உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு பிரதமர் மோடி பெயர்: மொதேரா மைதானத்தின் சிறப்புகள் என்ன?
புதிய மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து போட்டி தொடக்கம்!
இந்தியா - இங்கிலாந்துக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் இந்த மைதானத்துக்கு 'நரேந்திர மோடி மைதானம்’ என பெயர் மாற்றம் செய்யபட்டு அறிவிக்கப்பட்டது.
சுமார் 1,10,000 பேர் அமரும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடி மைதானம் என்ற பெயர் மாற்று அறிவிப்பு வெளியானது. மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார். இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள குடியரசுத் தலைவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதனிடையே இந்தியா – இங்கிலாந்து இடையே தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழையும். தோல்வியை தவிர்க்கும் வகையில் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் புதிதாக புனரமைக்கப்பட்ட இந்த மைதானம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரங்கம் ஆரம்பத்தில் 49,000 பேர் அமரக்கூடியதாக இருந்தது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் 40 விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடம் உட்பட ஒரு உட்புற கிரிக்கெட் அகாடமி உள்ளது.
இது நான்கு அணிகளுக்கு இடமளிக்கும் அளவுக்கு பெரிய டிரஸ்ஸிங் அறைகளையும் கொண்டுள்ளது. இது ஒரு அதிநவீன ஜிம்னாசியம் மற்றும் ஆறு உட்புற பயிற்சி பிட்சுகளை மூன்று வெளிப்புற பயிற்சி இடங்களையும் உள்ளிட்ட ஏராளமான வசதிகளைக்கொண்டுள்ளது.
நரேந்திர மோடி ஸ்டேடியம் இப்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாகவும், உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டு மைதானமாகவும் உள்ளது. அதன் விரிவான புனரமைப்பு மற்றும் புதுப்பித்தலுடன், இந்த இடம் தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட அதிகமாக பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைந்துள்ளது.
1983-84ம் ஆண்டு இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்த அரங்கத்தில் தான் நடைபெற்றது. கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் சர்வதேச ஒருநாள் போட்டி 1984-85ம் ஆண்டு இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்த மைதான்னத்தில் நடைபெற்றது. கடைசி ஒருநாள் போட்டி இலங்கைக்கு எதிராக 2014ல் இருந்தது.
மொத்தத்தில், மொதேரா மைதானத்தில் இதுவரை மொத்தம் 35 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், 12 டெஸ்ட், 23 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.