தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு; விக்கி - நயன் திருமண ஸ்பெஷல்!
திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 18000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்திருந்தது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 18000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்திருந்தது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று காலை இந்து முறைப்படி கோலாகலமாக நடந்துள்ளது. இந்த நல்ல நாளில் ஆதரவற்ற குழந்தைகளின் வயிற்றை குளிரவைத்து, காதல் தம்பதி இருவரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்:
கோலிவுட் வானில் காதல் பறவைகளாக 6 ஆண்டுகளாக வட்டமிட்டு வந்த பிரபல நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, இன்று முதல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வந்த போதே விக்கி - நயன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் அடிபட்டன. ஆனால், இது எப்போதும் போல் வதந்தியாக இருக்கும் என ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்களுக்கு நயன் - விக்கி ஜோடி திருமண பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, 6 ஆண்டு கால காதலை அதிகாரப்பூர்வ பந்தமாக மாற்ற களமிறங்கிய விக்கி - நயன் ஜோடிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து மழை குவிய ஆரம்பித்தது. சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங் டாப்பிக்கே இதுதான். இந்நிலையில்,
இன்று காலை இந்து முறைப்படி நயன்தாரா கழுத்தில் தாலி கட்டி விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டுள்ளார். காலை 10:20 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
பவுண்சர்கள் சூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடு:
திருமணத்திற்கு மிகவும் குறைவாக 700 பேரை மட்டுமே நயன்தாரா அழைத்துள்ளார். மேலும், திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்களான பவுன்சர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
மண்டபத்திற்கு உள்ளே மட்டுமின்றி, மண்டபத்திற்கு பின்புறம் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழையக் கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர். மேலும், மண்டபத்தின் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மண்டபத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள், முதியவர்கள் கோவில்கள் என மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள்:
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன், சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, குஷ்பு, மலையாள நடிகர் திலிப் ஆகியோர் பங்கேற்றனர்.
அஜித்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் திருமணத்தில் பங்கேற்கவில்லை. அவர் சார்பாக மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் அஜித்குமார் மற்றும் ஷாலினியின் தங்கை ஷாமிலி ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர்களில் ஏஆர்.ரகுமான் அவரது மகன், ஏஆர்ஆர்.அமீன் உடன் பங்கேற்றார். அனிருத் அவரது பெற்றோர் ரவி ராகவேந்திரா, லக்ஷ்மி ராகவேந்திரா ஆகியோருடன் பங்கேற்றார்.
இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், அனு வர்தன், அட்லி, ஹரி, பிரீதா ஹரி மோகன் ராஜா, எடிட்டர் மோகன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ், வெற்றி, வேல்ராஜ் , தினேஷ் மற்றும் பாடலாசிரியர் தாமரை என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
ஆடை, அலங்காரத்துடன் ஜொலி, ஜொலித்த தம்பதி:
மோனிகா மற்றும் கரிஷ்மாவின் ஜேட் வடிவமைத்த கவர்ச்சியான சிவப்பு நிற டிசைனர் புடவையுடன் நயன்தாரா மணப்பெண்ணாக மனதை கவர்ந்திழுத்துள்ளார்.
மோனிகா ஷாவால் வடிவமைக்கப்பட்ட பிரபலமான ஜேடி வெர்மில்லியன் ரெட் கலர் ஹேண்ட் மேட் புடவையை நயன்தாரா அணிந்திருந்தார். முழுவதும் டிசைன் செய்யப்பட்ட தழைய தழைய டார்க் ரெட் கலர் சேலையை, ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் உடன் அணிந்திருந்தார். கழுத்து நிறைய நகை, நெத்திச் சுட்டி, வளையல், தலையில் துணி என தேவதை போல் வந்தார்.
விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அங்க வஸ்த்திரம், கழுத்தில் செயின், கையில் பிரேஸ்லெட் என மாப்பிள்ளை மிடுக்குடன் கலக்கினார். விக்கிக்கு திருமண உடையை ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினைஞர்களால் மிகவும் கடினமான கைவினைப்பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நயன் - விக்கி திருமண விருந்து மெனு:
செட்டிநாட்டு மெனுவை வைத்து அசைவத்திற்கு இணையான அசத்தலான சைவ உணவுகளை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி ஏற்பாடு செய்திருந்தனர்.
பன்னிர் பட்டானிக்கறி, பருப்புக் கறி, அவியல், மோர் குழம்பு, மிக்கன் செட்டிநாடு கறி, உருளை கார மசாலா, வாழைக்காய் வறுவல், சென்னா கிழங்கு வறுவல், சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பொரியல் பீன்ஸ் பொரியல், காய் பொரிச்சது, பொன்னி ரைஸ், பலாப் பழம் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், தயிர்வெஜி டபுள் ரைதா, வடகம், வத்தல், அப்பளம், ஏலக்காய் பால், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், கேரட் ஐஸ் கிரீம் என இலை நிறைய விருந்து படைத்துள்ளனர்.
18 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு:
திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள சுமார் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று இலவசமாக மதிய உணவு வழங்க நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் பலவகையான விமர்சனங்களையும் விக்கி - நயன் ஜோடி வாழ்த்துக்களாக மாற்றியுள்ளது.
விமர்சனங்களை வாழ்த்துக்களாக மாற்றிய நயன்:
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸுக்கு 25 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக தகவல்கள் பரவின. திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று முன் தினமே தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், சோசியல் மீடியாவில் ஒரு போட்டோவைக் கூட காணமுடியவில்லை.
மேலும், காலையில் திருமணம் நடக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்தது, ஊடகங்களுக்கு தடை விதித்தது போன்ற செயல்கள் ஓடிடி விவகாரத்தை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தன.
இதனால் காலை முதலே சோசியல் மீடியாவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விவகாரம் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. ‘திருமணத்தை கூட இப்படி காசு விற்பாங்களா?’ என பலரும் நயனை விமர்சித்து வந்தனர். இதனிடையே, 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஏற்பாடு செய்த செய்தி வெளியாகி, இப்படிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கியுள்ளது.