6 வயதில் உறுப்பினர்; 21 வயதில் மேயர்; இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்!
நாட்டிலேயே இளம் மேயர்; வரலாற்று படைத்த மாணவி
இந்தியாவிலேயே மிகச் சிறிய வயதில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன். அவருக்கு வயது 21. இது தொடர்பாக அவரிடம் சொன்னபோது, காலேஜ் நண்பர்கள் தன்னை ப்ரான்க் செய்வதாக நினைத்துக்கொண்டு இதை பெரிதாக ஆர்யா எடுத்துக்கொள்ளவில்லை.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு புது வரலாற்றை உருவாக்கியிருக்கிறார் ஆர்யா ராஜேந்திரன். திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் சைன்ட்ஸ் கல்லூரி இளங்கலை கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் ஆர்யா, இந்த வாய்ப்பு வரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இதற்கு முன்னதாக அலகாபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் குப்தா நந்தினி தான் நாட்டிலேயே இளம் மேயர் என்ற பெருமையை பெற்றிருந்தார். 23 வயதில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபிலாஷ் குப்தா. இந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார் 21 வயதான ஆர்யா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன். அவரது அப்பா கே.ராஜேந்திரன், எலக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்ட். ஆர்யாவின் மூத்த சகோதரர் மேற்கு ஆசிய நாட்டில் வேலை செய்கிறார்.
"இளம் வயதில் நான் அரசியலுக்குள் நுழைந்துவிட்டேன். கட்சி எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும், நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்,” என்கிறார் அவர்.
அண்மையில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையான மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள் மற்றும் தொகுதி அமைப்புகளை வென்றது, ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. இந்த சூழலில் மாநகராட்சி மேயர் என்ற மதிப்புமிக்க பொறுப்பை இளம் பெண்ணுக்கு கொடுத்து அழகு பார்த்துள்ளது அக்கட்சி. இது பல்வேறு தரப்பினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புடன் தனது படிப்பைத் தொடர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
"என் வார்டில் உள்ளவர்கள் எனக்கு ஒரு மிகபெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். மக்கள் சேவையுடன் எனது படிப்பையும் தொடருவேன்,” என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யா ராஜேந்திரன் ஒன்றும் புதிதாக கட்சியில் சேர்ந்தவரல்ல. அவர் தனது 6 வயதிலேயே குழந்தைகளுக்கான அமைப்பான, பாலசங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தவர். இப்போது அவர் அதன் மாநிலத் தலைவராகவும், கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலக பொறுப்பாளராகவும் உள்ளார்.
தொகுப்பு: மலையரசு