பாலியல் தொழிலாளி டு தொழில் முனைவோர்: ஒரு பெண்ணின் சர்வைவல் கதை!
லாக் டவுனின் போது மாற்றி யோசித்து சாதித்த பெண்!
முன்னாள் பாலியல் தொழிலாளியான திட்லி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), லாக்டவுனின் போது ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்க, அதை எப்படி பயன்படுத்தினார் என்பதை தனது சர்வைவல் கதையுடன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"என் பெயர் திட்லி. நான் எனது கணவர் மற்றும் இரண்டு வயது மகனுடன் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாவில் வசிக்கிறேன். என் தந்தையும் எங்களுடன் வசிக்கிறார். சில மாதங்கள் முன் ஏற்பட்ட ஆம்பன் புயலால் நிறைய பாதிப்புகளை எதிர்கொண்டோம். இந்த புயலால் வாழ்க்கை மாறிப்போனது. புயலால் எங்களின் நிலம் நாசமாகிவிட்டதால், வாழ்க்கையை நடத்த நான் வணிக ரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்தது.
இதற்குப்பின் கொரோனா தொற்றுநோய் வேறு. தொற்றுநோய் இருந்த கொஞ்சநஞ்ச வாழ்வாதாரத்தையும் இழக்க வைத்தது. அரசு கொடுத்த ரேஷன் பொருட்கள் பிழைக்க போதுமானதாக இல்லை. இதனால் மீண்டும் வாழ்க்கையை நகர்த்த நாங்கள் போராடிக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் எங்கள் யோசனையில் உதித்தது சுத்தம் செய்யும் பொருட்கள் தயாரிப்பு (cleaning products). எங்கள் கிராமத்தில் சுத்தம் செய்யும் பொருட்கள் கிடைத்தாலும், மலிவுவிலையில் அது கிடைக்கவில்லை.

மேலும், எனது சொந்த கிராமத்தில், அதற்கான தேவை அதிகமாக இருந்தது. எனவே தான் இந்த யோசனையை செயல்படுத்தி பார்க்க நினைத்தோம். என்னுடைய ஒரு மாமா ஏற்கனவே இந்தத் தொழிலில் இருந்தார், எனவே வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு பினாயில் மற்றும் திரவ சோப்பு தயாரிப்பதற்கான அடிப்படைகளை கற்க அவரை அணுகினேன். அவர் மூலமாக இதனை கற்றுக்கொண்டாலும், தொழிலைத் தொடங்க என்னிடம் பணம் இல்லை. அதனால் நான் ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உள்ளூர் சுய உதவி குழுவில் சேர்ந்தேன். அதில் எனக்கு ரூ.5,000 கடன் கிடைத்தது.
அந்தப் பணத்தில் எனக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கினேன். அப்படித் தான் இந்த தொழிலைத் தொடங்கினேன். எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம், எனது கணவரின் செல்போனில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன். தயாரிப்பு முடித்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில கடைகளை அணுக எனக்கு உதவுமாறு ஒரு உறவினரை தொடர்புகொண்டேன். சுமார் ஏழு அல்லது எட்டு கடைகள் எனது தயாரிப்புகளை வாங்க தயாராக இருந்தன. எனது கணவரும் எனது உறவினரும் நான் செய்த பொருட்களை கடையில் எடுத்துச் சென்று விற்க தொடங்கினர்.
பொருட்கள் வேகமாக விற்கப்பட்டன. மீண்டும் தயாரிப்பு தொடர்ந்தது. தேவை அதிகமாக இருந்ததால், லாக்டவுனின் போது நாங்கள் நிறைய பணம் சம்பாதித்தோம். குறுகிய காலத்தில், நான் ரூ.10,000 வருவாய் ஈட்டினேன். இன்று எனது கையில் வருமானமாக மட்டும் ரூ.5000 இருக்கிறது. கடைக்காரர்கள் ஒரு மாதக் கடனில் தயாரிப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள். என்னுடையது போன்ற குறிப்பாக இது ஒரு பெண்ணால் நடத்தப்படும் சிறு வணிகங்களை ஆதரிக்க அரசாங்க திட்டங்கள் உள்ளன என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உதவிக்காக தொகுதி மேம்பாட்டு அலுவலரை (பிடிஓ) அணுகுமாறு மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். அரசாங்கம் பெண்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடத்த வேண்டும் மற்றும் இந்த நிறுவனங்களை அமைப்பதில் ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எங்கள் தயாரிப்புகளை சந்தைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று எங்களுக்குத் தெரியாது. இதனால் எங்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக அரசுத் துறைகள் இது போன்ற தயாரிப்புகளை பெண்களாகிய எங்களிடமிருந்து வாங்கினால் நன்றாக இருக்கும்.
நான் இந்தத் தொழிலை தொடர திட்டமிட்டுள்ளேன், எனது குடும்பத்தின் முழுமையான ஆதரவு எனக்கு உள்ளது. என் கணவர் வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் கடைக்காரர்களிடமிருந்து பணம் வசூல் செய்துவிட்டு, மற்ற நாட்களில் தனது வேலையைத் தொடர்ந்துகொண்டே எனக்கு ஆதரவளிக்க முடியும். இனி என் குடும்பத்தை கவனிப்பதற்காக நான் ஒருபோதும் பாலியல் வேலைக்கு திரும்ப வேண்டியதில்லை," என்று பேசியிருக்கிறார்.
தமிழில்: மலையரசு

