கஷ்டப்படும் உபர் டிரைவரின் மகளுக்கு ஸ்கூல் பேக் வாங்கிக் கொடுத்த பயணி - இணையத்தில் வைரல்!
டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் கிரண் வர்மா, தான் பயணித்த உபர் காரின் ட்ரைவரின் மகளுக்கு ஸ்கூல் பேக் வாங்கிக்கொடுத்த நெகிழ்ச்சி கதையை பதிவிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும் ரத்த தானத்திற்கான ‘சிம்ப்ளி பிளட்’ என்ற அமைப்பை நடத்தி வருபவருமான கிரண் வர்மாவின் சமூக வலைத்தளத்தில் இவர் பகிர்ந்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.
இவர் உபர் கார் ஒன்றை புக் செய்து பயணித்து வந்துள்ளார். அப்போது, அந்த உபர் கார் ட்ரைவருக்கு வீட்டிலிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடியே இருக்க ட்ரைவரும் தொடர்ந்து அந்தக் கால்களை துண்டித்தபடியே இருந்துள்ளார். இதன் பிறகு, கிரண் வர்மாவே தன் பேஸ்புக் பதிவில் கூறுவதைக் கேட்போம்:
“நான் இன்று ஊபர் வண்டியை புக் செய்தேன். டிரைவர் என்னை வந்து ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார். பயணத்தின் போது அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன, அவரும் 2-3 முறை அழைப்பைத் துண்டித்தார். அதன் பிறகு, நான் அவரை அழைப்பை எடுக்க வலியுறுத்தினேன். அவரும் உடனே அழைப்பை அட்டெண்ட் செய்தார். மறுபக்கத்திலிருந்து வந்த பேச்சு எனக்கு நன்றாகக் கேட்டது. போனில் அவருடைய மகள்தான். தனக்கு ஸ்கூல் பேக் வாங்கித்தருமாறு கேட்டாள். ஓட்டுநர் பலமுறை முடியாது என சமாளித்தார். அதன் பின்னர், அவர் தனது மகளை தொலைபேசியை தனது மனைவியிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
"நான் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கிறேன், ஆனாலும் அடுத்த 2-3 நாட்களில் ஒரு புது ஸ்கூல் பேக் வாங்க முடியாது, ஏனென்றால் நான் இப்பத்தான் அவளுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். மாதாந்திர செலவுகளுக்கே சம்பாதியம் சரியா போய்டுது...” என்றார்.
இந்த உரையாடலைக் கேட்ட கிரண் வர்மா மனமிறங்கினார், உபர் ஓட்டுனருக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சியை அளிக்க விரும்பினார். தான் இறங்க வேண்டிய இடத்தை மாற்றினார், இறங்கும் போது ட்ரைவரையும் உடன் வருமாறு அழைத்தார்.
“நான் ட்ராப் இடத்தை மாற்றினேன் அவர் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் அழைப்பை முடித்தவுடன் என்னுடன் வருமாறு அழைத்தேன். அதாவது, நான் வாங்கும் பொருள் கனமாக இருக்கும் அவருடைய உதவி தேவைப்படும் என்று அழைத்தேன், அவரும் உடனே கூடவே வந்தார். நான் ஒரு ஸ்டோருக்குள் நுழைந்து ஸ்கூல் பேக் ஒன்றை வாங்கினேன். என்னிடம் பேகிற்கான முழுத்தொகை இல்லாததால் என் மனைவியின் கணக்கிலிருந்து பணத்தை கொடுத்தேன். அந்த பேகை ட்ரைவரிடம் கொடுத்து அவரின் மகளுக்கு கொடுக்கச்சோன்னேன்.”
இவரது இந்தச் செய்கையினால் ட்ரைவர் வாயடைத்துப் போய் ஒருவழியாக நன்றி என்றார். “வீட்டுக்குச் சென்றதும், தன் மகள் அந்தப் பேக்கை வைத்திருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். விலைமதிப்பற்ற புகைப்படம். அது எனக்கு மிகப் பெரும்நிறைவைத் தந்தது...” என்று தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “அன்பாக இருங்கள், தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள், இப்படிச் செய்தால் உலகமே அழகானதாக இருக்கும்...” என்று தன் பதிவில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கிரண் வர்மா.
முகநூலில் இந்தப் பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட எதிர்வினைகளை ஈர்த்துள்ளது. பலரும் கிரண் வர்மாவின் இந்தச் செயலைப்பாராட்டித்தள்ளியுள்ளனர்.