‘என் மகனுக்கு டவுன்ஸ் சின்ட்ரோம்; அவருக்கு தடுப்பூசி தேவையா வேண்டுமா? கேள்வி எழுப்பிய பாலிவுட் தயாரிப்பாளர்!
டுவிட்டரில் விவாத பொருளான பதிவு!
பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா நேற்று டுவிட்டரில் தனது 25 வயதான மகன் பல்லவாவின் படத்தைப் பகிர்ந்து கொண்டு,
“எனது மகன் பல்லவாவிற்கு 25 வயது. அவருக்கு டவுன் சின்ட்ரோம் நோய்க்குறி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஆபத்தான சுவாசக் கோளாறு ஏற்பட்டு, இறக்கும் நிலைக்குச் சென்று உயிர் பிழைத்தார். அவருக்கு தடுப்பூசி என்பது தேவையா? அல்லது வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுவோர் குறித்து விளக்கத்தில், தடுப்பூசி வேண்டும் என்பவர்களைத் தாண்டி அது தேவைப்படுவோருக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் சமீப காலமாக கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாம் அலையில் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனையடுத்து, இளம் வயதினருக்கும் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காரணம், 45 வயது மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதனையடுத்தே, மத்திய அரசின் நடவடிக்கையை கேள்வி எழுப்பும் வகையிலும், தனது மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா இப்படி ஒரு கேள்வி எழுப்பி டிவிட்டரில் பதிவிட்டார்.
இவரின் பதிவு மத்திய அரசை நோக்கி நிறைய எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரின் பதிவை பார்த்த பலர் ஹன்சலின் மகன் இளம் வயதினர் எனபதைத் தாண்டி தடுப்பூசி தேவை என்று ஒப்புக்கொண்டனர்.
மேலும், டவுன்ஸ் சிண்ட்ரோம் நோய்க்குறி உள்ளவர்கள் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் என்று அதில் ஒருவர் சுட்டிக்காட்டினார். அதற்கு, "அப்படியா? செயல்முறை மற்றும் அறிவிப்புக்கு தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நன்றி" என்று ஹன்சால் அந்த நபருக்கு பதிலளித்தார்.
டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.
“டவுன்ஸ் சிண்ட்ரோம் என்பது நோயாளிகளின் உடலியல் செயல்பாடுகளில் சிக்கல்களைக் கொண்ட ஒரு நோயுற்ற நிலை. நாடு தழுவிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் அவர்களை முன்னுரிமை குழுவில் சேர்ப்பது நல்லது” என்று தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மின்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினம் நடந்த சுகாதார அமைச்சகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அதில்,
“தடுப்பூசியை விரும்புவோருக்கு வழங்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. ஆனால் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.
கோவிட் -19 தடுப்பூசிகள் ஏன் அனைவருக்கும் செலுத்த அனுமதிக்கவில்லை. எல்லா வயதினருக்கும் இதை ஏன் வழங்க முடியாது என்பது இந்த நாட்களில் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வி. அப்படிக் கேட்பவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் இரண்டு நோக்கங்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று நான் கூற விரும்புகிறேன்.
ஒன்று இறப்புகளைத் தடுப்பது, மற்றொன்று உங்கள் உடல்நல முறையைப் பாதுகாப்பதாகும். முக்கிய நோக்கம் தடுப்பூசியை விரும்புவோருக்கு வழங்குவதல்ல, ஆனால் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதாகும். நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது," என்று கூறினார்.