‘இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி’ - Dr.விஜயலட்சுமி ரமணன் பற்றி தெரியுமா?
1955-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த டாக்டர் விஜயலட்சுமி ரமணன் 1971-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் விஜயலட்சுமி ரமணன் இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி ஆவார். இவரது அப்பா முதலாம் உலகப் போர் வீரராரகவும் பொது சுகாதார அதிகாரியாகவும் இருந்தவர்.
டாக்டர் விஜயலட்சுமி 1924ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். 1943-ம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். 1955-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 1971-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2022-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்திய விமானப் படையில் 1,640 பெண் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

”ஆரம்பத்தில் சில ஆண்டுகள் வரை இந்திய விமானப் படையில் நான் மட்டுமே பெண் அதிகாரியாக இருந்தேன். ஆரம்ப நாட்களில் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பயமாக இருந்தது. ஆனால், எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற துணிச்சலை வரவழைத்துக்கொண்டேன்,” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
முன்பு ராஜ்ய சபா டிவி (தற்போது சன்சத் டிவி) நேர்காணல் ஒன்றில் டாக்டர் விஜயலட்சுமி பேசியபோது,
”நான் எப்போதும் அவசர காலத்திற்கு தயாராக இருக்கவேண்டும். இரவு நேரமாக இருந்தாலும் பொருட்படுத்தக்கூடாது. அழைப்பு வந்ததும் என்னை கூட்டிச் செல்ல வரும் ஆம்புலன்ஸுக்காக தயாராக காத்திருப்பேன். வந்ததும் விரைந்து ஏறி சென்றுவிடுவேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் விஜயலட்சுமி ரமணனின் கணவரும் இந்திய விமானப் படை அதிகாரி. அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் விஜயலட்சுமி விண்ணப்பித்திருக்கிறார்.
இந்திய விமானப் படையில் அதுவரை பெண் அதிகாரிகள் பொறுப்பேற்றதில்லை. முதல் முறையாக டாக்டர் விஜயலட்சுமி சேர்ந்ததும் சீருடை உட்பட அங்கு உடனடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. விஜயலட்சுமி நீல நிறத்தில் புடவையும் ரவிக்கையும் சீருடையாக அணிந்துகொண்டார். தற்காலிகமாக அவர் செய்த இந்த ஏற்பாடு இந்திய விமானப் படையில் சேரும் பெண்களுக்கான சீருடையாக மாறிவிட்டது.
சீருடை குறித்து அவர் மற்றுமொரு நேர்காணலில் குறிப்பிடும்போது,
”எனக்கு மேஜர் ரேங்க் கிடைத்தது. இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள மற்ற பெண் அதிகாரிகள் பேண்ட் அணிந்துகொள்வார்கள். ஆனால் நான் புடவை அணிந்து, முழுக்கை ரவிக்கை அணிந்திருந்தேன். முழுக்கை ரவிக்கை அணிந்து என்னால் மருத்துவ அதிகாரியாக பணியாற்ற முடியவில்லை. தலைமையக அலுவலகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்து முக்கால் கை ரவிக்கை அணிந்துகொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அதுவும் வசதியாக இல்லை, குறிப்பாக பிரசவம் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. அப்போதுதான் ஆண்களைப் போல் சட்டையை மடித்துவிட்டு பணியாற்றுகிறேன் என்று கூறினேன்,” என்று பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவின் இராணுவ மருத்துவமனைகளில் மகளிர் நல மருத்துவராக பணியாற்றிய டாக்டர் விஜயலட்சுமி ரமணன் 1962, 1966, 1971-ம் ஆண்டு என போர் நடந்த காலகட்டத்தில் அதிகாரிகளுக்கு மருத்துவ பராமரிப்பு வழங்கியிருக்கிறார். இராணுவ அதிகாரிகளிடையே குடும்பக் கட்டுப்பாடு பற்றியும் ஊக்குவித்திருக்கிறார்.
ஜலஹல்லி, கான்பூர், செகந்திராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள ஆயுதப்படை மருத்துவமனைகளிலும் இவர் சேவையளித்திருக்கிறார். இந்த சமயத்தில் நர்ஸ்களுக்கு மகப்பேறு மற்றும் மகளர் மருத்துவம் பற்றி பயிற்சியளித்திருக்கிறார்.
டாக்டர் விஜயலட்சுமியின் சேவை அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு ’விஷிஸ்ட் சேவா’ விருது வழங்கப்பட்டது.
1979-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு ஒரு கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். பெரும்பாலும் இலவச சிகிச்சை அளித்துள்ளார். இவர் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவர். 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் ஆர்டிஸ்டாக பணியாற்றியிருக்கிறார்.
2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பெங்களூரு ஜெயநகரில் இருக்கும் தனது மகளின் வீட்டில் டாக்டர் விஜயலட்சுமி ரமணன் உயிரிழந்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா

