‘தங்க நகைகளை அடமானம் வைப்பது அவமானம் அல்ல’ - ‘முத்தூட் பைனான்ஸ்’ ஜார்ஜ் அலெக்சான்டர் முத்தூட்
கொச்சியைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தங்க நகைக்கடன் தொடர்பான தவறான கற்பிதங்களை தகர்த்தெறிந்து பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்த விதம் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் பகிர்ந்துகொண்டார்.
பெரும்பாலான இந்தியர்கள் தங்கத்தை நகையாகவே வாங்குகின்றனர். தங்கம் வைத்திருப்பதை பெருமையாகவே கருதுகின்றனர். பணத் தேவை இருக்கும்போது தங்கத்தை அடமானம் வைப்பது ஒருவரது கௌரவத்தை குலைப்பது போன்றே காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது.
கொச்சியைச் சேர்ந்த முத்தூட் ஃபைனான்ஸ் உலகின் மிகப்பெரிய தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனம். இந்நிறுவனம் மக்கள் தங்கத்தை அடமானம் வைப்பதை அவமானமாகக் கருதக்கூடாது என்கிறது. மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றவேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்துள்ளது.
“ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டினார்கள். வீட்டில் உள்ள பெண்களின் நகைகளை அடமானம் வைப்பது கௌரவத்திற்கு களங்கம் விளைவிப்பதாகவே நினைத்தார்கள். ஆனால் தங்கம் ஒரு லாக்கரில் இருந்து மற்றொரு லாக்கருக்கு செல்லப்போகிறது என்பதை புரியவைத்தோம். எங்கள் லாக்கரில் வைத்துவிடுங்கள்; காப்பீடு செய்து விடுங்கள்; நண்பர்களிடமோ உறவினர்களிடமோ கடன் வாங்காமல் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள் என விவரித்தோம்,” என்று முத்தூட் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் தெரிவித்தார்.
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான உரையாடலில் முத்தூட் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் விரிவாக பல விஷயங்களைப் பகிர்ந்தார்.
மக்களின் எண்ண ஓட்டத்தை மாற்றி அவர்களுக்கு பணத்தேவை இருக்கும்போது பாதுகாப்பான முறையில் தங்க நகைக்கடன் வாங்கிக்கொள்ளலாம் என்பதை புரியவைத்து வாடிக்கையாளர்களாக இணைத்துக்கொண்ட விதம் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
தங்கம் அதிக மதிப்பு கொண்ட பொருள். இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் லாக்கரில் சேமிக்கப்படுகின்றன. சிறு கடன் தொகை தேவைப்படும்போது உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் சொத்து இது என்கிறார்.
கடன் வழங்கும் பலர் அதிக வட்டி வசூலிக்கின்றனர். இந்த வட்டித் தொகையானது 50 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. முத்தூட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தங்க நகை மீது கடன் வழங்குவதுடன் அவற்றின் பாதுகாப்பிற்காக காப்பீட்டுடன்கூடிய லாக்கர் வசதியையும் வழங்குகிறது. இவைதவிர தங்க நகைகள் மீதான கடனுக்கு 12 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க நகைக்கடன் துறையில் 65 சதவீத அளவை முறைசாரா கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்களது வட்டி விகிதம் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உள்ளது.
நம்பகத்தன்மை
தங்க நகைகள் மீதான கடன் என்பது நம்பிக்கை சார்ந்தது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் ஜார்ஜ்.
”ஒருவர் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை எங்களிடம் கொடுத்து 50,000 அல்லது 60,000 ரூபாய் பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில் யாருக்கு யார் மீது நம்பிக்கை அதிகம் இருக்கவேண்டும்? தங்களது சொத்தை முறையாகப் பராமரித்து, பாதுகாத்து, எந்தவித சேதாரமும் இல்லாமல் திருப்பியளிக்கக்கூடிய நம்பகமாக நிறுவனத்தையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்றார்.
இந்தியர்களில் 75 சதவீதம் பேர் ரொக்கத்தைக் காட்டிலும் தங்கத்தையே அதிகம் நம்புவதாக 2019 உலக தங்க கவுன்சிலின் சில்லறை சந்தை ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேர் சிறு வணிகர்கள், வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பான நெருக்கடியான சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இந்தச் சூழல் எத்தனையோ சிறு வணிகங்களை மோசமாக பாதித்துள்ளது.
பலருக்கு வணிகத்தை மீண்டும் தொடங்கவும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் இருப்பு வாங்கவும் கடன் தேவைப்படுகிறது. இந்த கடினமான காலகட்டத்தில் பலரது பணத்தேவைகளை தங்க நகைகள் பூர்த்தி செய்து கைகொடுத்துள்ளது.
பெருந்தொற்று சூழல்
தங்கத்தைப் பொறுத்தவரை 2008-ம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல் போன்றே தற்போதைய 2020-ம் ஆண்டிலும் ஏற்பட்டுள்ளது என்கிறார் ஜார்ஜ்.
“இன்று சர்வதேச அளவில் நிதி சார்ந்த நிலையற்ற தன்மை காணப்படுகிறது. டாலர், யூரோ மதிப்பு குறித்து மக்கள் கவலைப்படுகின்றனர். மற்ற நாடுகள் தங்கத்தை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்தியாவில் நாம் தங்கத்தை இறக்குமதி செய்வதில்லை. முதலீடாகவே கருதுகிறோம். மற்ற நாடுகளும் நிறுவனங்களும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது. அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று உலகளாவிய சூழலை விவரித்தார்.
2008-ம் ஆண்டு உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. தற்போது 2020ம் ஆண்டின் இந்த பெருந்தொற்று சூழலிலும் அதே போக்கு காணப்படுகிறது. தங்கத்தின் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. 1,250 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2019ம் ஆண்டு மே மாதம் முதல் 1,900 டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இந்த காலகட்டத்தில் 32,000 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை உயர்ந்து 10 கிராம் 52,000 ரூபாயாக அதிகரித்தது.
தற்போது இந்திய மக்களால் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் பணத்தேவை இருக்கும் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களிடம் உள்ள தங்கத்தை அடமானம் வைத்து அதிகக் கடன் தொகை பெற முடியும். கடந்த மாதம் ஆர்பிஐ தங்கக் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. இதன்படி தங்கத்தின் மீது கடன் வழங்குவோர் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடனாக வழங்கமுடியும். இதற்கு முன்பு 75 சதவீத மதிப்பை மட்டுமே கடன் தொகையாக வழங்கமுடியும்.
எளிய முறையில் கடன்
முத்தூட் பைனான்ஸ் சராசரியாக 50,000 ரூபாய் அளவில் கடன் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்கள் அல்ல. இந்த இடைவெளியை நிரப்ப வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுடன் இந்நிறுவனம் மேப் செய்தது. இதனால் பரிவர்த்தனை எளிதானது. ஊரடங்கு சமயத்தில் மாதத் தவணை செலுத்துவதும் எளிதானது. கிட்டத்தட்ட 10 லட்சம் கணக்குகளை இந்நிறுவனம் மேப் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் சமீப காலமாக ஆன்லைன் பயனர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஜார்ஜ் தெரிவிக்கிறார். இதற்காக முத்தூட் நிறுவனம் ஜூலை மாதம் ‘லோன் அட் ஹோம்’ என்கிற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். தங்கத்தின் எடையை பரிசோதித்து, அவற்றை சீல் செய்து, சேகரித்து, கடன் தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள். பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
முத்தூட் நிறுவனத்தைப் பொறுத்தவரை தங்க நகைக்கடன் பெறுவதற்கு தங்கம் 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன் இருந்தால் போதுமானது. ஏனெனில் தங்கம் பிணையமாகவே வைக்கப்படுகிறது. முத்தூட் நிறுவனம் 70 முதல் 80 லட்சம் கணக்குகளுக்கு சேவையளிக்கும் பாமர மக்களின் நிறுவனம் என்கிறார் ஜார்ஜ்.
முத்தூட் ஆண்டு கடன் வழங்குகிறது. இதில் பெரும்பாலானவை நான்கு முதல் ஐந்து மாதங்களில் மீட்கப்படுகின்றன. சில வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும். திருப்பி செலுத்தாமல் போனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தங்கம் ஏலத்தில் விடப்படும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் கொடுக்கப்படுகிறது.
“எங்கள் கணக்குகளின்படி அவை வாராக்கடனாகவே கருதப்படுகிறது. ஏனெனில் நான் அந்தத் தொகையை இழக்கப்போவதில்லை என்பதில் எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. எனவே அந்த வாடிக்கையாளர் பணத்தை செலுத்தி நகையைத் திரும்ப எடுக்க கூடுதலாக சிறிது அவகாசம் கொடுத்தால் அவர் மகிழ்ச்சியடைவார்,” என்றார்.
நான் தங்கத்தை ஏலத்தில் விட்டு பணத்தை பெற்றுக்கொண்டால் எனக்கு வாராக்கடன் இருக்காது. ஆனால் என் வாடிக்கையாளருக்கு இது திருப்தியளிக்காது,” என்கிறார்.
எனினும் கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குப் பின்னரும் பணம் கிடைக்காத நிலையில் நிறுவனம் தங்கத்தின் ஒரு சதவீதத்தை ஏலம் விடுகிறது என்கிறார்.
சுதந்திர இந்தியாவிற்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனம்
முத்தூட் பைனான்ஸ் கேரளாவில் 1939-ம் ஆண்டு மறைந்த எம் ஜார்ஜ் முத்தூட் அவர்களால் நிறுவப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரியமாகவே தங்கம் அதிகம் சேமித்து வைப்பது வழக்கம். இவர்களுக்கு சிறு தங்க நகைக்கடன்களை வழங்குவதில் முன்னோடியாக இருக்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் விருப்பம்.
இத்தனை ஆண்டுகளில் தங்க நகைக்கடன் முறைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கொள்கைகள் வகுத்து செயல்படுகின்றன. ஜார்ஜ் போட்டியாளர்களைக் கண்டு வருத்தப்படவில்லை. மாறாக போட்டி அதிகம் இருப்பதால் இந்தியாவில் தங்க நகைக்கடன் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே இவரது நம்பிக்கையாக உள்ளது.
இந்தியாவில் 2022ம் ஆண்டில் தங்க நகைக் கடன் சந்தை 13.4 சதவீதம் ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 4.6 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக KPMG அறிக்கை தெரிவிக்கிறது. மற்றொருபுறம் ஒழுங்கமைக்கப்பட்ட துறையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமுள்ள ஒழுங்கமைக்கப்படாத தங்க நகைக்கடன் பிரிவின் அளவு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்த்துகிறது.
முத்தூட் நிறுவனம் தங்கக்கட்டி, தங்க பிஸ்கெட், தங்க நாணயம் போன்றவற்றிற்கு கடன் வழங்குவதில்லை. 2011-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு 5,330-க்கும் அதிகமான கிளைகள் உள்ளன. அமெரிக்கா, யூகே, அரபுநாடுகள், மத்திய அமெரிக்கா, இலங்கை, நேபால் என உலகளவிலும் செயல்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சுமன் சிங் | தமிழில்: ஸ்ரீவித்யா