எம்.எஸ்.எம்.இ. துறையின் கீழ் சில்லறை, மொத்த வியாபாரம்– அரசு முடிவு சாதகமானதா?
எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சக பொறுப்பை நாராயண் ரானேவிடம் ஒப்படைப்பதற்கு சில நாட்களுக்கு முன், இத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் எம்.எஸ்.எம்.இ துறை கீழ் கொண்டு வரப்படுவார்கள் என அறிவித்தார். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
நாட்டின் ஜிடிபிக்கு 30 சதவீதம் பங்களிப்பு செலுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு (எம்.எஸ்.எம்.இ) 2020 மற்றிம் 2021 சோதனையான ஆண்டுகளாக அமைந்துள்ளன. மேலும், இத்துறை 48 சதவீத ஏற்றுமதிக்கும் காரணமாகின்றன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இத்துறை கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டு வர போராடிக்கொண்டிருக்கிறது. 82 சதவீத சிறு தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை அடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என 70 சதவீத நிறுவனங்கள் கருதுவதாகவும், Dun and Bradstreet ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு, தற்சார்பு இந்தியா ஊக்கம் அளிக்கும் நிதியின் கீழ், இத்துறை நிறுவனங்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வர பல்வேறு சலுகைகளை அறிவித்தது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வரையறை மாற்றி அமைப்பு, ரூ.3 லட்சம் வரை ஈட்டுறுதி இல்லாத கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனத்தை ஈர்த்தன.
இவற்றின் தொடர்ச்சியாக, சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், எம்.எஸ்.எம்.இ துறையின் கீழ் கொண்டு வரப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ துறை அமைச்சக பொறுப்பை நாராயண் ரானேவிடம் ஒப்படைப்பதற்கு சில நாட்களுக்கு முன், இத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் எம்.எஸ்.எம்.இ துறை கீழ் கொண்டு வரப்படுவார்கள் என அறிவித்தார். எம்.எஸ்.எம்.இ பிரிவின் கீழ் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் இடம்பெறுவதை ரிசர்வ் வங்கியும் ஒரு அறிவிக்கையில் தெரிவித்தது.
இந்த புதிய அறிவிப்பின் தாக்கம் குறித்து அறிய எஸ்.எம்.பி ஸ்டோரி பல்வேறு வல்லுனர்களுடன் பேசியது.
இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கோடி சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு நலன் பயக்கும் என அரசு கருதுகிறது. துறை வல்லுனர்கள் பலரும் இதை வரவேற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பு பல ஆண்டுகள் முன்னதாக வந்திருக்க வேண்டும், தாமதமாக வந்தாலும் வரவேற்கத்தக்கது என, எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி அமைப்பு துணைத்தலைவர் மற்றும் அகில இந்திய குறும் மற்றும் சிறு தொழில்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் சுதிர் ஜா கூறுகிறார்.
“சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் வர்த்தகச் சூழலை இயக்கும் பொறியாளர்கள் போல இருக்கின்றனர்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் குமார் ராஜகோபாலனும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
“சில்லறை எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க, வளர செழிக்கத் தேவையான ஆதரவை இது அளிக்கும். சில்லறை மற்றும் மொத்த வியாபார நிறுவனங்கள் மேலும் திறம்பட அமைப்பு ரீதியாக மாறும் வாய்ப்புள்ளது. ஏனெனில், தங்களுக்கான பலன்களை பெற அவை செயல்பாடுகள் மற்றும் தகவல் அளித்தலை சீராக்க வேண்டும்,”என அவர் கூறுகிறார்.
சில்லறை வியாபாரத்துறை சேர்ந்த பலரும் இந்த அறிவிப்பு தங்களுக்கு எளிதாக கடன் கிடைக்க வழி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
விமர்சனம்
பரவலாக வரவேற்கப்பட்டாலும், இந்த முடிவு எம்.எஸ்.எம்.இ. துறை மீது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் எனத்தெரியவில்லை என ஒரு சிலர் கருதுகின்றனர்.
இப்போதே கருத்து சொல்ல முடியாது, இந்த அறிவிப்பு பலன் அளிக்கிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத மொத்த வியாபாரி ஒருவர் கூறினார்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடுவது சரியல்ல என்றும் ஒரு சிலர் கூறியுள்ளனர்.
”எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பொருளாதாரச் சூழலில் சப்ளை பக்கத்தில் உள்ளனர். சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் விநியோக பக்கத்தில் உள்ளனர்,” எனக் கூறும் ரோகோ பாரிவேர் நிர்வாக இயக்குனர் கே.இ.ரங்கநாதன் இந்த முடிவின் பலனை உணர முடியவில்லை என்கிறார்.
சில்லறை, மொத்த வியாபாரிகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வர்த்தகச் சூழலில் அங்கம் வகிக்கின்றன. ஒரு பொருள் தயாராகி விற்பனைக்கு வரும் வரை இந்த மூன்று பிரிவையும் கடந்து வருகிறது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி நிலையிலும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் விநியோக நிலையிலும் செயல்படுகின்றனர்.
இந்த மூன்று பிரிவுகளின் தேவைகளும் வேறுபட்டவை என்பதால் இவற்றை ஒன்றாகக் கொண்டு வருவதால் என்ன பயன் என ரங்கநாதன் கேட்கிறார். இந்த அறிவிப்பு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக இருந்தாலும், ஒவ்வொரு துறைக்குமான தனி கொள்கைகள் மற்றும் கவனம் அவசியம் என்கிறார் ரங்கநாதம்.
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்