முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி 67 பில்லியன் டாலருடன் 9வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் 2019ல் புதிதாக 34 பில்லியனர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
2019-ம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மூன்று பில்லியனர்கள் உலகப் பணக்காரர் பட்டியலில் இணைத்துள்ளனர். இதனால் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2020 ஒன்பதாவது பதிப்பில் உலகம் முழுவதும் இருந்து ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்பு கொண்ட 2,817 தனிநபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதன்படி 2019ம் ஆண்டில் உலகம் முழுவதும் இருந்து கூடுதலாக 480 பில்லியனர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றிற்கு ஒரு நபருக்கும் அதிகமாக பட்டியலில் இணைந்துள்ளனர்.
சீனாவில் ஒரு வாரத்திற்கு மூன்று நபர்களுக்கு மேல் இணைந்துள்ளனர். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மூன்று பில்லியனர்களுக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
இந்தியாவில் 34 புதிய பில்லியனர்கள் இணைந்து மொத்த எண்ணிக்கை 138-ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முன்னிலையில் உள்ளார். இவரது நிகர மதிப்பு 67 பில்லியன் டாலர். இவர் ஒவ்வொரு மணி நேரமும் 7 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் இணைத்துக்கொண்டால் இந்த எண்ணிக்கை 170-ஆக இருக்கும்.
சீனா 799 பில்லியனர்களுடன் முதல் இடத்திலும் அமெரிக்கா 626 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு எண்ணிக்கையைக் காட்டிலும் சீனாவில் அதிக பில்லியனர்கள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனா ஏற்கெனவே 2,710-க்கும் அதிகமானோரை பலியாக்கியுள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் நிலையில் இந்த ஆண்டு மருந்துத் துறையைச் சேர்ந்த பல பில்லியனர்கள் இந்தப் பட்டியலில் இணைய உள்ளனர்.
நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் மும்பையைச் சேர்ந்தவர்கள். 50 பேர் மெகாபொலிஸில் வசிக்கின்றனர். இதனால் இந்தப் பகுதி உலகளவில் ஒன்பதாவது பணக்கார நகரமாக உள்ளது. இதையடுத்து 30 பேருடன் புதுடெல்லியும் 17 பேருடன் பெங்களூருவும் 12 பேரும் அகமதாபாத்தும் இடம்பெற்றுள்ளது.
அம்பானி 67 பில்லியன் டாலருடன் உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 140 பில்லியன் டாலருடன் முதலிடம் வகிக்கிறார்.
இந்தப் பட்டியலில் எஸ்பி ஹிந்துஜா 27 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து 17 பில்லியன் டாலர் மதிப்புடன் கவுதம் அதானியும் கிட்டத்தட்ட அதே 17 பில்லியன் டாலர் மதிப்புடன் ஷிவ் நாடாரும் 15 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடன் லஷ்மி மிட்டலும் உள்ளனர்.
கோடாக் மஹிந்திரா வங்கியின் உதய் கோடாக் 15 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார். 14 பில்லியன் டாலருடன் அசிம் பிரேம்ஜி ஏழாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சீரம் இன்ஸ்டிட்யூட் சைரஸ் பூனாவாலா (12 பில்லியன் டாலர்), சைரஸ் பல்லோஞ்சி மிஸ்ட்ரி மற்றும் அவரது மகன் ஷபூர் பல்லோஞ்சி (ஒவ்வொருவரும் 11 பில்லியன் டாலர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஓயோ நிறுவனரான 24 வயதே நிரம்பிய ரித்தேஷ் அகர்வால் 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இளம் பணக்கார இந்தியராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சந்தையில் காணப்படும் மந்தநிலையானது இந்திய பில்லியனர்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்று ஹரன் ரிப்போர்ட் இந்தியா நிர்வாக இயக்குநர் அனாஸ் ரஹ்மான் ஜுனாயித் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் உலகளவில் பங்குச் சந்தை சிறப்பாகவே இருந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை 26 சதவீத ஏற்றத்தையும் இந்திய பங்குச் சந்தை 15 சதவீதம் ஏற்றத்தையும் சீன பங்குச் சந்தை 14 சதவீத ஏற்றத்தையும் சந்தித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த 50 பில்லியனர்களின் மொத்த மதிப்பு 218 பில்லியன் டாலர் ஆகும். இதைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த 30 பில்லியனர்களின் மதிப்பு 76 பில்லியன் டாலர். பெங்களூருவைச் சேர்ந்த 17 பில்லியனர்களின் மதிப்பு 42 பில்லியன் டாலராக உள்ள நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த 12 பில்லியனர்களின் மதிப்பு 36 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழு பில்லியனர்களின் மதிப்பு 13 பில்லியன் டாலர். இவ்வாறு ஜுனாயித் தெரிவித்துள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: தருஷ் பல்லா | தமிழில்: ஸ்ரீவித்யா