட்சியாக கருதப்படுகிறது. ஏனெனில், இதுவரை வீல் சேர் என்பது மாற்றுத்திறனாளிகள் உட்காருவதற்காகவே வடிவமைக்கப்படிருந்த நிலையில், தற்போது வசதியாக நிற்கும் வகையிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தடையற்ற மாற்றம் பயனர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக பங்கேற்பை மேம்படுத்த உதவும்.
எழுந்து நிற்பது சிறந்த இரத்த ஓட்டம் மற்றும் செரிமானத்திற்கு அவசியம், அழுத்த புண்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு முக்கியமானது.
தற்போது, பயனர்கள் பெரும்பாலும் வெளிப்புற உதவியைச் சார்ந்து இருக்கிறார்கள் மற்றும் சிலர் ஆர்த்தோசிஸைப் பயன்படுத்த வேண்டும். மேல் உடல் வலிமையை சமரசம் செய்துள்ள கடுமையான குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும், நார்மல் சக்கர நாற்காலிகள் போதுமான வசதிகளைக் கொண்டதாகவும் இல்லை.
ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியரான பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன் கூறும்போது,
“சக்கர நாற்காலியில் நிற்கும் செயல்பாட்டை ஒருங்கிணைப்பதால் உடல் ஆரோக்கியம், இயங்குநிலை, உளவியல் ரீதியாக நன்மைகள் கிடைக்கின்றன. எங்களின் முதல் கண்டுபிடிப்பான அரைஸ் என்ற நிற்கும் நாற்காலி, குறைந்த விலையில் குறிப்பாக கிராமப்புற பயனர்களுக்கு நிற்கவும், குறுகிய தூரத்திற்கு வெளிப்புற இயக்கத்திற்கு ஏற்றவகையிலும் வடிவமைக்கப்பட்டது,” என்றார்.
ஐஐடி மெட்ராஸில் உள்ள குழு, சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் இந்த சவாலைச் சமாளிக்கத் தொடங்கியது. பயனர்களின் சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இன்னுமொரு சாதனத்தை வழங்க குழு உறுதிபூண்டுள்ளது.
Tata Elxsi அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் கீழ் நியோஸ்டாண்டை உருவாக்க நிதியுதவி செய்துள்ளது. மேம்பாடு மற்றும் வடிவமைப்பு ஐஐடி மெட்ராஸில் உள்ள புனர்வாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான TTK மையம் (R2D2) மற்றும் நியோமோஷனால் வழிநடத்தப்பட்டது. மேலும், வீல் சேரை சந்தைக்குக் கொண்டு வருவதிலும் இந்நிறுவனம் முன்னணியில் பணியாற்றியுள்ளது.