ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்வோம்: பெங்களூரு தொழில் முனைவோர்களிடம் உறுதி அளித்த ராகுல் காந்தி!
தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி, ஏஞ்சல் டாக்ஸ், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
இந்திய தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் 2019 மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தை துவக்கியுள்ளன. கட்சிகள் ஒவ்வொரு பிரிவினரையும் ஈர்க்க முயன்று வருகின்றன.
ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களும் அரசியல் கட்சிகளால் அலட்சியப்படுத்த முடியாத சக்திகளாகி இருக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் கட்சி, தொழில்முனைவோர்களுடன் கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மான்யதா டெக் பார்க்கில் நடைபெற்ற சந்திப்பில் ராகுல் காந்தி, அண்மை காலமாக தொழில்முனைவோர்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்படும் ஏஞ்சல் டாக்ஸ் (Angel Tax) மற்றும் ஜி.எஸ்.டி குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.
“நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏஞ்சல் டாக்சை நாங்கள் ரத்து செய்வோம்’ என்று டாக்ஸி ஃபார் சுயர் நிறுவனர் மற்றும் பிராந்திய மொழி மென்பொருள் சேவை ஸ்டார்ட் அப் வோகுல் நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா கேட்ட கேள்விக்கு ராகும் உறுதியாக பதில் அளித்தார்.
ஜி.எஸ்.டி பற்றி குறிப்பிட்ட ராகுல்,
“இதை நாங்கள் தான் முன்வைத்தோம் மற்றும் ஜி.எஸ்.டி சோதிக்கப்பட்டு, முன்னோடி திட்டங்கள் மூலம் மெல்ல அமல் செய்யப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். தற்போதைய ஜி.எஸ்.டியில் சீர்திருத்தம் கொண்டு வருவோம். இது ஒரு வரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஐந்து அடுக்குகளை கொண்டதாக உள்ளது. ஜி.எஸ்.டியை எளிமையாக்கி வரி வரம்பை குறைப்போம்,” என்று கூறினார்.
ஆளும் தே.ஜ.கூட்டணி அரசை விமர்சிக்கும் வாய்ப்பையும் அவர் தவறவிடவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பு உருவாக்கும் பற்றி பேசிய போது ஆட்சியை குறைகூறினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற புதுயுக தொழில்நுட்பங்களால் உருவாகிக் கொண்டிருக்கும் தானியங்கிமாக்கல் புதிய சவால்களை அளிக்கிறது. இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 20 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் வேண்டும். இப்போது 5 மில்லியன் வேலைவாய்ப்புகளை தான் உருவாக்கி கொண்டிருக்கிறோம். இந்த இடைவெளியை குறைப்பது எப்படி?
இந்த பிரச்சனை பற்றி பேசிய ராகுல்,
“வேலைவாய்ப்பு முனையில் அரசு மோசமாக தோல்வி அடைந்துள்ளது,” என்றார்.
“இந்த விஷயம் தொடர்பான உரையாடல்களை கவனியுங்கள். இது எப்போதும் வளர்ச்சி பற்றி தான் இருக்கிறது. நாங்கள், ஏழு சதவீதம், ஆறு சதவீதம் என வளர்ச்சி பெற்றிருக்கிறோம்., ஆனால் வாரும் இந்த காலாண்டில் இத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கி இருக்கிறோம் என பேசுவதில்லை.
வேலைவாய்ப்பு எனும் முக்கியக் காரணி பற்றி யாரும் பேசுவதில்லை. வேலைவாய்ப்பு பிரச்சனையை ஒரு பிரிவினரால் தான் தீர்க்க முடியும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் இந்த பிரிவு. இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய திறன் மையங்கள் பற்றி நாம் பேசாமல் இருப்பது இரண்டாவது பெரிய இடைவெளியாக இருக்கிறது. இவற்றை மதிப்பாக நாம் கருவதில்லை எனும் அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம் மற்றும் நம் அமைப்பை இந்த மையங்களுடன் இணைப்பதில்லை,” என்றார்.
சீனாவை உதாரணம் காட்டிய ராகுல், தொழில் வளர்ச்சியில் இந்தியாவால் சீனாவை மிஞ்ச முடியும் என்றும் கூறினார். ”சீனாவை பார்த்தால், அவர்களின் பாரம்பரிய திறனை விரிவாக்குவதில் என்ன செய்துள்ளனர் என்றால், அவற்றை தங்கள் நிதி மற்றும் உள்கட்டமைப்புடன் இணைந்துள்ளனர். நாம் ஏகபோகங்களை உடைத்து, மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லை எனில் விபரீதம் தான்,” என்றார்.
வெள்ளை நிறை பைஜாமா, பிராண்டட் ஸ்னீக்கர்ஸ் அணிந்த ராகுல், சரளமாக பேசி, சமூக தொழில்முனைவு, நகர்புற-கிராமப்புற இடைவெளி உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் மேடையில் இருந்த நாற்காலியில் அமராமல், அங்கும் இங்கும் நடந்தபடி உரையாடினார்.
ராகுல் காந்தியுடன், பிரியங் கார்கே, கிருஷ்ண பைரே கவுடா, துணை முதல்வர் பரமேச்வரா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அப்ரமேயா ராதாகிருஷ்னா, கே.கணேஷ், மீனா கணேஷ், ரவி குருராஜ் உள்ளிட்ட பெங்களூரு தொழில்முனைவோருடன்,. ராகுல் சில நிமிடங்கள் உரையாடினார்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்; சைபர்சிம்மன்