செவ்வாய் கிரகத்தில் சத்தம் எப்படி இருக்கும்? விடை கொடுத்த PERSEVERANCE ரோவர்!
செவ்வாயில் கேட்கும் சத்தங்களைப் பதிவு செய்து அனுப்பிய பெர்ஸிவரன்ஸ் ரோவர்!
செவ்வாய் கிரகத்தில் சத்தம் எப்படி இருக்கும் என்று என்றைக்காவது யோசித்து பார்த்திரிக்கிறீர்களா? பூமிக்கும் செவ்வாய் கிரகத்ததுக்கும் ஒலியில் மாற்றம் இருக்கமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுத்திருக்கிறது, பெர்ஸிவரன்ஸ் (Perseverance) ரோவர்.
செவ்வாயில் கேட்கும் சத்தங்களைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது. தினமும் 'பெர்ஸிவரன்ஸ்' 'Perseverance' ரோவர் செய்யும் பணிகளையும், எடுக்கும் படங்களையும் பெர்ஸிவரன்ஸ் ரோவர் மற்றும் நாசா என இரண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது நாசா. Perseverance பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

சத்தம் எப்படி பதிவாகிறது?
செவ்வாய் கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சற்று முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய Perseverance விண்கலத்தை விண்ணில் ஏவியது.
7 மாதம் பயணித்த இந்த விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்து, அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த நிலையில் நேற்று வளிமண்டல பாதையில் கீழே விழாமல் 7 நிமிடம் பயணித்து சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இந்த பெர்ஸிவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்தச் சத்தம் பதிவு செய்யப்படுகிறது. செவ்வாயில் காற்று வீசும் சத்தமும், பெர்ஸிவரன்ஸ் ரோவரில் இருந்து லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லைத் தாக்கும் சத்தமும் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியில் சாதாரணமாக நாம் கேட்கும் ஒலியானது செவ்வாயில் மிகவும் மெதுவாகவே கேட்குமாம்.
செவ்வாய் கிரகத்தில் லேசர்கள் கற்களை தாக்கும் போது எழும் ஒலியைக்கொண்டு, அந்த கல் எத்தனை கடினமானது என்பதை தீர்மானிக்க முடியும். மேலும்,
"ரோவரில் இருக்கும் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள் அந்தக் கல் குறித்தும், அது எதனால் உருவானது என்பது குறித்தும் தீர்மானிக்க நமக்கு உதவியாக இருக்கும்,” என்று ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான நவோமி முர்டாக் பேட்டியளித்திருக்கிறார்.
அடுத்த சில வாரங்களுக்குள் ரோவருடன் அனுப்பப்பட்டுள்ள ட்ரோனும் தன் வேலையைத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது நாசா. அப்படி என்றால் இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.
தொகுப்பு: மலையரசு

