உசைன் போல்ட்டை சந்தித்து கனவை நினைவாக்கிக் கொண்ட டில்லி ரிக்ஷாக்காரரின் மகன்!
உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசைன் போல்ட் அகாடமியில் பயிற்சி பெற்ற 13 இந்திய வீரர், வீராங்கனைகள், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக அதி தீவிரமாய் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து தடைகளையும், முரண்பாடுகளையும் தகர்த்தெறிவதற்கான போதுமான துணிச்சல் படைத்தோருக்கே அதிர்ஷ்டமும் சாதகமாயிருக்கிறது. அந்தவகையில், பத்துக்கு பத்து வீடு, போதுமான சத்துணவு அற்ற மூவேளை உணவு என வாழும் குடிசைப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனரின் மகன் நிசார் அஹமது, மின்னல் மகன் உசைன் போல்ட்டின் அகாடமியில் பயிற்சிப் பெற்றுள்ளார்.
தடக் தடக் ரயில் சத்தம் காதைக் கிழிக்கும் டில்லியின் ஆசாத்பூரைச் சேர்ந்த படா பாக் குடிசைப் பகுதியில், வெறும் நூறு சதுர அடி அளவுகொண்ட அறையில் வசித்து வரும் நிசார் அஹமதின் அப்பா ஆட்டோ ஓட்டுனர், அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார்.
ஷூக்களின்றி அதிவேகமாய் ஓடும் நிசாரின் திறமையைக் கண்டு, அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர், நிசாரை தடகள வீரராக்கி உள்ளார். அப்படி தொடங்கிய நிசாரின் ஓட்டப்பந்தய பயணம், இன்று டில்லியின் ஏதொரு ஒரு முக்கில் இருக்கும் அவரை உலகம் அறிய செய்ததுடன் உலகம் புகழும் 8 ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றவரான உசைன் போல்டிடம், அவர் பயிற்சி பெற்ற மைதானத்திலே பயிற்சி செய்யும் வாய்ப்பை பெற்று தந்தது.
இந்தியா முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 இளம் வீரர், வீராங்கனைகள், ஜமைக்காவில் உள்ள ரேசர்ஸ் ட்ராக் கிளப்பில் பயிற்சி பெற்றனர். Gas Authority of India Limited மற்றும் விளையாட்டு மேம்பாடு நிறுவனமான Anglian Medal Hunt
கம்பெனியும் இணைந்து, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்ளை குவிக்கவேண்டும் என்ற தனிப்பட்ட முன்முயற்சியில்,
இந்தியா முழுவதுமுள்ள 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளின் திறனாய்ந்து அவர்களில் 13 வீரர்,வீராங்கனைகளை 8 ஒலிம்பிக் பதக்கங்களை தன்வசம்படுத்திய தடகளத்தின் ராஜா உசைன் போல்டிடம் பயிற்சி பெற வைத்துள்ளது.
பன்னிருவருள் ஒருவரான, நிசார் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணமாய் அமைந்தது, கடந்த இரு ஆண்டுகளில் அவர் முறியடித்த இரு தேசியசாதனைகள்.
2017ம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற, தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 100மீ ஓட்டப்பந்தயப் போட்டியை 10.85 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்துடன், பழைய தேசிய சாதனையையும் முறியடித்தார்.
தொடர்ச்சியாய், கடந்தாண்டு ஜனவரி மாதம், இந்திய விளையாட்டு சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘முதல் கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ எனும் தேசிய விளையாட்டு போட்டியில் 2வது முறையாக, தேசிய சாதனை படைத்தார்.
உசைன் போல்டினை வாழ்வில் ஒரு முறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்பது உலகம் முழுவதுள்ள அனைத்து தடகள வீரர்களின் சராசரி கனவு. இந்நிலையில், உசைனிடம் பயிற்சி மேற்கொண்டு அக்கனவை இன்னும் சிறப்பாய் நிறைவேற்றியுள்ள நிசார், அதுப்பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில்,
“உசைன் போல்ட்டை சந்தித்தது கனவு நினைவான தருணம். அவரை பார்த்தது, அவரிடமிருந்து டிப்ஸ் பெற்று கொண்டது, போட்டோ எடுத்தது அனைத்தும் என்னை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்துவதற்குத் தேவையான காரணிகளாக இருந்தன. ஜமைக்காவில் உள்ள பயிற்சி முறைகள் இந்தியாவில் நாம் மேற்கொள்ளும் பயிற்சி முறைகளில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டது. உசைனிடமிருந்து என்னுடைய ஸ்பைக்ஸ் ஷூவில் ஆட்டோகிராப் வாங்கினேன். கடினமாக உழைக்கவேண்டும், எதிர்கால இலக்கை அடைய வேண்டும் என்று எனக்கது உணர்த்தி கொண்டேயிருக்கும்,” என்றார்.
கடைசியாய், உசைன் தன்னிடம் கூறியதை தெரிவித்து முடித்தார் நிசார்.
''Agility, Balance & Co-ordination of sprinting is key to success''.
தகவல் உதவி : மிட் டே & ஹிந்துஸ்தான் டைம்ஸ் | கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ