2019-ல் இந்திய தொழில்முனைவோரின் உலகளாவிய வெற்றியை கொண்டாடுவோம்!
இந்தப் படத்தைப் பாருங்கள். சாலையில் வரிசையாக இருக்கும் கடைகள் தெரிகிறது. நம்மில் பலருக்கு இதில் அசாதாரணமாக எதுவும் இல்லை என்றே தோன்றும். ஆனால் மீண்டும் ஒருமுறை இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று அடங்கியுள்ளது. அதை உணர்ந்த தருணத்தில் இருந்து அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
எனக்குக் குறிப்பிடத்தக்க அம்சமாக தோன்றியது என்னவென்றால் இந்த படம் ஒரு புதிய இந்தியாவை விவரிக்கிறது. உலகளவில் இந்தியா அதிக முக்கியத்துவம் பெறுவதை உணர்த்துகிறது.
நாம் இன்று வாழும் புதிய இந்தியா பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டும் இணைந்தது. இந்திய மற்றும் அந்நிய நாடுகளின் தாக்கம் நிறைந்தது. இதையே இந்தப் படம் மிகச்சரியாக சித்தரிக்கிறது.
இந்தப் படத்தில் ஸ்டார்பக்ஸ் போன்ற மிகவும் பிரபலமான அமெரிக்க காபி பிராண்டிற்கு இணையாக திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி போன்ற உள்நாட்டு இந்திய பிரியாணி பிராண்ட் நிலைப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது. இரண்டுமே கண்களைக் கவரும் வகையில் உள்ளது. இருப்பினும் வேறுபாடு என்னவென்றால் இந்திய பிராண்டுகள் கவனத்தை ஈர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது புதிய இந்தியாவை சுட்டிக்காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இந்தப் படத்தில் இந்த இரண்டு பிராண்டுகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் புதிய இந்தியாவை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது இந்திய வணிகத்தை உலகளவில் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய தொழில்முனைவோர் மற்றும் தலைவர்கள் உருவாகி வருவதை இது உணர்த்துகிறது.
இவ்வாறு உலகளவிலான செயல்பாடுகள் வெவ்வேறு வகையில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதாகட்டும் அல்லது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆட்சிமுறை அளவில் மாற்றம் ஏற்பட புதுமை படைப்பதாகட்டும், புதிய வகையிலான இந்திய தொழில்முனைவோர் உள்நாட்டு மற்றும் உலகளாவிய செயல்பாடுகள் ஒன்றிணைக்கப்பட்ட (glocal) அணுகுமுறையையே பின்பற்றுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை ஒன்றிணைத்து கவனம் செலுத்துதல்
இன்றைய இந்திய தொழில்முனைவோர் தாங்கள் உருவாக்கும் தயாரிப்பாக இருந்தாலும் கையகப்படுத்தும் வணிகமாக இருந்தாலும் எப்போதும் உள்நாட்டிலும் அதேசமயம் உலகளவிலும் செயல்படவே முற்படுகின்றனர். இன்றுள்ள இந்திய பிராண்டுகள் மேற்கத்திய பிராண்டுகளுடன் போட்டியிட்டு உலகளவில் நிலைநிறுத்தப்படுவது இதற்கான சாட்சியாகும். அத்துடன் இவர்கள் தங்களது வெற்றி குறித்து அதிகம் ஆர்பரிக்காமல் அமைதியாக இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்.
மூன்றாம் தலைமுறை தொழில்முனைவரான நாகசாமி தனபாலனின் பயணத்தைப் பார்த்தோமானால், இவர் தனது தாத்தா சிறியளவில் ஈடுபட்டிருந்த பிரியாணி வணிகத்தைக் கையிலெடுத்து ’திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி’யை உலகின் மிகப்பிரபலமான இந்திய பிரியாணி பிராண்டுகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளார். நாகசாமி 2009-ம் ஆண்டு தனது அப்பா நடத்தி வந்த வணிக செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றபோது இந்த பிரியாணி பிராண்டிற்கென ஒரே ஒரு உணவகம் மட்டும் திண்டுக்கல் பகுதியில் இருந்தது. ஆனால் நாகசாமி இந்த பிராண்டை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்கியும் காட்டினார்.
கடந்த ஒன்பதாண்டுகளில் நாகசாமி பிரியாணி பிராண்டை அமெரிக்கா, யூஏஈ, பிரான்சு போன்ற நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஒரே ஒரு உணவகத்துடன் செயல்பட்ட வணிகத்தை உலகம் முழுவதும் 50 கிளைகளுடன் செயல்பட வைத்தார். இந்தக் கிளைகள் வாயிலான ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாயாகும். இந்தத் தொழில்முனைவோர் தனது வணிகத்தைப் பொது நிறுவனமாக மாற்றும் திட்டத்துடன் அடுத்த மூன்றாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளார்.
நாகசாமி உலகளவில் செயல்படும் கேஎஃப்சி போன்ற பிராண்டுகளிடமிருந்து உந்துதல் பெற்று திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று சர்வதேச அளவில் லாபகரமாக செயல்படும் பிராண்டாக உருவாக்கியுள்ளார். நாகசாமியின் கதை முன்னேறி வரும் புதிய இந்தியாவை விவரிக்கும் கதை என்பதே என்னுடைய கருத்து.
நாகசாமியின் கதையை நாம் அனைவரும் கொண்டாடவேண்டும். பல இந்திய தொழில்முனைவோர் தங்களது நிறுவனங்களை உலகளவில் எடுத்துச்செல்வதுடன் அந்நிய சந்தைகளில் விரும்பி தேர்வு செய்யப்படும் பிராண்டாக உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இவர்களது பயணத்தை கொண்டாடுவது போன்றே நாகசாமியின் பயணத்தையும் கொண்டாடவேண்டும்.
எனவே திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி போன்ற உள்ளூர் பிராண்டுகள் அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களை மெல்ல கவர்ந்திழுக்கத் துவங்கிய நிலையில் அவர்களது வெற்றியை உள்நாட்டில் இருக்கும் நாம் கொண்டாட மறந்துவிடக்கூடாது.
ஏனெனில் உலகம் முழுவதும் ’மேட் இன் இந்தியா’ வாக்கியத்தை பிரபலப்படுத்த முதலில் நாம் உள்நாட்டில் இருந்து துவக்கவேண்டியது அவசியம்.
வோல்டயர் குறிப்பிட்டதுபோல,
”பாராட்டுவது அற்புதமான விஷயம். ஒருவரை நாம் பாராட்டும் செயலானது அவரிடம் இருக்கும் சிறப்பான விஷயம் நம்மையும் வந்தடையச் செய்கிறது.”
கட்டுரையாளர்: ஷ்ரத்தா ஷர்மா