ஒருங்கிணைக்கப்பட்ட வாகனப் பாதுகாப்பு சிஸ்டம் வடிவமைத்துள்ள இந்திய ராணுவ கேப்டன்!
இந்த கருவி வாகன ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருப்பதையும் மது அருந்தவில்லை என்பதையும் உறுதிசெய்கிறது.
இந்திய சாலைகளில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மூன்று பேர் உயிரிழப்பதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆய்வுப் பிரிவு தெரிவிக்கிறது. அதிவிரைவாக செல்வது, மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிமீறல், பாதுகாப்பு கியர் இல்லாமல் பயணிப்பது போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு ஏற்கெனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ப்ரெத் அனலைசர் பொருத்தப்பட்ட கார்கள் அதிகரித்தால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பிரச்சனை கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.
இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒன்கார் காலே ராணுவ ட்ரக் வாகனங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வாகனப் பாதுகாப்பு சிஸ்டத்தை உருவாக்கியுள்ளதாக ’நியூஸ் 18’ தெரிவிக்கிறது.
இந்த கருவியானது, ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருப்பதையும் மது அருந்தவில்லை என்பதையும் உறுதிசெய்கிறது. இதில் ஏதேனும் தவறு இருப்பதை இந்த அமைப்புக் கண்டறிந்தால் வாகனம் புறப்பட அனுமதிக்காது.
இந்த அமைப்பின் மொத்த விலை 10,320 ரூபாய். இதில் சீட் பெல்ட் கண்காணிக்கும் அமைப்பு, Tail Bd கண்காணிப்பு அமைப்பு, ஓட்டுநர் தூங்க நேர்ந்தால் அலாரம் அடிக்கும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதில் விபத்து நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசோதனை செய்யப்படும்.
ராணுவ அதிகாரிகள் தங்களது திறனை வெளிப்படுத்தி புதுமையான கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் ’சர்வத்ரா’ என்கிற குண்டு துளைக்காத கவசத்தை உருவாக்கினார். இது ஸ்னைப்பர் ரக துப்பாக்கியின் தோட்டாக்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கக்கூடியதாகும்.
புனே ராணுவ பொறியியல் கல்லூரியில் மேஜர் அனூப் மிஸ்ரா உருவாக்கிய இந்த கவசம் பத்து மீட்டர் தொலைவில் இருந்து பாயக்கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தோட்டாக்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்கும் திறன்கொண்டது.
இவரது பணி மற்றும் புதுமையான கண்டுபிடிப்பிற்காக ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ரவாத் சமீபத்தில் ’ராணுவ வடிவமைப்பு பணியக சிறப்பு விருது’ (Army Design Bureau Excellence Award) வழங்கினார்.
கட்டுரை: THINK CHANGE INDIA