சினிமா தந்த இன்ஸ்பிரேஷன்: நாசாவின் PERSEVERANCE வெற்றிக்கு பின்னால் உள்ள இந்தியப் பெண்!
யார் இந்த சுவாதி மோகன்?!
செவ்வாய்கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சற்று முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய Perseverance விண்கலத்தை விண்ணில் ஏவியது.
7 மாதம் பயணித்த இந்த விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்து, அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த நிலையில் நேற்று வளிமண்டல பாதையில் கீழே விழாமல் 7 நிமிடம் பயணித்து செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட் மூலம் ரோவர் தரையிறக்கப்பட்டது. தரையிறக்கப்பட்டதும் தனது முதல் புகைப்படமாக ரோவர் செவ்வாயை படம்பிடித்து நாசாவுக்கு அனுப்பியது. நாசாவின் இந்த வரலாற்று மிக்க சாதனை தான் இன்று காலை முதல் உலகளவில் பேசப்படும் விஷயம். நாசாவின் இப்படிப்பட்ட சாதனையில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரும் சத்தமில்லாமல் சாதித்து உள்ளார்.
அவர் பெயர், சுவாதி மோகன். ரோவரின் பயணப்பாதை மற்றும் தரையிரங்கும் முறையை திட்டமிட்ட குழுவை தலைமை தாங்கி வழிநடத்தியவர் இந்த சுவாதி மோகன்.
சுவாதி மோகன் தலைமையில் நாசா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. நாசாவின் ரோவரின் வரலாற்று தரையிறக்கத்தை முழு உலகமும் கவனித்துக் கொண்டிருந்தபோது, இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுவாதி மோகன் ரோவரின் கட்டுப்பாடுகள் குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து முழு திட்டக் குழுவையும் ஒருங்கிணைத்து வந்தார்.
சுவாதி மோகன் யார்?
சுவாதி ஒரு குழந்தையாக அதாவது ஒரு வயது இருக்கும்போது அமெரிக்கா வந்தார். தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வர்ஜீனியா-வாஷிங்டன் டி.சி மெட்ரோ பகுதியில் கழித்தார். அவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடி-யிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்றிருக்கிறார்.
சுவாதிக்கு விண்வெளி மீது ஆர்வம் வந்தது சற்று சுவாரஸ்யமான நிகழ்வு தான். பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, சுவாதி மோகனுக்கும் ஆரம்பத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 9 வயதாக இருந்தபோது முதன்முறையாக 'ஸ்டார் ட்ரெக்' படத்தை பார்த்த ஸ்வாதிக்கு, விண்வெளி மற்றும் பிற கிரகங்களின்மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அந்தப் படத்தின் தாக்கத்தால் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணர விஞ்ஞானியாக மாற நினைத்தார், ஆனால் அவருக்கு 16 வயதாக இருந்தபோது, குழந்தை மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அவரின் இயற்பியல் ஆசிரியரின் கொடுத்த அறிவுரையால் பொறியியல் படிப்பில் சேர்ந்து மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்து நினைத்தது போலவே விண்வெளித் துறையில் கால்பதித்தார்.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் துவங்கியதிலிருந்தே அவர் மார்ஸ் ரோவர் மிஷனில் உறுப்பினராக உள்ளார். இது தவிர, அவர் பல முக்கியமானப் பணிகளில் பங்கேற்றுள்ளார். நாசாவின் காசினி (சனி கோளை ஆராயும் திட்டம்) மற்றும் கிரெயில் (மிஷன் மூன்) திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார்.
நாசாவின் இந்த வெற்றியைப் பற்றி சுவாதி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். முன்னதாக, ரோவர் களமிறங்கியதை,
“ரோவரின் தரையிறக்கம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல் PERSEVERANCE செவ்வாயின் மேற்பரப்பில் பாதுகாப்பாக, கடந்தகால தடயங்களைத் தேடுவதற்கு தயாராக உள்ளது," என்று உலகிற்கு அறிவித்தவரும் இவர் தான்.
சுவாதியின் சாதனை குறித்த தகவல் வெளிவர தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்பட வைத்த சுவாதி மோகனுக்கு வாழ்த்துக்கள்!