மதங்களைக் கடந்த திருமணம்: மஞ்சக்கிழங்கு தாலி, பறை முழங்க தமிழர் பாரம்பரிய கொண்டாட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியினர் ராஜன் - பிரீத்தி, தமிழர் பாரம்பரிய முறைப்படி நடத்திய திருமணம் பலரில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது மதங்களை முன்வைத்து நடந்து வரும் பிரச்னைகளுக்கு மத்தியில், மதங்களைக் கடந்து நடந்துள்ள ஒரு திருமணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியினர் ராஜன் - பிரீத்தி. இருவரும் காதல்வயப்பட்டதால், திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். எனினும் இருவரும் வெவ்வேறு மாதங்களைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணத்துக்கு வீட்டில் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நேரத்தில் இருவரும் தங்களது திருமணத்தை மதங்களைக் கடந்து தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என விரும்பி அதற்காக வீட்டில் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கும் இரு வீட்டினரும் பச்சைகொடி காண்பிக்க, சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தில் மதச்சடங்குகள் எதுவும் நடத்தப்படவில்லை. மாறாக,
பண்டைய தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கிழங்கால் ஆன தாலி கட்டப்பட்டது. பின்னர், தாலி கட்டும் நிகழ்வு முடிந்த பின், 23 வகையான தானியங்கள் வைத்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் விதைப்பந்து பரிசாக அளிக்கப்பட்டது.
இதேபோல் மற்ற திருமணங்களில் நடக்கும் பாட்டு கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக இந்த திருமணத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முன்னதாக மணப்பெண் மணமகனுக்கு ஆரத்தி எடுத்தது போன்ற வித்தியாச நிகழ்வுகளும் திருமணத்தில் நடந்தன. தமிழர் முறைப்படி நடந்த இந்த திருமணத்தை அடுத்து மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வாழ்த்துக்கள் ராஜன் - பிரீத்தி!
தகவல் மற்றும் படங்கள் உதவி: பாலிமர் நியூஸ்

