'மனிதநேயம் ஓங்கட்டும்!’ – ஷேவாக் பகிர்ந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது?
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்-கும் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்!
கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தடுப்பூசி விநியோகம், குறைந்து வரும் கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைக்குரிய விஷயங்களுடன் தொடங்கியிருக்கிறது 2021.
இதுபோன்ற நம்பிக்கைகள் தான், வருடத்தில் நிகழும் எதிர்பாராத துர்சம்பவங்களை எதிர்கொள்ளும் மனவலிமையைத் தருகின்றன. 2020ல் பல்வேறு கடினமான நிகழ்வுகள் அரங்கேறியிருந்தாலும், மனிதமும், அன்பும் தான் தொடர்ந்து ஓட வைத்தது. அதுபோலத்தான் இந்த வீடியோவும்…
’சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு...’ என்ற பாடல்வரிகளுக்கு ஏற்ப, இருந்தது அந்த வீடியோ. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து பலரும் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்-கும் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

டெல்லியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பாலம் ஒன்றில் ரிக்ஷாவை ஒருவர் தள்ளிக்கொண்டு செல்கிறார். கஷ்டபட்டுக்கொண்டு இழுக்க முடியாமல் இழுத்துச்செல்லும் அவருக்குத் துணையாக, பின்னாள் வரும் அவரது மனைவி ரிக்ஷாவை இழுக்க கஷ்டப்படும் கணவருக்கு உதவி செய்யும் வகையில் பின்னாளிலிருந்து உந்தித் தள்ளுகிறார். இந்த வீடியோ யூடியூப்பிலிருந்து டவுன்லோடு செய்யபட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தனது யூடியூப் சேனலான என்.சி.ஆர் பைக்கர்ஸை நடத்தி வரும் ‘ரம்மி ரைடர்’ என்ற பெயரிடபட்டுள்ள பைக்கர் ஒருவர், அந்த தம்பதியினர் பாலத்தில் மிகுந்த சிரமத்துடன் ரிக்ஷாவை தள்ளிக்கொண்டு செல்வதைக்கண்டவர், தம்பதியினரை அணுகி அவர்களுக்கு உதவ முன்வந்தார். ரிக்ஷாவை உந்தித்தள்ளும் பெண்ணை, ரிக்ஷாவில் போய் அமருமாறு கூறிவிட்டு, பைக்கில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய கால்களைக்கொண்டு, பைக்கின் வேகத்தை பயன்படுத்தி ரிக்ஷாவை முன்னேறிச்செல்ல உதவியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ’மனிதநேயம் ஓங்குக!’ என்று பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவை ஒரே நாளில் 2லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் யூடியூப்பில் பார்த்துள்ளனர். இந்த வீடியோவில் நேரம் மற்றும் சரியான இடம் ஆகியவை குறிப்பிடபடவில்லை. ஆனால், பலரும் ரிக்ஷாவை இழுத்துச் செல்லும் கணவருக்கு உதவியாக நின்ற மனைவியையும், அந்த தம்பதியினருக்கு உதவி செய்த பைக்கரையும் பாராட்டி வருகின்றனர். சிலர், தங்கள் வாழ்வில் நடந்த சுவராஸ்ய சம்பவங்களையும் இதன்மூலம் மேற்கொள் காட்டியுள்ளனர்.

