'பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது' - பாலியல் சீண்டலுக்கு உள்ளான மலையாள நடிகையின் உணர்ச்சிப் பதிவு!
பாலியல் சீண்டலுக்கு உள்ளான மலையாள நடிகை அன்னா பென்
மலையாள நடிகை அன்னாபென், பொது இடத்தில் தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அன்னா பென். மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை. கும்பளாங்கி நைட்ஸ், கப்பேலா, ஹெலன் போன்ற படங்களின் மூலம் அறிமுகமாகி, மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். இந்நிலையில் அவர், பொது இடத்தில் தான் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக, தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவொன்றை போட்டுள்ளார்.
அதில்,
"சமூகவலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தும் பழக்கம் எனக்குக் கிடையாது.
ஆனால், எனக்கு நடந்த அந்த சம்பவத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. லூலூ மாலுக்கு சென்றிருந்தேன். அங்கே சூப்பர் மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு இடத்தில், என்னை கடந்து சென்ற இரண்டு ஆண்களில், ஒருவர் என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார். அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.”
அதற்கு என்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. தூரத்திலிருந்த என் சகோதரி நடந்ததை பார்த்துள்ளார். அவர் என்னிடம் வந்து ஆர் யூ ஓகே? என்று கேட்டார். அப்போது தெளிவாக யோசிக்கும் மனநிலையில் நான் இல்லை. உறைந்து போயிருந்தேன்.
”நான் அந்த இருவரை நோக்கிச் சென்றபோது, அவர்களின் தவறை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று புரிந்துகொண்டவர்கள், அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டனர். கடும்கோபத்தில் இருந்தேன். காரணம் என்னால் அவர்களை எதுவுமே செய்ய முடியவில்லை. அவர்களைத் திட்ட எந்த உணர்ச்சிகரமான வார்த்தைகளும் எனக்குள் தோன்றவில்லை,” என்கிறார் அன்னா.
தொடர்ந்து பேசியவர்,
“பொருட்கள் நிரப்பப்பட்ட தள்ளுவண்டியை பணம் கட்டும் இடத்தை நோக்கி நகர்த்திச் சென்றேன். அங்கிருந்த அந்த இருவரும் என்னிடம் பேச முயற்சித்தார்கள். நான் நடித்த திரைபடங்களின் பெயர்களை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ‘உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்,’ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டேன்.
இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்ததருணத்தில் அவர்களிடம் நான் ஆயிரம் வார்த்தைகளை சொல்லியிருக்கவேண்டும். நூறு எதிர்வினைகள் ஆற்றியிருக்க வேண்டும். உண்மையில் என்னால் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. அதை இங்கே பகிர்வதால் எனக்கு சிறிய நிம்மதி கிடைக்கிறது.
”இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நடப்பது முதன்முறையில்லை என்றாலும், மிகவும் கடினமாக இதை கடந்துபோகவேண்டியுள்ளது. பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது. ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பாதுகாப்புக் கவசத்துடனே செல்லவேண்டி இருக்கிறது. பொது இடங்களில் குனியும்போதும், நிமிரும்போது என் கைகளால் மார்பை மறைக்கவேண்டியிருக்கிறது,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அன்னா பென்னை பாலியல் ரீதியில் சீண்டிய இரு இளைஞர்களின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: மலையரசு