டிரம்ப் ட்விட்டர் கணக்கை முடிக்கிய இந்தியர் - யார் அவர் தெரியுமா?
விஜயாவை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் ஏற்கெனவே பெருமைபடுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்!
அண்மையில் அமெரிக்காவே பற்றி எரிந்தது. வெள்ளை மாளிகை சூறையாடப்பட்டது. அமெரிக்க கேபிடல் என்ற அந்த கலவரத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து அதேபோல வன்முறையைத் தூண்டும் பதிவுகளை பதிவிட்டதால் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
அதன்காரணமாக டிரம்ப் @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ட்வீட் செய்தார். அந்தப் பதிவுகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.
டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் முடிவை எடுத்த குழுவின் தலைவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயா கடே. ட்விட்டர் நிறுவனத்தின் சட்டம், கொள்கை மற்றும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளின் தலைவராக இருக்கும் விஜயா, இந்தியர்களால் தேடி தேடி அறியப்படுகிறார்.
யார் இந்த விஜயா கடே?
ஹைதராபாத்தில் பிறந்தவர் விஜயா கடே. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர், தனது 3வது வயதில் பெற்றோருடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார். விஜயா கடேவின் தந்தை மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயன பொறியாளராக பணியாற்றியவர்.
நியூ ஜெர்சியில் விஜயா தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை படிப்பு, நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
பின்னர் 2011ம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்ததால், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பு பே ஏரியாவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. அவரது செல்வாக்கு கடந்த பத்தாண்டுகளில் ட்விட்டரை வடிவமைக்க உதவியது.
முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பின்போது உடனே இருந்தார் விஜயா. உதாரணமாக ட்விட்டர் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தபோது விஜயா ஓவல் அலுவலகத்தில் இருந்தார். அதேபோல, 2018ம் ஆண்டு பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, டோர்சியுடன், விஜயாவும் உடனிருந்தார்.
அது மட்டுமல்லாமல், விஜயா கடே ஏஞ்சல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் ஒரு முதலீட்டுத் தொகுப்பு நிறுவனமாகும். இது ஸ்டார்ட்-அப்’களுக்கு துணைபுரிகிறது. அத்துடன், வெற்றிகரமான நிறுவனங்களில் பெண்களுக்கு சமமான உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.
விஜயாவை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் ஏற்கெனவே பெருமைப்படுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
"நீங்கள் கேள்விப்படாத மிக சக்திவாய்ந்த சமூக ஊடக நிர்வாகி" என்று 'பாலிடிகோ' குறிப்பிட்டுள்ளது. இதேபோல், ‘2020 - உலகை மாற்றும் பெண்களை சந்திக்கவும்' என்ற பட்டியலில் விஜயாவை குறிப்பிட்டு பெருமைப்படுத்தியுள்ளது 'தி இன்ஸ்டைல்' பத்திரிகை.”
இத்தனை பெருமைகளுக்கும் உரியவர் தான் விஜயா. வாழ்த்துகள் விஜயா...