‘Vocal for Local’ - நாமக்கல்லில் உள்ளூர் டெலிவரி ஆப் Zaaroz மூலம் உணவு டெலிவரி செய்யும் உணவகங்கள்!
Swiggy, Zomato போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த உணவு டெலிவரி நிறுவனமான Zaaroz மூலம் உணவு ஆர்டர்களை இப்போது நாமக்கல் பகுதியில் உள்ள உணவகங்கள் செய்து வருகின்றன.
நாமக்கலில் பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy, Zomato போன்றவற்றின் ஆன்லைன் உணவு ஆர்டர்கள் பெறுவதை உள்ளூர் உணவகங்கள் நிறுத்தி உள்ளன. அதே நேரத்தில், தமிழகத்தை சேர்ந்த உணவு டெலிவரி நிறுவனமான Zaaroz மூலம் உணவு ஆர்டர்களை இப்போது அந்த உணவகங்கள் பெற்று வருகின்றன.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நினைத்த நேரத்தில் செல்போன் மூலம் உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்தி தான் இருக்கின்ற இடத்துக்கே உணவை ஆர்டர் செய்து பெற முடியும். பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை இந்தியா முழுவதும் இது வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற நிறுவனங்கள் தான் இந்தியாவில் டெலிவரி செய்து வருகின்றன.
அதற்கான கமிஷனை உணவக நிறுவனத்திடமிருந்து இந்நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன. ஒரு நபர் புதிய ஊருக்கு சென்றால் கூட இதன் மூலம் எளிதாக உணவு ஆர்டர் முடியும். இத்தகைய சூழலில் தான் மாற்றத்தை முன்னெடுத்துள்ளனர் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளர்கள்.

ஏன் இந்த மாற்றம்?
ஜூலை 1 முதல் ஸ்விக்கி, ஜோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் பெறுவதை நாமக்கல் பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளர்கள் நிறுத்திக் கொண்டனர். இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் கேட்பதாகவும், மறைமுக கட்டணங்கள் மூலம் லாபம் பார்ப்பதாகவும், இதனால் உணவின் விலையை உயர்த்த வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்படுவதாகவும் உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 7-ம் தேதி முதல் Zaaroz என்ற செயலி மூலம் ஆன்லைன் உணவு ஆர்டர்களை நாமக்கல் உணவகங்கள் பெற்று வருகின்றன. இதற்காக நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை போட்டு இந்த முயற்சியை உணவக உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த Zaaroz உணவு டெலிவரி நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தது. மேலும், இது நாமக்கல் பகுதியில் மாத சந்தா அடிப்படையில் உணவு ஆர்டர்களை உணவகத்திடம் இருந்து பெறுகிறது. சிற்றுண்டி உணவகம் மற்றும் பேக்கரி போன்றவற்றிடம் மாதம் ரூ.1,500 மற்றும் ஜிஎஸ்டி, பெரிய உணவகத்திடம் மாதம் ரூ.3,000 மற்றும் ஜிஎஸ்டி-யை சந்தாவாக Zaaroz பெறுகிறது.
முதற்கட்டமாக நாமக்கல் பகுதியில் சுமார் 50 உணவகங்கள் Zaaroz மூலம் உணவு டெலிவரி செய்ய இணைந்துள்ளன. இதன் மூலம் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு இந்த உணவகங்கள் செலுத்தும் கமிஷன் தொகை பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது எப்படி சாத்தியம்?
“Zaaroz நிறுவனம் உணவு மட்டுமல்லாது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், இறைச்சி வகைகள் மற்றும் சில பொருட்களை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்கின்றன. இதனால் அந்த நிறுவனத்தால் மாதாந்திர சந்தா அடிப்படையியல் உணவு டெலிவரி செய்ய முடிகிறது. இந்த முயற்சியை தொடங்கிய முதல் நாளில் நூற்றுக்கணக்கான உணவு ஆரடர்களை ஆன்லைன் மூலம் உணவகங்கள் பெற்றுள்ளன.
”இப்போதைக்கு நாமக்கல் டவுன் பகுதியில் இந்த ஆர்டர்கள் பெறப்படுகின்றன. வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தும் யோசனை உள்ளது. ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளர்களும் இதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் உணவு விலையும் குறைந்துள்ளது,” என நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அருள் முருகன் நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிற்றூர்களுக்கும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் தேவை இருப்பதை அறிந்து நண்பர்கள் இருவர் கூட்டாக இணைந்து Zaaroz முயற்சியை தொடங்கினர். முதலில் சிதம்பரம், பின்னர் விருத்தாச்சலம், பண்ருட்டி என பல ஊர்களுக்கு இதன் சேவை விரிவடைந்தது. தற்போது நாமக்கலில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு மாற்றாக உணவு டெலிவரி பணியை மேற்கொண்டு வருகிறது.
Edited by Induja Raghunathan

