இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்!
9 லட்சம் மக்களுக்கு பயன் தரக்கூடிய இந்த அண்டர்வாட்டர் மெட்ரோ ரயில் எங்கு வரப்போகிறது தெரியுமா?
மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா நகரில், நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் அமைய உள்ளது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் இந்த ரயில் திட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைய உள்ளது.
கொல்கத்தா நகரில் நாட்டின் மிகவும் பழையமையான மெட்ரோ ரயில் சேவை 1984ம் ஆண்டு துவங்கியது. நகரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் இயங்கி வருகிறது.

மாதிரி படம்
இதன் தொடர்ச்சியாக, 2014ம் ஆண்டில் மெட்ரோ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருந்தது. எனினும் பல்வேறு காரணங்களினால் இதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் திட்ட செலவும் அதிகரித்தது. சிக்கல்கள் காரணமாக, மொத்த திட்டச் செலவு 14 கி.மீ.க்கு 4900 கோடி ரூபாயிலிருந்து 17 கிலோமீட்டருக்கு சுமார் 8600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நகரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டில் இது முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நகரின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்காக கொல்கத்தா நகரின் அடையாளச் சின்னமாக அமைந்திருக்கும், ஹூக்லி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் சுரங்க பாதை அமைக்க உள்ளது. நாட்டிலேயே நீருக்கடியில் முதல் முறையாக அமையும் மெட்ரோ ரெயில் சேவையாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்திற்காக இந்திய ரயில்வே வாரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் வழங்க உள்ளது என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் மனஸ் சர்க்கார் தெரிவித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடமிருந்து 41 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அளித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் தினசரி சுமார் 900,000 மக்களை மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நகரில் பாய்ந்து செல்லும், ஹுக்ளி ஆற்றில் 520 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் சுரங்கப்பாதை வாயிலாக அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் பாதையை கடக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.
தற்போது, படகு மூலம் ஆற்றை கடக்க 20 நிமிடங்கள் ஆகிறது. ஹவுரா பாலத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இந்நிலையில், கிழக்கு–மேற்குப் பகுதிகளை இணைக்கும் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் திட்டம், நகர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.
தொகுப்பு: சைபர்சிம்மன்

