சவுதியில் மரண தண்டனையில் சிக்கிய நபரை மீட்க ரூ.34 கோடி திரட்டி காப்பாற்றிய கேரள மக்கள்!
தெரியாமல் செய்து விட்ட ஒரு தவறுக்காக சவுதியில் மரண தண்டனை பெற்ற கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரை கேரள மக்கள் ரூ.34 கோடி நிதிதிரட்டி காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
தெரியாமல் செய்து விட்ட ஒரு தவறுக்காக சவுதியில் மரண தண்டனை பெற்ற கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரை கேரள மக்கள் ரூ.34 கோடி நிதிதிரட்டி காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
2006-ம் ஆண்டு கேரளாவிலிருந்து அப்துல் ரஹீம் சவுதி சென்றார். அங்கு அவருக்கு அப்துல்லா என்பவரது வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. கூடுதல் பொறுப்பாக அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் ரஹீமுக்கு அளிக்கப்பட்டது. அங்குதான் ரஹீமின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது.
ஒரு நாள் அப்துல்லாவின் மகனை ரஹீம் காரில் அழைத்துச் சென்றார். அப்போது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைச் சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டு விட்டது. இதனையடுத்து, அப்துல்லாவின் மகன் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக இறந்தே போனான்.
சட்டத்தின் பார்வையில் அது கொலை. ஆனால், நடந்ததோ விபத்து என்று பல்வேறு அமைப்புகள் ரஹீம் சார்பாக வாதிட்டும் பயனில்லை. ரஹீமுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிறகு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
ரஹீம் தரப்பு கூறுவது என்னவெனில் சிக்னலில் கார் நின்ற போது சிக்னலை மீறிச்செல்லுமாறு அப்துல்லாவின் மகன் சொன்னதாகவும் அப்போது ரஹீமின் கை தெரியாமல் அப்துல்லா மகனின் செயற்கைச் சுவாசக்குழாய் மீது பட்டதாகவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
சவுதியில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சில தெரிவுகள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் கேட்பதைக் கொடுத்தால் விடுதலை சாத்தியம். ரஹீம் விவகாரத்திலும் மகனை இழந்த பெற்றோர் முதலில் மரண தண்டனை கோரினர், பிறகு மனமிரங்கி நஷ்ட ஈடாக அதாவது, Bloody Money ரூ.34 கோடி கொடுத்தால் மன்னிப்பு அளிப்பதாக மனமுவந்தனர். அதுவும் ஏப்ரல் 18ம் தேதிக்குள் ரூ.34 கோடியை செலுத்த வேண்டும். செலுத்தினால் மரண தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற நிலை ஏற்பட்டது.
18 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று மரணத்தின் வாயிலில் நிற்கும் ரஹீமுக்கு உதவ ஒட்டுமொத்த கேரள மக்களும் முன் வந்தனர். இதற்காக நவீன பொது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர். ‘சேவ் அப்துல் ரஹீம்’ என்னும் மொபைல் செயலியையும் ஐந்து வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்கினர்.
ஆனால், கிரவுட் ஃபண்டிங்கும் இருபது நாட்களுக்கு முன்பு வரைகூட மந்தமாகவே இருந்தது. வெறும் ரூ.2 கோடி அளவுக்குத்தான் திரட்ட முடிந்தது. ஆனால், வாட்ஸ் அப் குழுக்களில் முறையீடுகள் வலுக்க நிதி திரட்டல் வேகம் பிடித்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டு விட்டதாக அறித்தனர். தவற்றால் நிகழந்த இறப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த கேரளமும் திரண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனை பெற்ற இந்தியரின் உயிரை 1 கோடி கொடுத்து காப்பாற்றிய பிரபல தொழிலதிபர்!