தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும் ஒரு பார்வை!
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த நிதி நிலைமை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி ஒரு பார்வை.
தமிழ்நாட்டின் நிதி நிலை தொடர்பாக தீவிரமான விவாதத்தை நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கை மூலம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்திருக்கிறார். கடந்த ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து, மாநிலக் கடன் சுமையும் அதிகரித்துள்ளது என்பதை தரவுகளுடன் வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், நிதி நிலை மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதும், இதில் நிதி பற்றாக்குறை, கடன் சுமை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக வெளிப்படையான முறையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும், வல்லுனர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
கடன் சுமை
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 அளவுக்கு கடன் சுமை இருக்கிறது. கடன் சுமை அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை முற்றிலும் குறைந்துவிட்டது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது.
அதிமுக அரசின் வீண்செலவுகளால் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.50,000 இழப்பு, சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் ரூ.1 லட்சம் கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது என்றும், வெள்ளை அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.
மின்சார வாரியம், போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது, 1 கி.மீக்கு பேருந்துகள் இயக்கப்படும் போது ரூ.59 நட்டம் ஏற்படுகிறது. 1 ரூபாய் வருமானம் வந்தால் ஊதியம், ஓய்வூதியத்துக்கு ரூ.2க்கு மேல் செலவாகிறது என்றும் நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழக அரசுக்கு வணிக வரி மூலமான வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி 30% குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவாத அறிக்கை
130 பக்கங்களைக் கொண்ட இந்த வெள்ளை அறிக்கை, பல்வேறு தலைப்புகளில் மாநில நிதி நிலையை மிக விரிவாக விவரித்துள்ளது. இதில் குற்றச்சாட்டுகளாக அள்ளி வீசப்பட்டுள்ளன என எதிர்கட்சிகள் விமர்சிக்க வாய்ப்பிருந்தாலும், உள்ளபடியே மாநில நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருப்பதாகவே பரவாலாக பாராட்டப்படுகிறது.
இந்த அறிக்கை பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கும் நிலையில், இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதற்கு நிதி அமைச்சரை பாராட்ட வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பழனிவேல் தியாகராஜன் துவக்கம் முதலே தனது கருத்துக்களை துணிச்சலுடன், தெளிவாகப் பேசி வருகிறார். பொருளாதாரத்தில் வலுவான பின்புலம் கொண்ட தியாகராஜனின் செயல்பாடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பட்ஜெட்டிற்கு முன்பாக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம் என்று கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், மாநிலத்தின் நிலை குறித்து மக்கள் உண்மையை அறிந்து கொள்வது அவசியம், இதற்காக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட உறுதி கொண்டிருக்கிறேன் என்று நிதி அமைச்சர் ஆங்கில நாளிதழ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
நோக்கம் என்ன?
நிதி அமைச்சர் சொன்னபடியே ஆழமான தரவுகளுடன் மிக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். மாநில நிதி நிலை என்ன என்பதையும் இந்த அறிக்கை தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.
இப்படி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மாநில நிதி நிலை குறித்த தகவல்களை வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் வைத்திருப்பது பாராட்டுக்குறியது என பொருளாதார வல்லுனர் சோம வள்ளியப்பன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியிருக்கிறார்.
நிதி நிலை குறித்த தகவல்களும், தரவுகளும் ஏற்கனவே பொருளாதார வல்லுனர்கள் அறிந்தது என்றாலும், அதை மக்கள் மன்றத்தில் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதோடு, சாமானிய மக்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் இதைச் செய்திருப்பதும் பாராடப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த வெள்ளை அறிக்கை என்னவிதமான பலன்களை அளிக்கும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
இந்த வெள்ளை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக அரசு ஆட்சியை விட்டு சென்ற போது ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் இருந்தது என்றும், அதிமுக அரசு வாங்கிய கடனில் பாதிக்கு மேல் மூலதனமாக மாறியிருக்கிறது என்றும் அவர் செய்தியாளர்களிடன் கூறினார்.
திமுக அரசு தேர்தல் போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், மாநில நிதி நிலைமையே அதற்கான காரணம் எனக்கூறி கடந்த ஆட்சி மீது பழியை போடுவதே இதன் நோக்கம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.
கடந்த ஆட்சியில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்ததாக கூறியுள்ள ஜெயகுமார், 17 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, மாநில வருவாய் அதிகரிப்பதற்கு ஏன் வழி செய்யவில்லை என்றும் கேட்டிருக்கிறார்.
ஆனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தின் துவக்கமாகவே இந்த அறிக்கை அமைகிறது என திமுக தரப்பில் இதற்கு பதில் அளிக்கப்படுகிறது.
வரி உயருமா?
இந்த அறிக்கை வெள்ளை அறிக்கை அல்ல, பச்சை அறிக்கை தான் என்று கூறுகிறார் அரசியல் நோக்கரான தராசு ஷியாம். வெள்ளை அறிக்கை என்பது உள்ள நிலையை விவரிப்பதோடு, அதற்குத் தீர்வான திட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் ஷியாம், இந்த அறிக்கையில் செயல்திட்டங்கள் எதுவும் இல்லாததால்; இது நிலைமையை விவரிக்கும் பச்சை அறிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள், மக்கள் மத்தியில் நிதி நிலை குறித்த விவாதத்தை ஏற்படுத்தும் மற்றும் வரி உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நம்மிடம் தரவுகள் இல்லை என்று நிதி அமைச்சர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஷியாம், தரவுகளை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்.
திமுக அறிவித்துள்ள முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் வரும் என்ற அச்சம் உண்டாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மானியம் தொடர்பான விஷயங்களையும், மானியங்கள் சரியானவர்களுக்கு போய் சேர்வதில்லை என்பதையும் நிதி அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பொருளாதார வல்லுனர் ஸ்ரீராம் சேஷாத்ரி கூறியுள்ளார்.
ஆனால், வெள்ளை அறிக்கையில் தரவுகள் மட்டுமே உள்ளன ஆனால் செயல்திட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காத்திருக்கும் சவால்
ஆக, நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தமிழக அரசியலில் சூடான விவாத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. பொதுமக்களும் ஆர்வம் கொள்ளும் வகையில் இந்த விவாதம் அமைந்திருப்பதும் ஆரோக்கியமானது.
அதே நேரத்தில் திமுக அரசின் முன் உள்ள சவால்களை சுட்டிக்காட்டுவதாகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளது,. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதும் எத்தனை கடினமாக இருக்கும் என்பதை இந்த அறிக்கை புரிய வைத்துள்ளது.
ஆனால், கடந்த ஆட்சியை குறை சொல்வதோடு நின்றுவிடாமல், அதிலிருந்து மீண்டு வரும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. நிதி நிலையை சீராக்க முக்கிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நிதி அமைச்சர் உணர்த்தியுள்ளார்.
நிதி அமைச்சர் வரும் 13ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் வெள்ளை அறிக்கை மீதான விவாதங்களுக்கான பதில் இருப்பதோடு, சிக்கலான நிதி நிலையை சமாளிப்பதற்கான திட்டங்களோடு, வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களும் இருக்கும் எனும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த எதிர்பார்ப்பை நிதி அமைச்சர் எந்த அளவு நிறைவேற்றுகிறார் என பொருந்திருந்து பார்ப்போம்.