'தன் மகனை சான்றோன் எனக் கேட்டத் தாய்' - பெற்றோருக்கு பெருமை தேடித்தந்த சோனு சூட்!
தன் பெற்றோருக்கு மகன் சோனு சூட் அழியா புகழைத் தேடித்தந்துள்ளார்!
பெற்றோரின் வளர்ப்பு முறையும், அந்த குழந்தை பெறும் அனுபவமும் தான் அவனை ஆளுமையாக வளர்த்தெடுக்கிறது. சோனு சூட் என்ற ஒருவர் இன்று இவ்வளவு பெரிய ஆளாக இருப்பதற்குக் காரணம் அந்த பெற்றோர் வளர்ப்பு தான். அப்படி தன்னை நல்ல மனிதனாக வளர்த்தெடுத்த தன் பெற்றோருக்கு மகன் சோனு சூட் இன்று அழியா புகழைத் தேடித்தந்துள்ளார்.
ஆம்! சோனு சூடின் சொந்த ஊரில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது தாயார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அவர்.
இளமைக்காலங்களில் சோனு சூட் நாக்பூரில் வளர்ந்தாலும், அவர் பிறந்து, பள்ளிபடிப்பை முடித்தது என்னவோ, பஞ்சாபில் இருக்கும் மோகா நகரம் தான். அவரது தந்தை பாம்பே க்ளாத் ஹவுஸ் என்ற கடையை மோகா நகரில் நடத்தி வந்தார். அவரது தாய் கல்லூரி பேராசியராக பணியாற்றினார்.

பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வரும் சோனுசூட், அண்மையில் உலகையை ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது, விவசாயிக்கு தனது சொந்த செலவில் டிராக்டர் வாங்கி கொடுத்தது, நலிவடைந்தவர்களுக்கு தொழில் உதவி செய்தது உள்ளிட்ட செயல்களால் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
கடினமான காலங்களில் தான் நல் உள்ளங்களை அடையாளம் காணமுடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த சோனு சூடுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபித்த ஆதரவு பெருகியது.
சமீபத்தில் பொதுமக்கள் சார்பில் அவருக்கு சிலை திறக்கப்பட்டது. அதேபோல, தனது ரசிகர் தொடங்கிய சாலையோர உணவகத்து விசிட் அடித்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். இப்படி தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த சோனுசூட்டின் சொந்த ஊரான மோகாவில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது தாயார் பெயரை சூட்டி கௌரவித்துள்ளார் அப்பகுதி எம்.எல்.ஏ.

இந்த பெருமைமிகு தருணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,
"இந்த காட்சியைத்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் கனவாகக் கண்டுகொண்டிருந்தேன். எனது சொந்த ஊரான மோகாவில் உள்ள சாலை ஒன்றுக்கு மறைந்த எனது தாயார் பெயர் : (“Prof. Saroj Sood Road”) சூட்டபட்டுள்ளது. அதே சாலையில் தான் என் தாயார் தனது வாழ்நாள் முழுவதும், கல்லூரிக்கும் வீட்டுக்குமாக நடந்து சென்றார்.”
எனது தந்தையும், தாயும் சொர்க்கத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு இதனை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என உறுதியாகக் கூறுவேன். அவர்கள் இதை காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய திரு.ஹர்ஜோத் கமல், திரு.சந்தீப் ஹான்ஸ் மற்றும் திருமதி.அனிதா தர்ஷி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம் “பேராசிரியர்.சரோஜ் சூத் சாலை, என்று பெருமையுடன் சொல்லவேன்,” என்று அவர் எழுதியுள்ளார்.
ஒருமுறை அவர் இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்த பேட்டியில்,
"என் அம்மா குழந்தைகளுக்கு இலவசமாக பாடங்களை சொல்லிக் கொடுப்பார். என் அப்பா தனது கடைக்கு வெளியே உணவுகளை வழங்குவார். பஞ்சாபில் என் பெற்றோர்களுக்கான அதே மதிப்புகளுடன் நானும் வளர்க்கப்பட்டேன்,” என்றார்.
என் அம்மா அடிக்கடி இப்படிச் சொல்வார் 'நீங்கள் யாருக்கும் உதவ முடியாவிட்டால், உங்களை வெற்றிகரமான ஒருத்தராக கருத வேண்டாம்'. எனது பெற்றோர் என்னுள் பதித்த மதிப்புகள் தான் நான் இன்று மற்றவர்களுக்கு உதவக் காரணமாக அமைந்தது,” என்று தெரிவித்திருந்தார்.
தொகுப்பு: மலையரசு

