செயற்பாடுகள் தற்காலிக நிறுத்தம்: ஜெட் ஏர்வேஸ் எதிர்காலம் என்ன?
கடந்த பல மாதங்களாக ஆகாயத்தில் தடுமாறிக்கொண்டிருந்த தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தரையிறங்கியிருக்கிறது. நேற்று இரவு மும்பைக்கு பறந்த கடைசி விமானத்துடன் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நிறுவனம் கடன் சுமை, சம்பள பாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது, ஜெட் ஏர்வேஸ் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இதே போல தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டு பின்னர் மூடப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கதையை நினைவுபடுத்தும் வகையில் ஜெட் ஏர்வேஸ் கதை அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
விண்ணை நோக்கி…
26 ஆண்டுகளுக்கு முன், 1993 ம் ஆண்டு இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாட்டைத் துவங்கியது. வசீகரம் மிக்க தொழிலதிபர்களில் ஒருவராக கருதப்படும் நரேஷ் கோயலால் ஜெட் ஏர்வேஸ் துவங்கப்பட்டது. முதலில் ஏர் டாக்சி நிறுவனமாக துவங்கிய ஜெட் ஏர்வேஸ் பின்னர் விமான சேவை உரிமம் பெற்று வேகமாக வளர்ந்தது. உள்ளூர் சேவையை வழங்க வந்த நிலையில், 2004 ல், சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவிற்கான சேவை மூலம் சர்வதேச சேவையை ஜெட் ஏர்வேஸ் அளிக்கத்துவங்கியது.
இந்திய தனியார் விமான சேவை நிறுவனங்களில் வெளிநாட்டு விமான சேவையை அளிக்கத்துவங்கியதாக ஜெட் ஏர்வேஸ் கருதப்படுகிறது.
2005 ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் ரூ.1,100 க்கு பட்டியலிடப்பட்டு, அதன் சந்தை மூலதனம் ரூ.11,266 கோடியாக இருந்தது.
இதனிடையே ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட குறைந்த விலை விமான சேவைகளால் போட்டி அதிகரித்த நிலையில் 2007 ஏர் சஹாரா நிறுவனத்தை ரூ1,450 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த கையகப்படுத்தல் ஜெட் ஏர்வேசுக்கு தொடர்ந்து பிரச்சனையாகவே இருந்ததாக கூறப்படுகிறது. 2013, சவுதி அரேபியாவின் இதிஹாத் ஏர்வேஸ் நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பிறகு 24 சதவீத பங்குகளை வாங்கியது.
சிறந்த சேவை மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருந்த ஜெட் ஏர்வேஸ். கடந்த ஆண்டு கடன் சுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித்தவித்தது. 2018 மார்ச் மாதம் முதல் ஊழியர்களுக்கான ஊதியம் தாமதமாகத்துவங்கியது நிறுவனத்தில் பிரச்சனைக்கான முதல் அறிகுறியாக அமைந்தது.
தொடர்ந்து பிரச்சனைகளில் தத்தளித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிக் கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் தடுமாறியதோடு, எரிபொருள் கட்டண பாக்கி, விமான குத்தகைத் தொகை ஆகியவற்றை செலுத்த முடியாமல் தடுமாறியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் பிரச்சனை மேலும் மோசமானது.
இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுவனம் பல மார்கங்களில் தனது விமானங்களை இயக்க முடியாமல் தடுமாறியது. இதனிடையே விமானிகளுக்கான சம்பள பாக்கி பிரச்சனை தொடர்பான தகவல்களும் வெளியானது.
பல ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள நிலையில், ஜெட் ஏர்வேசுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டவை மற்றும் நிர்வாகம், நிறுவனத்தை மீட்பதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்வது பற்றியும் பேசப்பட்டது.
இந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன் அளிக்கத்தவறிய நிலையில், ஜெட் ஏர்வேசின் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமானது. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உண்டானது. ஜெட் ஏர்வேசை மீட்கும் முயற்சி எதுவும் பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை.
ஒரு பக்கம் கடன் சுமை அழுத்த மறுபக்கம் செயல்பாட்டு மூலதனத்திற்கு தடுமாறி ஜெட் ஏர்வேஸ் வங்கிகள் கைகொடுக்கக் கோரிக்கை வைத்தது. அவசர நிதியாக ரூ.400 கோடி கிடைத்தால் மட்டுமே செயல்பாடுகளை தொடர முடியும் என்ற நெருக்கடி உண்டானது. ஆனால் வங்கிகள் இதற்கு உடன்பட மறுத்துவிட்டன.
எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்காத நிலையில், ஜெட் ஏர்வேஸ் நேற்று இரவு அமிர்தசர்சில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட விமானத்துடன் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கடைசி விமான சேவையில் பயணித்த பயணிகளில் பலர் ஜெட் ஏர்வேஸ் தற்காலிக முடக்கம் குறித்து சோகம் அடைந்தனர். பலரும் டிவிட்டரில் தங்கள் வருதத்தை வெளிப்படுத்தினர்.
கடந்த 2012 ம் ஆண்டு கிங்பிஷர் விமான சேவை நிறுவனம் இதே போல தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மூடப்பட்டது. அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதே பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது.
மே மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் ஜெட் ஏர்வேஸ் கையகப்படுத்தப்பட்டால் மீண்டும் பறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் கடனில் தவிக்கும், விமான சேவையை எந்த நிறுவனம் வாங்க முன்வரும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. அப்படியே நிறுவனம் வாங்கப்பட்டாலும், புதிய அடையாளத்துடன் தான் வானில் பறக்கும் என கூறப்படுகிறது.
எனவே, 26 ஆண்டுகளாக இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் தரையிறங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது. இதனிடையே ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிந்துள்ளன. அதே நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் பங்குகள் உயர்ந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் செயல்பாடுகள் நிறுத்தம் மற்ற நிறுவவங்களுக்கு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.
எனினும், இந்திய விமான சேவையில் வெற்றிக்கதையாக கருதப்பட்ட ஜெட் ஏர்வேஸ், செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டிருப்பது அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு, இந்திய விமான சேவை துறையின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ’தெருவில் இருந்து ஆகாயம் வரை... ’ உலகெங்கும் விமானத்தை பறக்கவிட்ட ’ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனரின் கதை!