75,000 கோடியில் 'மெகா சூரிய மின்சக்தி திட்டம்' - முகேஷ் அம்பானி அறிவிப்பு!
இந்தியாவை சர்வதேச சூரிய மின்சக்தி வரைபடத்தில் இடம்பெறச்செய்யும் வகையில், ரூ.75,000 கோடி திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவன பொதுப்பேரவை கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் 44வது பொதுபேரவைக் கூட்டத்தில், மூன்று ஆண்டுகளில் 75,000 கோடி மதிப்பிலான மெகா பசுமை எரிசக்தி திட்டத்தை அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
பொதுபேரவைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டவர்,
“புதிய எரிசக்தி மற்றும் புதிய பொருளில் இந்தியா மற்றும் ரிலையன்சுக்கான அடுத்த பெரிய மதிப்பளிக்கும் திட்டம் தொடர்பான தொலைநோக்கை பகிர்ந்து கொண்டேன். 2035ல் பூஜ்ஜியம் கரியமில தன்மை பெறும் திட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். இன்று, இந்த லட்சிய திட்டங்களுக்கான பாதையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் அவர் மேலும் மூன்று முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். முதலாவதாக, உலகின் மிகப்பேரிய எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக திகழும் இந்தியா, சர்வதேச எரிசக்தி சூழலை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, எதிர்கால வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் நிறுவனம் என்ற முறையில் ரிலையன்ஸ், பாலன்ஸ் ஷீட் பலம், தொழில்நுட்பம், ஊழியர் திறன் ஆகியவற்றைக் கொண்டு வழிநடத்தும் என்று குறிப்பிட்டார். புதிய எரிசக்தி வர்த்தகத்தை சர்வதேச வர்த்தகமாக ரிலையன்ஸ் மாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுடன் கூட்டு வைத்துக்கொள்ளும்.
“ஜாம்நகரில், 5,000 எக்கரில் திருபாய் அம்பானி கிகா காம்பிளக்சை உருவாக்கத் துவங்கியிருக்கிறோம். உலகில் உள்ள மிகப்பெரிய ஒருங்கிணைந்த மறுசுழற்சி எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஒன்றாக இது விளங்கும். ஜாம்நகர் தான் எங்கள் பழைய வர்த்தகத்தின் மையமாகும். புதிய எரிசக்தி வர்த்தகத்தின் மையமாகவும் இது விளங்கும்,” என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனம் நான்கு கிகா ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
“இந்த ஆலைகள் புதிய எரிசக்தி சூழலின் அனைத்து முக்கியப் பொருட்களையும் உற்பத்தி செய்து, ஒருங்கிணைக்கும். ஒரு ஆலை சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும். ஒருங்கிணைந்த சூரிய போட்டோவால்டிக் மாதிரி ஆலையை அமைப்போம். இரண்டாவது ஆலை எரிசக்தி சேமிப்பிற்கானது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக மூன்றாவது ஆலை அமைக்கப்படும். நான்காவது ஆலை, ஹைட்ரஜனை நிலை எரிசக்தியாக மாற்றும் ஆற்றல் செல் ஆலையாக இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரிய மின் தகடுகளின் விலை ஏற்புடையாக இருக்க, உலகிலேயே மிகவும் குறைந்த விலையை சாத்தியமாக்க ரிலையன்ஸ் விரும்புகிறது.
“ரிலையன்ஸ் 2030ல் குறைந்தது 100GW சூரிய மின்சக்தியை நிறுவி உற்பத்தி செய்யும். இவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் அமைக்கப்படுக் கூரை சூரிய மின் தகடுகளில் இருந்து கிடைக்கும். இது கிராமப்புற இந்தியாவுக்கு வளத்தை கொண்டு வரும்,” என முகேஷ் அம்பானி கூறினார்.
உருவாக்கப்படும் எரிசக்தை சேமித்து வைக்க, புதிய மற்றும் மேம்பட்ட மின்ரசாயன தொழில்நுட்பங்களையும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது, என்றார்.
உற்பத்தி, சேமிப்பு மற்றும் கிரிட் தொடர்பு மூலம் 24 மணி நேர மின்சக்தியை உறுதி செய்ய,. பேட்டரி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுடன் செயல்படுவோம், என்றும் அவர் குறிபிட்டார்,
அதிக செயல்திறன் மற்றும் குறைந்த மூலதன செலவிற்கான எல்க்ட்ரோலைசர் கிகா ஆலை ரிலையன்சின் மூன்றாவது திட்டமாகும். நான்காவது திட்டம் பியல் செல் கிகா ஆலையாகும்.
“இந்தியா மற்றும் குஜராத்தை ரிலையன்ஸ் சர்வதேச சோலார் மற்றும் ஹைட்ரஜன் வரைபடத்தில் இடம்பெற வைக்கும். எங்கள்: அனைத்து தயாரிப்புகளும், உலகிற்காக, இந்தியாவில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்டது எனும் தன்மையை கொண்டிருக்கும். பிரதமரின் தற்சார்பு இந்தியாவுக்கான ரிலையன்சின் மற்றுமொரு பங்களிப்பாக இது அமையும்,” என்று முகேஷ் அம்பானி கூறினார்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் ரிலையன்ஸ் மேற்கொண்டு வரும் மிஷன் ஆக்சிஜன், கோவிட் கேர் உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். பொதுவாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க ஒரு வருட காலம் ஆகும் என்ற நிலையில் ரிலையன்ஸ் பொறியாளர்கள் அரும்பாடுபட்டு, 10 நாட்களில் ஆக்சிஜன் ஆலை அமைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.
பொது முடக்கக் காலத்தில், ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய பொருளாதாத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்டவர், சவாலான சூழலிலும் நிறுவனம்ம் 75,000 புதிய வேலைவாய்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை இந்தியர்களின் டிஜிட்டல் பாலமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருப்பதாகவும், இது ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படும் என்றும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் குரல்வழி உதவியாளர் சேவை உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
கட்டுரை: சைபர் சிம்மன்