ஊக்கமிகு பேச்சுகள்... உற்சாகம் அளித்த விருதுகள்... களைக்கட்டியது யுவர்ஸ்டோரி மதுரை விழா!
வளர்ந்துவரும் சிறு, குறு வணிகங்களுக்கும், ஸ்டார்ட் அப்களுக்கும் பெரும் வெளிச்சமோ, வெகுஜன மக்களின் அங்கீகாரமோ பெரிய அளவில் கிடைப்பதில்லை. எங்கேனும் நடக்கும் அவர்களது விழாக்களை பற்றிய துண்டு செய்தியோடு பத்திரிக்கைகளும் அதன் பங்கை முடித்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், அவர்களுடைய கதைகளை வெளிகொணர்ந்து உலகம் அறிய செய்திடுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுவர்ஸ்டோரியின் பத்தாண்டு நிறைவில், கதையாளர்களை கொண்டாடுவதற்காக, ஏற்படுத்தபட்டதே ‘தமிழ்நாடு ஸ்டோரி’ விழா...
பெரும் தொழில் முனைவோர்களை ஒரே மேடையில் ஒன்று திரட்டி ஒவ்வொரு மாவட்டமாய் அரங்கேறி வரும் கருந்தரங்கு, பிப்ரவரி 02, 2019 அன்று மதுரையில் உள்ள கோர்ட்யார்டு மாரியட் ஓட்டலில் 'Secret to scaling up in 2020' என்ற தலைப்பில் வெகு சிறப்பாய் நடந்து முடிந்தது.
யுவர்ஸ்டோரி தமிழ்நாடு பிசினஸ் ஹெட் ஹனியின் ஸ்வீட் வெல்கமோடு தொடங்கியது விழா. தொடர்ந்து விழாவை சிறப்பிக்கவும், தொழில் முனைவோர் கனவோடு விழாவில் பங்கேற்றவர்களுக்கு உற்சாகத்தை அள்ளிதரவும் நேச்சுலர்ஸ் சலூன் நிறுவனர் சிகே. குமாரவேல், மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித் குமார், நேடிவ் லீட் நிறுவனர் சிவராஜா ராமநாதன், தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குநர் பிஏ ரமேஷ், ஆகியோர் பங்குக் கொண்டு 2020க்குள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ரகசியங்களை பகிர்ந்து கொண்டனர்.
அரங்கில் குழுமியிருந்தவர்களுக்கு சிந்தனைத் தீனி போட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நேச்சுலர்ஸ் சலூன் நிறுவனர் சிகே. குமாரவேல், குட்டி குட்டி கதைகளுடன் தொழிலில் முன்னேறுவதற்கான பார்மூலாக்களை கூறியவர், 7 விதிகளை முன்வைத்தார்.
- எதிர்காலம் குறித்து கனவு காணுங்கள். ‘நல்ல ஆழ்ந்த தூக்கத்தின் போது வரும் கற்பனைகள் கனவுகள் அல்ல. ஒரு உண்மையான கனவு உங்களது தூக்கத்தை கெடுத்து அதன்பின் ஓடச் செய்ய வேண்டியதாக இருக்கவேண்டும்’ என்றார் அப்துல்கலாம். அது தான் உண்மையான கனவு.
- உன்மீது நம்பிக்கைக் கொள்.
- உனக்கான இலக்கை நிர்ணயி.
- உங்கள் இலக்கை எட்டிவிட்டதாய் கனவு காணுங்கள்.
- சிந்தையில் உள்ள இலக்கிற்கு வடிவம் கொடுத்து செயலாக்கு.
- எதிர்மறை விமர்சனங்களை வரவேற்று, தவறை திருத்திக் கொள்.
- நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தான் தோல்வியடையுமே தவிர, நீங்கள் தோல்வி அடையவில்லை. சோ, ’Never Ever Give Up’
குமாரவேலின் பேச்சை கேட்டு புத்துணர்ச்சி அடைந்த பார்வையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் குடித்த அனுபவத்தை கொடுத்த நேடிவ் லீட்டின் நிறுவனர் சிவராஜா ராமநாதன்,
“இளம் தொழில் முனைவோர்களும், ஸ்டார்ட் அப்களுக்கும் தொழில் வளர்ச்சிக் காண "Scale= bsquare +psquare +msquare' என்ற பார்மூலாவை உபயோகித்து பாருங்கள்,” என்று கூறி அதற்கான விளக்கத்தினையும் தெளிவாய் கூறினார்.
“இதில் B என்பது branding-யும், P என்பது, People-யும், M என்பது business Model யும் குறிக்கும். பிராண்டிங்கில் இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். உங்களது டார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கும் உங்களது பிராண்டுக்கும் இடையே எமோஷனல் கனெக்ஷன் இருக்கவேண்டும். உங்களது பிராண்டின் ஏதாவது ஒரு கேட்டகரியில் முதலாவதாக இருத்தல் அவசியம்.
அடுத்ததாய், நிறுவனரது தொலைநோக்குப் பார்வை சரியானதாய் இருக்க வேண்டும். அதை, அவருடைய தொழிலாளர்களுக்கும் கடத்த வேண்டும். கடைசியாக, பிசினஸ் மாடல் சரியானதாக வரையறை செய்ய வேண்டும்,” என்றார்.
இவரைத் தொடர்ந்து மதுரை மக்களின் அபிமானமிக்க நகைக்கடை என்ற பெயரை பெற்ற தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர் பிஏ ரமேஷ், அவருடைய தொழில் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
”தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு திட்டமிடலே,” என்றார்.
“நான் தொழிலுக்கு வந்தபிறகு, எங்களுடைய துறையை பற்றியும், இந்தியாவில் அதன் வணிகம் எப்படியிருக்கிறது. தமிழகத்தில் அதன் நிலை என்ன? இதில் எங்கள் நிறுவனம் எந்த உயரத்தில் இருக்கிறது. இத்தொழிலில் உள்ள சாதக பாதகங்களையும் அலசி ஆராய்ந்தோம். எங்களுடைய தவறுகளை ஒன்று ஒன்றாக சரி செய்தோம். இன்று 35 ஷோரூமோடு 1400 தொழிலாளர்களுடன் 1500கோடி ரூபாய் டெர்ன் ஓவருடன் எங்களது நிறுவனம் சிறப்பாய் செயல்படுகிறது,” என்றார்.
வெற்றி பெற்றவர்களின் கதைகளை கேட்பதில் மெய் மறந்து அமர்ந்திருந்த 300க்கும் அதிகமான பார்வையாளர்கள், மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித்தின் வருகைக்கு பின்னர் விசில் சத்தங்களால் அரங்கை நிரப்பி, மதுரையின் கெத்தை காட்டினர். ஏனெனில் பரந்த மேடையில், ஒற்றை மைக்குடன், அரங்கத்தினரை ஹாசிய பேச்சால் வசீகரிக்கும் பேச்சைக் கொண்டிருந்தார் சுஜித்.
பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குசேர வழியின்றி, தவிக்கும் மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கும் ‘மாற்றம் பவுண்டேஷன்’, இதுவரை 677மாணவ, மாணவிகளை உயர்கல்வி படிக்க வைத்திருக்கிறது. அதன் நிறுவனரே சுஜித் குமார், தவிர அவர் இன்ஃபோசிசின் ஹெச்.ஆர். நிர்வாகியும் கூட.
இவர் பல கல்லூரிகளுக்கு பேச்சாளராக சென்றிருக்கிறார். அப்படியொரு முறை மதுரை மண்ணுக்கு வந்திருந்த போதே மாற்றத்திற்கான விதை விழுந்துள்ளது. அவர் பேசியதில் முக்கியமான கூற்று,
“பெரும் நிறுவனங்கள் அற்புதமான ஊழியர்களால் உருவாக்கப்படுகின்றன. நிறுவனரின் நோக்கம் அதிமுக்கியம் தான் என்றாலும், அந்நோக்கம் கடைநிலை ஊழியர்களிடமும் இருத்தல் அவசியம். பணியாளர்களாலே ஒரு நிறுவனம் அழகு பெறுகிறது. அதனால், நிறுவனங்கள் ஊழியர்கள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். அவர்களுடைய எக்ஸ்ட்ரா ஆர்டினரி பணியாளர்களை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்,” என்றார்.
சுஜித்தை தொடர்ந்து, பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது. அதில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விருந்தினர்கள் பதில் அளித்தனர்.
யுவர்ஸ்டோரி-ன் ‘தமிழ்நாடு ஸ்டோரி’ விழாவின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் ஜோஹோ நிறுவன சார்பாக அதன் கொள்கை பரப்பாளர், குப்புலஷ்மி உடன் யுவர்ஸ்டோரி ஆசிரியர் தன்வி துபே உரையாடல் நடத்தினார். அதில், ’தொழிலின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஜோஹோ தொடக்க நிறுவனங்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் எவ்வித தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது என்று பேசப்பட்டது. அது பற்றி விளக்கிய குப்புலஷ்மி,
“ஜோஹொ 40க்கும் அதிகமான தரமான தொழில்நுட்பச் சேவைகளை குறைந்த கட்டணத்தில், தொழில்முனைவோர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கு புரிந்த மொழியில் வழங்குகிறோம். ஒரே ஒரு ஊழியரை கொண்ட நிறுவனம் முதல் 15 ஆயிரம் ஊழியர்கள் கொண்ட நிறுவனம் வரை எங்களின் சேவையை பயன்படுத்தி தொழில் வளர்ச்சி பெற்றுள்ளனர்,” என்றார்.
ஸ்டார்ட் அப்’கள் பொதுவாக தொழில்நுட்பத்துக்கு அதிக செலவு செய்ய முடியாத நிலையிலும், நிறுவனர் ஒருவரே நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் செய்யவேண்டியதன் நிலையை புரிந்து கொண்டு ஜோஹோ தங்களின் தொழில்நுட்ப சேவையை வடிவமைத்துள்ளதாகவும் குப்புலஷ்மி பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மண்ணில் உருவாகி, பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ள நிறுவனங்களின் நிறுவனர்களுக்கு யுவர்ஸ்டோரி விருது வழங்கி கவுரவித்தது.
’Inspiring entrepreneur' அதாவது ‘ஊக்கமளிக்கும் தொழில்முனைவர்’ விருது; அனில் மார்க்கெடிங் நிர்வாக இயக்குனர் என்.சுகுமாரன், தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பிஏ ரமேஷ் மற்றும் அபராஜிதா கார்ப்பரெட் சர்வீசஸ் நிறுவனர் நாகராஜ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. அடுத்து, ‘Rising Entrepreneur' அதாவது வளர்ந்துவரும் தொழில்முனைவர் விருது; Suxux Menswear நிர்வாக பார்ட்னர் ஃபைசல் அஹமத் மற்றும் கமலம் க்ரூப் நிறுவனர் ஜேகே முத்து உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ‘Ecosystem Enabler' விருது, நேடிவிலீட் பவுண்டேஷன் மற்றும் YES(Young Entrepreneur School) வழங்கி கவுரவித்தது யுவர்ஸ்டோரி.
கோலாகலமாக நிறைவடைந்த யுவர்ஸ்டோரி ‘Tamil Nadu Story' விழாவை அடுத்து இனி தமிழக தொழில்முனைவோர் கதைகளை அதிகளவில் பதிவிட உள்ளது யுவர்ஸ்டோரி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.