நஞ்சில்லா சமூகத்தை உருவாக்க இயற்கை விவசாயி ஆன கம்யூட்டர் இன்ஜீனியர்!
பிரியா நஞ்சற்ற விவசாயத்தின் வழி ஆரோக்கியமான வாழ்வினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்திட ஒரு சகாப்தமாக தனிஒருத்தியாய் உழைத்து வருகிறார்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆயிரமாயிரம் சேர்மானங்கள் இன்று உணவுப் பொருள்களில் இரண்டறக் கலந்திருக்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், ரசாயன உரங்களாலும் உயிர்விக்கப்படும் காய்கறிகளை நாமே பார்த்திருப்போம். குறைந்தபட்சம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் நிற ஊக்குவிப்பான்களை ஊசியின் மூலம் காய்கறிகளில் செலுத்தும் வீடியோக்கள், ஜங்க் ஃபுட்ஸ் ஏற்படுத்தும் ஆபத்துகளை விளக்கும் வீடியோக்களையாவது நிச்சயம் பார்த்திருப்போம். ஆனால், அவ்வீடியோக்களுக்கு சேட் ஸ்மைலியிட்ட மறுகணம், ஃபுட் டெலிவரி ஆப்'பில் பீட்சா, பர்கரை தேடும் மனம் கொண்டவர்கள் ஆகிவிட்டோம்.
கலப்படங்களுடன் வாழ பழகிய நாம், அதை எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், சிலருக்கு இதுகுறித்த கவலை எழலாம். அவர்கள் நஞ்சற்ற உணவு முறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பர். ஆனால், இவர் எல்லோரிடமும் மாற்றத்தை கொண்டுவர, முதலில் தன்னிடமிருந்து தொடங்க வேண்டுமென எண்ணி, இன்று பிறருக்கான உந்துதலாக மாறியிருக்கிறார். அவர் பெயர் ஸ்ரீ பிரியா வர்தீஷ்வரன், முன்னாள் கம்ப்யூட்டர் இன்ஜீனியர், இன்னாள் இயற்கை விவசாயி...
பிரியா; நஞ்சற்ற விவசாயத்தின் வழி ஆரோக்கியமான வாழ்வினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்திட ஒரு சகாப்தமாக தனிஒருத்தியாய் உழைத்து வருகிறார். ஆம், தனி ஒருத்தியாய் தான்!
கணவனும், மகளும் அமெரிக்காவில் குடி கொண்டிருக்க, சமூகத்துக்காக 100 ஊழியர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி பணிபுரிந்து கொண்டிருந்த அவரது பணியை துறந்து, இந்தியா வந்தடைந்து இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
கொடைக்கானலில் கீழ்மலை பகுதியிலுள்ள காமனூர் எனும் கிராமத்தில் 81 ஏக்கர் நிலப்பரப்பளவில் காபி மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் விவசாயம் செய்து, நஞ்சில்லா சமூகத்தை உருவாக்க முயன்று வருகிறார். உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல ஆண்டுகளாக முயற்சித்து வரும் பிரியாவை பாராட்டி தமிழக அரசு, 2016ம் ஆண்டு ‘வேளாண் செம்மல்’ விருது அளித்தது.
பின்னே, 8 ஆண்டுகளாக கணவர் மற்றும் மகளை விடுப்பு தினங்களில் மட்டும் பார்க்க சென்று திரும்பி, 81 ஏக்கர் எஸ்டேட்டில் தனியாக சமூக உணர்வோடு உழைப்பது அத்தனை எளிதல்ல தானே! ஆனால், இதற்கான ஆதிப்புள்ளி எங்கிருந்து தொடங்கியிருக்கும்?! அவருடைய நண்பரது மரணம் கடத்திச் சென்ற சமூக உணர்வு இது என்றார் அவர்.
நண்பரின் இழப்பு அளித்த சமூக உணர்வு!
மதுரையை பூர்விகமாக கொண்ட ஸ்ரீ பிரியா வர்தீஷ், திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு, முதுகலைப் பட்டம் பெற்ற அவர், 100ஊழியர்களின் குழுவிற்கு தலைமை வகிக்கும் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் ரூ.70 லட்சம்.
2003ம் ஆண்டில் அவருடைய நண்பர் ஒருவருடைய இழப்பு, அவர்களது வாழ்வியலை இயற்கையோடு ஒன்றிணைக்க வைத்துள்ளது. கேன்சரால் நண்பர் இறக்க, எதனால் இத்தனை நோய்கள் பரவுகின்றன? என்ற அடிப்படை கேள்வி மனதுக்குள் எழுந்து பின், அதுவே விவாத கருவாகியது.
உணவியலில் ஏற்பட்ட மாற்றமே நோய்களுக்கான தொடக்கம் என்பதை உணர்ந்த அவர்கள், குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை தொட்டிகளில் வளர்த்து உபயோகித்துள்ளனர். சிகாகோவில் 2 ஆண்டுகளாக வீட்டுத்தோட்டம் அமைத்த நிலையில், 2006ம் ஆண்டில் அந்த நாட்டில் உள்ள ‘கம்யூனிட்டி கார்டன்’ திட்டத்தின் கீழ் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவரை போன்றே விவசாய ஆர்வம் கொண்ட பல்வேறு நாட்டினரும் வேளாண் செய்துள்ளனர். அவர்கள் விளைவிக்கும் பொருள்களை பண்டமாற்று முறையில் ஒருவருக்கொருவர் வழங்கி கொண்டுள்ளனர். பிரியா அவர் விளைவித்த காய்கறிகள் வீட்டு தேவைக்கு போக மீதமுள்ளவற்றை ஹோம்லெஸ் ஷெல்டர்களுக்கு கொடுத்துள்ளார். அதில் கிடைத்த பேரானந்தமும், மனநிறைவும் அவரை, அதை நோக்கியே பயணிக்க செய்துள்ளது.
“உணவுப் பழக்கத்தால் இத்தனை நோய்களானு எண்ணும் போது எங்களுக்குள் பெரிய விவாதமே நடந்தது. அப்போ, எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விளைவித்தோம். ஏன் எல்லாரும் நாம், நம் குடும்பம்னு சுயநலமாக யோசிக்கிறோம், சமூகத்திற்காகவும் சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான் அமெரிக்காவில் குத்தகைக்கு நிலமெடுத்த 8 ஆண்டுகளாக அங்கு விவசாயம் செய்தோம்.
நாங்கள் விளைவித்த காய்கறிகளை ஹோம்லெஸ் ஷெல்டர்சுக்கு கொடுத்தில் மனநிறைவும், மனதிற்கு பிடித்த விஷயம் செய்கிறோம் என்ற உணர்வும் கிடைத்தது.
அந்த ஒரு திடமான உணர்வுக்கு பிறகு, விவசாயம் செய்வது உறுதியாகியது. அது ஏன், நம்மூரில் பெற்றோர்களுக்கு அருகிலிருந்து அவர்களையும் கவனித்து கொண்டு, ரிட்டயர்மென்ட் லைஃப்- ஆ பண்ண கூடாதுனு சிந்தித்து இந்தியா திரும்ப முடிவு பண்ணினோம். ஆனா, அதற்கு யாராவது ஒருத்தர் முன்னாடியே இந்தியாவில் குடியேறவேண்டும்.
பொண்ணு அங்கு படித்து கொண்டிருந்ததால், பொண்ணும், கணவரும் அமெரிக்காவிலும், நான் மட்டும் தனியா இந்தியா திரும்ப முடிவு பண்ணினோம். என்னுடைய இந்த முடிவிற்கு என் கணவர் ரொம்பவே சப்போர்ட் செய்தார். ஆனா, நல்ல வேலையை விட்டு, குடும்பத்தை பிரிந்து வருவதில் என் அப்பாவுக்கு விருப்பமில்லை. அதனாலே, என்னை நிலம் வாங்கவிடாமல் அது சரியில்லை, இது சரியில்லைனு தட்டி கழித்து கொண்டேயிருந்தார். கடைசியா, சிகாகோவில் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் கிளைமைட்டில் இருந்தேனு, காமனூரில் மொத்த காசையும் போட வைத்துவிட்டார்.
3000 வாழைகளை நாசம் செய்த காட்டெருமை!
என்னோட மொத்த பிளானும் மாறிருச்சு. நான் சிட்டிக்கு பக்கத்திலே நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா காய்கறிகளின் ஆரோக்கியமான சமூகமாக்க வேண்டும் என்பது தான் என் பிளான். ஆனால், இது காபி எஸ்டேட். வேலையாட்கள் அதிகம் தேவை. நிலப்பரப்பு, வானிலை எல்லாமே புதிது. அனைத்தையும் தொடக்கத்திலிருந்து கற்று கொள்ள வேண்டியதாக இருந்தது.
முதல் 3 ஆண்டுகள் முழுக்க சொந்த அனுபவங்கள் மூலம் நிறைய பிழைகள் செய்து கற்றுகொண்டேன். அப்படி காபி பயிரிட்டதில் மிகப்பெரிய பிழை செய்தேன். அதுவும் எக்ஸ்பென்சிவ் பிழை. ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நடவு செய்யத் தேவையில்லாத வற்றாத பயிர் காபினு தெரியாமல், 30 ஏக்கர் காபிகளை பறித்து புது அறுவடை செய்துவிட்டோம். அதனால், எங்களுக்கு வந்து கொண்டிருந்த பணமும் குறைந்து விட்டது. காபி, அவகேடா என நெடுங்கால பயிர்களை பயிரிட்டிருந்ததால், செலவு மட்டுமே செய்து கொண்டிருந்தேன், வரவே இல்லை.
14மாதங்களில் விளையும் மலை வாழைப்பழம், 90 முதல் 120 நாட்களில் அறுவடை செய்துவிடக் கூடிய காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினேன். நிலத்தை சுற்றி 6 அடிக்கு கம்பி வேலி இருப்பதால், காட்டெருமைகள் உள்ளே வராது என்று நினைத்திருந்தேன். ஆனா, அதுக்கு இருக்கிற வலிமையில் ஓடிவந்துலாம் இல்லை நின்ன இடத்தில் 6 அடி கம்பிவேலியை அசால்ட்டா தாண்டுச்சு. இத்தனைக்கும் வேலியின் நுனியை கூட டச் பண்ணல. ஓவர் நைட்டில் 3000 வாழைகள் காலி.
இது மாதிரி ஏகப்பட்ட சொதப்பல்கள், அதிலிருந்து கற்றல்கள் என இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அந்த சமயங்களில் விரக்தியா இருக்கும். என்னால இத முடியாதா? என்ற எண்ணம் தான் தொடர்ந்து செயல்பட வைத்தது. பிழைகளை சரிசெய்து கொண்டேன். இப்போ, 6 நாட்டு மாடுகள், மீன் குளம்னு ஒருங்கிணைந்த பண்ணையாக்க முயற்சித்துவருகிறேன்.
எஸ்டேட்டை வானகமாக்கிட எண்ணிய நம்மாழ்வார்!
லக்கிலி, இந்தியா திரும்பிய சில மாதங்களிலே நண்பர் ஒருவரின் மூலம் நம்மாழ்வார் ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு நான் வேலையை விட்டு வந்ததெல்லாம் பெருசா தெரியல. போதுமான அளவு பணம் இருந்து, போதும் நினைச்சிட்டா யாரு வேணா வேலையை விடலாம். ஆனா, குடும்பத்தை விட்டு தனியா இருக்கேன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாரு. நிறைய டிரையினிங் கொடுத்தாரு, வழிகாட்டினார்.
இம்முயற்சியில் நான் தோல்வியடைந்து விடக்கூடாதுனு ரொம்ப விரும்பினார். ஏன்னா, நான் தோல்வியடைந்து விட்டால் என்னை போன்று விவசாயம் செய்ய வரும் பிறருக்கு டிஸ்கரேஜ்ஜா இருக்கும். அதனால், அவர் என்னை ஒரு வெற்றியாளராக்கி பிறருக்கான உதாரணமாக்க விரும்பினார்.
ஒருநாள் ஐயா என்னிடம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு போயிட்டு வரச்சொன்னார். அங்க போயி, கூர்ந்து கவனிச்சிட்டு வந்து சொல்லுனு எனக்கு ஒரு டாஸ்க் மாதிரி கொடுத்தார். நான் அப்போது கற்றுக்கொண்டிருந்த தொடக்கம். ஐயா என்ன சொன்னாலும், அதை 200 சதவீதம் சரியா செய்திட முயற்சிப்பேன்.
அப்படி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட் போனப்ப தான் நிறத்தை அதிகரிக்க தர்பூசணி பழத்தில் சாயத்தை ஊசியால் இறக்குவதை பார்த்தேன். உடம்பெல்லாம் ஆடிபோகிற அளவுக்கு எனக்கு பயங்கர ஷாக். அமெரிக்காவில் உணவினை வெறும் கைகளால் கூட தொடமாட்டாங்க. உணவினை அங்கு கையாளும் முறையே வேறு. இங்கு, அதுவும் செடிகளில் கூட கிடையாது, நேரடியாக சாப்பிடும் பொருளில் இப்படி சாயம் ஏத்துறதை பார்த்துட்டு, ஐயாவிடம் ஓடிவந்து,
‘என்ன ஐயா நடக்குது இங்க’னு கேட்டதற்கு அவர், ‘நான் அதுக்காக தான் உன்னை போய் பார்க்கச் சொன்னேன்மா, நான் சொல்லி தெரிந்திருந்தா, உனக்கு அது ஒரு விஷயமா இருந்திருக்காது. கண்ணால நாம அதை பார்க்கும் போது, நமக்கு ஒரு ஆத்திரம் வரும். அது சரி செய்யனும்னு வேகம் வரும்’னு சொன்னார்.
ஒரு நாள் எஸ்டேட்டுக்கு வந்து பார்வையிட்டார். இந்த இடத்தை வானகத்தின் பயிற்சி மையமாக மாற்றனும்னு 2013ம் ஆண்டு செப்டம்பரில் புரோஜக்ட்டை தொடங்கினோம். ஆனா, எதிர்பாராத விதமாய் டிசம்பர் மாதம் ஐயா இறந்துவிட்டார். அந்த புரோஜெக்ட் அப்படியே முடிந்துவிட்டது. இருப்பினும், ஐயாவின் ஆசைகளை தொடர முயற்சித்து வருகிறேன்.
16படி விதையில் 3 டன் சாதனை மகசூல்!
சாகுபடி செலவுகளை பூஜ்யமாக்கி, ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதை ‘ஜீரோ-பட்ஜெட் வேளாண்மை’ எனும் பெயரில் இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துவரும், ‘விவசாய விஞ்ஞானி’ சுபாஷ் பாலேக்கரது பயிற்சி வகுப்புகளுக்கு சென்று செலவில்லா வேளாண்மையை கற்றுத் தேர்ந்துள்ளார்.
ராசயானங்கள் ஏதுமின்றி, முழுக்க முழுக்க இயற்கை வேளாண் முறையில் பட்டர் பீன்ஸ், சௌ சௌ, பூசணி, கேரட், புரக்கோலி, வெங்காயம் ஆகிய காய்கறிகளை விளைவித்து வருகிறார்.
செலவில்லா வேளாண் முறையில் பட்டர் பீன்ஸ் சாகுபடியில் சாதனை மகசூல் செய்து அசத்தியுள்ளார். 16 படி விதைக்கு 3 டன் பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார். இயற்கை வேளாணில் அதிகபடியான மகசூல் பெற்றதை காட்டிலும், இதனால் மக்களுக்கு ஆர்கானிக் உணவு குறைவான விலையில் கொடுக்க முடிகிறது என்பதையே அவர் வெற்றியாக கருதுகிறார். அதுவே அவரது குறிக்கோளும்...
ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்படும் அனைத்தும் விலைமதிப்பானவை என்ற சூழல் நிலவுகையில், அதை உடைத்தெறியும் எண்ணத்துடன், ஆரோக்கியமான உணவு ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்லி அதை நிறைவேற்றிட உழைத்து கொண்டிருக்கிறார்.
அவரது வெற்றியால் களிப்படைந்த சிறு, குறு விவசாயிகளும் பிரியாவின் உதவியை நாடத்தொடங்கியுள்ளனர். செலவில்லா வேளாண் முறையை இலவசமாக சிறு விவசாயிகளுக்கு கற்று கொடுத்து மாற்றத்திற்கான விதையை விதைத்து வருகிறார் அவர். நஞ்சில்லா உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல கல்லூரிகளுக்கும் சென்று உரையாற்றியுள்ளார். அப்படி, கல்லூரிகளுக்கு பயணம் மேற்கொள்வதைவிட அவர்களை களம் காணவைத்தால் பலன் இன்னும் அதிகம் என்பதை உணர்ந்த அவர், தோட்டத்திற்குள்ளே ‘தி ப்ளூமேரியா ஈகோட்ரையல்ஸ்’ எனும் பெயரில் ரெசார்ட் ஒன்றை கட்டியுள்ளார்.
“விடுதியில் தங்குபவர்களுக்கு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளில் உணவு சமைத்து அளிக்கப்படுகிறது. வண்டி ஹாரன்களுக்கு மத்தியில் நாளை தொடங்குபவர்களுக்கு, இங்கு பறவைகளின் சத்தமே அலாரம். அத்துடன் ஒரு நாள் விவசாயி ஆக, தோட்டத்தில் இறங்கி வேலை பார்க்கலாம். ஒரு நாளில் கிடைக்கும் அனுபவத்தினால், தொடர்ந்து நஞ்சில்லா உணவினை உண்ண விரும்புவர்,” என்றார் பிரியா.
கொரோனா கால விர்ச்சுவல் கார்டன் டூர்!
லாக்டவுண் நாட்களில் அமெரிக்காவுக்கு சென்று கணவர், மகளுடன் நேரத்தை செலவழித்த பிரியாவிற்கு, அந்நாட்களிலும் அவர் மனம் முழுக்க விவசாய எண்ணங்களே. நாலு சுவருக்குள் இருந்த போதிலும், எண்ணற்ற மக்களை வீடுகளிலே காய்கறிகளை விளைவிக்க ஊக்குவித்துள்ளார்.
வீட்டுக்கு ஒரு விவசாயி உருவாக்கும் நோக்கிலும், முகநூலில் ‘கிச்சன் கார்டன் அட் எவ்ரி ஹோம்’ என்ற பக்கத்தை துவங்கியுள்ளார். அதில், வீட்டுக்குள் விவசாயம் மேற்கொள்பவர்களுடன் ஃபேஸ்புக் லைவ்வில் உரையாடி அவர்களது அனுபவங்களையும், வளர்ப்பு முறைகளை பற்றி பிறர் அறிய செய்துள்ளார். அத்துடன், கார்டனிங்கு புதிதாக அறிமுகமாகுபவர்களுக்கு, போதுமான ஆலோசனைகள் வழங்கியதாக அவர் கூறியதிலிருந்தே எண்ணற்ற வீட்டுக்குள் ஒரு விவசாயிகளை உருவாக்கியதில் அவரடைந்த ஆனந்தம் வெளிப்பட்டது.
81 ஏக்கர் எஸ்டேட்டுக்குள் தனி மனிதியாய் சமூக அக்கறையுடன் போராடும் பிரியா, வியப்பின் குவியல். உங்களது சேவைக்கு வாழ்த்துகள்...